தோட்டத்திலிருந்த மது பாட்டிலைப் பார்த்து சபலப்பட்டு திறந்து குடித்த விவசாயி சில மணி நேரத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் புதுக் கோட்டையில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குமுன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விவசாயிகள் இறந்துள்ளதால் இப் பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை தனது தோட்டத்தில் கடலைச் செடிகள் பறிக்கப்படுவதால் தனது அண்ணன் மகன் குமாருடன் தோட்டத்திற்குச் சென்று பார்த்தவர், அங்கு நிழலுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தனது கொட்டகையில் இரு மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில், சிப்ஸ், கடலை போன்றவை இருப்பதைப் பார்த்து சபலப்பட்டுள்ளார். அந்த பாட்டில்கள் திறக்கப்படாமல் புதிதாக இருந்ததால் தனது மகன் அருண்பாண்டியனிடம் சொல்லி வீட்டிற்கு எடுத்துவரச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அதில் ஒரு பாட்டிலை அண் ணன் மகன் குமாரிடம் கொடுத்தவர் ஒரு மது பாட்டிலை இரவு 8 மணிக்கு வீட்டில்வைத்து திறந்து பாதியைக் குடித்துள்ளார். சற்று நேரத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கியவர், ""மதுவில் ஏதோ விஷம் கலந்திருப்பதுபோல உள்ளது. மற்றொரு பாட்டிலை குமாரை குடிக்கவேண்டாம்னு சொல்லுங்க'' என்றும் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு போங்க என்றும் சொல்லியிருக்கிறார். அதுதான் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள்.
அவரது குடும்பத்தினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் என்ன விஷம் என்று தெரியவில்லையென புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுபோகச் சொன்னார்கள். அங்கே போகும்போது செல்வராஜ் இறந்திருந்தார்.
செல்வராஜ் மகன் அருண்பாண்டியன், ""தோட்டத்திலிருந்து எடுத்துவந்த மதுவைக் குடித்த சில நிமிடங்களில் வாந்தி எடுக்கத் தொடங்கிட்டார். நெஞ்சை எரியுது என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கன்னு சொன்னார். யார் விஷம் வைத்தது... எதற்காக விஷம் கலந்து வைத்தார்கள் என்று தெரியல'' என்று கண்களை துடைத்துக்கொண்டார்.
புதுக்கோட்டை மருத்துவக்கல் லூரி மருத்துவமனை மார்ச்சுவரி அருகில் நின்று கொண்டிருந்தகுமார்... ""தோட்டத்திலிருந்த 2 பாட்டில்களும் விலையுயர்ந்த சரக்குகள். இரண்டும் திறக்கப்படாமல் இருந்தது. மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சோதனை செய்யக் கொடுத்திருக்கிறோம். சித்தப்பா இறந்ததும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத் திருக்கிறோம்'' என்றார் சோகமாக.
துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த அலஞ்சிரங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை, ""4 வருசத்துக்கு முன்பு எங்க அப்பா சிங்காரம் தோட்டத்தில் கொட்டகையிலிருந்த மதுபாட்டிலை எடுத்து பாதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் மீதி பாட்டிலை வீட்டில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வயசானதால இறந்திருப்பார்னு நினைத்தோம். மறுநாள் மிச்சமிருந்த மதுவை எடுத்து அண்ணன் தங்கராஜ் குடித்துவிட சிறிது நேரத்தில் அவரும் துடிதுடித்து இறந்துவிட்டார். அதே காலகட்டத்தில் குளமங்கலம் தெற்கு துப்பாக்கி துரைச்சாமியும் இதே போல தோட்டத்திலிருந்த மதுபாட்டிலை எடுத்து குடித்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இப்படி மது பாட்டிலில் விஷம்கலந்து விவசாயிகளுக்கு வைக்கும் மர்ம நபர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எதற்காக விஷம் வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை'' என்றார் இழப்பின் வலியோடு.
பாட்டில் மூடியைத் திறக்காமல், சிரிஞ்ச் மூலம் துளையிட்டு விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த புகார் குறித்து விசாரணை செய்துவரும் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.. ""மதுவில் கலக்கப்பட்ட விஷம் என்ன என்பது குறித்து சோதிக்க லேப்புக்கு அனுப்பியிருக்கிறோம். செல்வராசுவுடன் ஏற்கனவே பிரச்சனை செய்தவர்கள், அவருக்கு வேண்டாதவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்திவருகிறோம். நிச்சயம் கொலையாளிகளை பிடிப்போம்'' என்றார் நம்பிக்கையாக.
-இரா.பகத்சிங்