றுதிக்கட்ட தேர்தல் வியூகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பைக் காட்டிவருகின்றன. தேர்தல் பறக்கும் படையினரின் கழுகுக் கண்களையும் மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதும் ரகசியமாகத் தொடங்கிவிட்டன. இதனால் பல தொகுதிகளிலும் நள்ளிரவைக் கடந்த பிறகு வீடுகளின் கதவுகள் தட்டப்படுகிறது.

இந்தத் தேர்தலை வலிமையான கூட்டணியுடன் தி.மு.க. எதிர்கொண்டாலும் தனது தோழமைக் கட்சிகளை தூக்கிச் சுமக்கும் மிகக்கடினமான சுமையை தாங்கியபடி தேர்தல் களத்தில் கடந்த 25 நாட்களாக சுற்றி வந்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

ss

தேர்தல் பிரச்சாரத்தையும் தாண்டி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரத்தையும் தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களுடன் ஸ்டாலின் விவாதித்த படி இருந்தார். சபரீசன் தலைமையில் இயங்கும் பென் நிறுவனமும், மாநில உளவுத்துறையும், அறிவாலயத்திலுள்ள வார் ரூம் ஜாம்பவான்களும் தனது கவனத்துக்கு கொண்டுவரும் தேர்தல் பஞ்சாயத்துகளை உடனுக்குடன் சரிசெய்வதிலும் தீவிரம் காட்டினார் ஸ்டாலின். இதனால் ஒருநாளைக்கு அவர் உறங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் 4 மணி நேரம்தான்.

Advertisment

தி.மு.க.வில் சீட் கிடைக்காத வர்களின் அதிருப் திகள், கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க.வுக்குமிடையே நடக்கும் உள்குத்துகள், ஒத்துழையாமை விவகாரம் போன்றவை களால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், பொறுப்பு அமைச்சர்களிடமும், மா.செ.க்களிடமும் தனது கடுமை யான முகத்தை காட்டினார். அவரின் எச்சரிக்கை தொகுதிகளில் எதிரொலித்தது. உள்குத்து, உள்ளடிகளை மறந்து களப்பணியில் சுறுசுறுப்பைக் காட்டியது தி.மு.க.

இந்த நிலையில், இறுதிக்கட்ட கள நிலவரத்தை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "40 இடங்களையும் தி.மு.க. தான் கைப்பற்றுகிறது என கள நிலவரம் சொன்னாலும், இந்த தேர்தலில் களத்தை கணிப்பதில் சிரமம் இருக்கவே செய்கிறது. மக்களின் எண்ணங்கள் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுவதால் தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கிறது.

குறிப்பாக, தொகுதிவாசிகளின் மனநிலை ஒரே மாதிரியாக இல்லை. நாங்கள் விசாரிக்கும்போது ஒரு பதிலையும், மறுநாள் வேறு ஒரு டீம் விசாரிக்கும்போது முதல்நாள் சொன்ன பதிலுக்கு மாற்றாக வேறு ஒரு பதிலையும் சொல் கிறார்கள். மக்களின் மனநிலையில் நாளுக்கு நாள் மாற்றம் தெரிவதால் ஒருவித மௌனப் புரட்சி நிலவுவதாக கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது''’என்கிறார்கள் உளவுத்துறையினர்.

Advertisment

இந்த முறை தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி மட்டுமே களத்தில் வலிமையாக இருக்கிறது. தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தாலும் அக்கட்சி 33 இடங்களில் போட்டி யிடுவதால் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே கணிக் கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதேசமயம், வட தமிழகத்தில் செல்வாக் குள்ள பா.ம.க.வை உள்ளடக்கி பா.ஜ.க. தலைமையில் ஒரு அணி கட்டமைக்கப்பட்டிருப் பது மூன்றாவது அணியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஆளும் கட்சிக்கான அதிருப்தி வாக்குகள் எந்தப்பக்கம் சாயும் என்பதில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருக்கிறதா என்பதுதான்.

இதுகுறித்து அலசும் தேர்தல் வியூக வகுப்பாளர் களிடம் பேசும்போது, "பொதுவாக, எந்த ஒரு ஆளும்கட்சியாக இருந்தாலும் ஓரிரு வருடங்கள் கடந்து தேர்தல் வருகிறபோது ஆளும் கட்சிக்கான அதிருப்திகள் இருக்கவே செய்யும். குறிப்பாக, ஒரு பொதுத்தேர்தலை எதிர் கொள்ளும்போது இது தவிர்க்க முடியாதது. அதனால், மூன்றாவது அணி ஒன்றை ஆளும்கட்சி கட்டமைக்கும். காரணம், ஆளும்கட்சிக்கான எதிர்ப்பு வாக்குகள், வலிமையான வாக்கு வங்கி வைத்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான்.

இந்த கால்குலேசன்படிதான் கடந்த 2016-ல் மக்கள் நல கூட்டணியை கட்டமைத்து களத்தில் இறக்கினார் ஜெயலலிதா. அந்த தேர்தலில், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைக்காமல் மக்கள் நல கூட்டணிக்குப் போனது. தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் ஜெயலலிதா.

ss

அந்த வகையில் இந்த தேர்தலில், எந்த ஒரு மூன்றாவது அணியையும் ஆளும் கட்சியான தி.மு.க. உருவாக்கவில்லை. மாறாக தனது கூட்டணியை மட்டுமே பலப்படுத்திக்கொண்டது. ஆனாலும், பா.ம.க.வை சேர்த்துக்கொண்டு பா.ஜ.க. தலைமையில் உருவான அணியை மூன்றாவது அணியாகத்தான் பார்க்க முடிகிறது. அப்படி யானால், தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் இந்த மூன்றாவது அணிக்கு கிடைக்குமா? என்றால், வாய்ப்பில்லை.

மாறாக, அதிருப்தி வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விடம் குவியாமல், அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி என மூன்று பக்கங்களுக்கும் சிதறுகின்றன. இதனால் 100 சதவீத வெற்றி தி.மு.க.வுக்கு கிடைக்கும். இதில் ஒரே ஒரு சிக்கல் என்னவெனில், கூட்டணி கட்சிகளை ஜெயிக்க வைக்கவேண்டிய மிகப்பெரிய சுமை தி.மு.க.வுக்கு இருப்பதால், கூட்டணிக்கட்சியை ஜெயிக்க வைப்பதில் எதிர்க்கட்சிகளிடம் தி.மு.க.வினர் சமரசமாகி உள்ளடிகளை செய்துவிடக்கூடாது என்பதுதான்.

அதேபோல, இந்த தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நேரடியாக 19 தொகுதிகளில் மோதுகிறது. இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து பா.ஜ.க. கூட்டணியில் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அதிருப்தி வாக்குகள் இடமாறும்.

உதாரணமாக, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. போட்டியிட்டால் ஒருவிதமாகவும், பா.ம.க. போட்டியிட்டால் ஒருவிதமாகவும், த.மா.கா. போட்டியிட்டால் ஒருவிதமாகவும் அதிருப்தி வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, எதிர்த்துப் போட்டியிடுகிற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு சம்மந்தப்பட்ட தொகுதியில் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதிருப்தி வாக்குகள் இடமாறும். அதனால், 40 இடங்களையும் தி.மு.க. கூட்டணி வெல்வது அவ்வளவு சுலபமில்லை. இதையெல்லாம் ஆராய்ந்துதான் தேர்தலின் இறுதிக்கட்டப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது''’என்கிறார்கள்.

இதற்கிடையே, தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத கோபத்திலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு என்பதும், முதல்முறையாக வாக்களிக்கும் 18-19 வயதுள்ள 11 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் 20-29 வயதுள்ள 1 கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகள் எந்த பக்கம் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் பணிகளில் உள்ள தமிழக அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, ‘’தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக போட முடியும். வாக்களிப்பதற்கான படிவம் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிடும். அந்த படிவத்தை அவர்களின் வீட்டுக்கே சென்று அரசியல் கட்சியினர் வாங்கிக் கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைப்பர். அதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு என்பது சம்மந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரியும்.

ஆனால், இந்த தேர்தலில் புதிய நடைமுறை அமல்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, வாக்குப்பதிவின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். அப்போதே அவர்கள் தங்களின் தபால் வாக்குகளை படிவத்தில் பதிவு செய்து சீலிடப்பட்ட கவரை ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அரசு ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவு தி.மு.க.வுக்கு இருக்கும் நிலையில், இந்த உத்தரவு தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த உத்தரவின்படி, கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில் அரசு ஊழியர்கள் தங்களின் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். விடுபட்டவர்கள் 16-ந் தேதி பதிவு செய்யலாம். தமிழகம் முழுவதும் இப்படி பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளின் பெட்டிகள் திருச்சிக்கு 17-ந் தேதி கொண்டுவரப்படு கிறது.

அங்கு எந்தெந்த தொகுதிகளுக்கான வாக்குகள் என்பதை தனியாகப் பிரித்து, அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தொகுதி அடங்கியுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த சீலிடப்பட்ட தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகளை தேர்தல் அதிகாரி பாதுகாத்து வருவார். வாக்கு எண்ணிக்கையின்போது (ஜூன் 4-ந் தேதி ) அந்த பெட்டிகள், சம்மந்தப்பட்ட தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைப்பார் தேர்தல் அதிகாரி.

தபால் வாக்கு பதிவுப் படிவங்களை இந்தமுறை அரசு ஊழியர்களிடம் நேரடியாக தி.மு.க. வாங்க முடியாததும், பயிற்சி வகுப்பின் போது நேரடியாக அதிகாரிகளிடம் அரசு ஊழியர்களே ஒப்படைத்ததும் தி.மு.க.வுக்கு சற்று கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், தபால் வாக்குகள் கடந்தமுறை பலரின் வெற்றி தோல்வியை தீர்மானித்ததுதான். அதனால் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை தி.மு.க.வினரால் 100 சதவீதம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை''” என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சிக்கல்களும் இந்த தேர்தலில் எதிரொலிப்பதால் தேர்தல் களம் சில எதிர்பாராத முடிவுகளைக் கொடுக்கலாம் என்பதையும் உணர்த்துகிறது தமிழக அரசியல்!