நடைபெற்றுவரும் 18-வது பாராளு மன்றத் தேர்தலில் முதல்கட்டத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மிக மோசமான, மதத் துவேசத்தை வெளிப்படுத்தும்படி பரப்புரை மேற் கொண்டிருப்பதாக, மோடியின் பேச்சுக்கு நாடு முழுவதுமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கும் மோடியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீமிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பும் விதமாக மோடி அப்படியென்ன பேசினார்?
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் என்றும், இந்து பெண்களிடம் உள்ள தங்கம், வெள்ளி, பெண்களின் தாலியில் உள்ள தங்கம் உட்பட அனைத்து சொத்துக்களும் பறிக்கப்பட்டு, அவை அனைத்தும் அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகமான இஸ்லாமிய சமூகத்திடம் கொடுக்கப்படும் என அபாண்டமான ஒரு பொய்யை, இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் செய்யத் துணியாத மத வெறுப்புப் பிரச்சாரத்தை மோடி முன்னெடுத்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, இந்து மக்களுக்கு விரோத மாகவும், சிறுபான்மை மக்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டில் உள்ள சொத்தில் இஸ்லாமியர் களுக்கே முதல் அதிகாரம் உள்ளது எனக்கூறியதாகக் குறிப்பிட்ட மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துக்களைப் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறிவிட்டு, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல் காரர்களுக்கு போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பிய மோடி, ஒரு பெண்ணின் தாலியைப் பறிப்பதற்கு காங்கிரஸுக்கு மட்டுமல்ல எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது எனப் பேசியிருந்தார்.
மோடி பேசிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று எப்படி சொல்கிறீர்கள்?
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் அதிவேகமான வளர்ச்சி என்கிற தலைப்பிலான மாநாட்டில், நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம் களுக்கே முன்னுரிமை என்று பேசியதாக மோடி குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், வேலைவாய்ப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள் ளிட்டவைகள் குறித்து பேசியபோது, 'நமது முன்னுரிமைகள் தெளிவாக உள்ளதாக நான் நம்புகிறேன். நமது உள்கட்டமைப்பு வளர்ச்சி யோடு பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே நமது வளர்ச்சியின் உண்மையான இடத்தை நாம் வேகமாக அடைய முடியும். மேலும், சிறுபான்மை மக்களும் வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது' என்றுதான் பேசியிருக்கிறார்.
மன்மோகன்சிங்கின் பேச்சில், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற் றம் பற்றிதான் அந்த மாநாட்டில் குறிப்பிட்டி ருக்கிறார். ஆனால் மோடி இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே காங்கிரஸ் முன்னுரிமை கொடுப்பதாகவும், இந்துக்களின் சொத்தைப் பறித்து இஸ்லாமியர்களின் வசம் கொடுப்பது மட்டுமே காங்கிரஸின் திட்ட மென்றும், மன்மோகன்சிங் பேசியதையே திரித்து பொய்யாகப் பேசியிருப்பது, மிகமோசமான மத வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்று இந்திய முஸ்லீம் சமூகத்தை கேவலமாகச் சாடியிருக்கிறார் மோடி. ஆனால், 1951 முதல் 2011 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால், முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிற சமூக மக்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் வளர்ச்சி குறைவாக உள்ளது என்பதை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக் குறியீட்டு அட்டவணையைப் பார்த்தாலே நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியிருக்கையில், பிரதமர் மோடியின் பேச்சை ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்புப்பேச்சு என்பதாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென இஸ்லாமிய சமூகத்தின்மீது மிக மோசமான குற்றச்சாட்டை பிரதமர் மோடி வைப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற 102 தொகுதிகளுக்கான முதல்கட்டத் தேர்தலில், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. 2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்த 102 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 41 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இம்முறை மிகக்குறைவான தொகுதிகளே பா.ஜ.க.வுக்கு கிடைக்குமென்று கருத்துக்கணிப்பு கள் வந்திருக்கின்றன. எனவே அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை பா.ஜ.க.வுக்கு சாதகமாக்கத் தனது பிரச்சார உத்தியை, பொய்யான தகவல் களுடன்கூடிய மிகமோசமான, கடுமையான மதவாத அரசியல் பிரச்சாரமாக மாற்றியிருப்பதாக வரும் செய்திகளை மறுக்க முடியவில்லை.
-தொகுப்பு: ஆதவன்