""விவசாயி என்றால் உழைப்பாளி! விவசாயி என்பவர் யாரையும் எதிர்பாராமல் சொந்தக்காலில் நிற்பவர். இந்தியாவில் தமிழகத்தில்தான் பயிர் இழப்பீடு அதிகம் வழங்கப்பட்டது. அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோள பயிர்களில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யாரிடமும் கேட்காமல் நிவாரணம் வழங்கப்பட்டது'' என மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாளரான தமிழக முதல்வர் எடப்பாடி, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வில்லிசேரியில் விவசாயியின் அருமைபெருமைகளை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.

farmers

""அங்கிருந்து சற்றே தொலைவிலுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில், அதற்கு முந்தைய நாள்தான், விவசாயம் பொய்த்து, அதற்காக காப்பீடு செய்திருந்தநிலையிலும் சொற்ப தொகை மட்டுமே காப்பீடாக வழங்கப்பட்ட நிலையில் மனம்நொந்து தூக்கில் தொங்கியிருந்தார் நாராயணசாமி. முதல்வரின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாராயணசாமியின் மரணம் விவகாரமாகிவிடக்கூடாது என்பதற்காகவும், ஊடகக் கவனத்தை ஈர்த்துவிடக்கூடாதெனவும் காவல்துறை காட்டிய அக்கறை... அப்பப்பா'' என்கிறார்கள் பிள்ளையார்நத்தத்துக்காரர்கள்.

கோவில்பட்டியிலிருந்து கலிங்கப்பட்டிக்குச் செல்லும் வழியிலுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்திலுள்ள தன்னுடைய வயலுக்கு, வழக்கம்போல் அதிகாலையிலேயே தனது மகள் வீட்டிலிருந்து சென்றிருக்கின்றார் நாராயணசாமி. அங்கு சென்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கிருந்த மோட்டார் ரூம் சுவரில், ""மித்ரா என்னை மன்னித்துவிடு'' என பேத்தி மித்ராவிடம் மட்டும் மன்னிப்புக் கேட்டு அருகிலிருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

""மக்காச்சோளமும், உளுந்தும் விதைக்கப் பட்ட அந்த நிலத்தில் உளுந்து பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலும் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலும் ஏற்பட்டு சிறிது சிறிதாக அதிகரித்து பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பயிர்க் காப்பீடு தொகையோ வெறும் 500 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவாகி இருந்ததால் கடந்த இரண்டு நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்'' என அருகிலிருந்த விவசாயிகள் தொடங்கி உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.

""நாராயணசாமி ராஜபாளையத்திலுள்ள மில்லில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். கடந்த இரண்டு வருஷமாக இந்த நிலத்தை வாங்கி விவசாயம் செய்துவந்தார். விவசாயத்தினை மிகவும் நேசித்த அவர் விவசாயப் பணிகளுக்காக தினசரி 11 கி.மீ. தூரம் பயணிப்பது வழக்கமான ஒன்று. கடந்த வருடத்தில் மக்காச்சோள விவசாயம் ஓரளவு கைகொடுக்க, இந்த வருடத்தில் மக்காச்சோளத்துடன் உளுந்தையும் விதைத்திருக்கிறார். பூச்சி தாக்கம் காரணமாக மக்காச்சோளமும், உளுந்தும் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர்க்காப்பீடு தொகை கை கொடுக்கும் என எதிர்பார்த்திருந்தார். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.500 மட்டும் வரவே மனமுடைந்து இந்த முடிவை எடுத்துவிட்டார்.

farmer

Advertisment

விவசாயியோட உயிரின் மதிப்பு வெறும் ரூ.500தானா..? காப்பீடு செய்தால் இரு தரப்புக்கும் ஆதாயமிருக்கவேண்டும். இன்ஷுரன்ஸ் கம்பெனிகளின் பை மட்டும் நிறைவதால், விவசாயிகளுக்கு என்ன ஆதாயம்? இந்த காப்பீட்டுத் தொகையை அதிகரிக்காவிடில் இன்னும் நிறைய தற்கொலைகள் நடக்கும்'' என்கின்றனர் தற்கொலை செய்துகொண்டவரின் உறவினர்களான முனியசாமியும், ராமச்சந்திரனும்.

வெற்றி நடைபோடும் தமிழகத்திற்காக சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சனிக்கிழமை இரவில் கோவில்பட்டியிலுள்ள தனியார் மாளிகையில் தங்கியிருந்தார். மறுநாள் காலை முதல் நிகழ்ச்சி நிரல்படி பயணங்கள் இருக்க, முன்னதாக அவசர அவசரமாக, தற்கொலை செய்துகொண்ட நாராயணசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர் நாலாட்டின்புதூர் போலீசார்.

இதேவேளையில், மாவட்ட தனிப்பிரிவுடன் இணைந்த மாநில உளவுப் பிரிவுப் போலீசார் முதற்கட்டமாக, காலை 10:00 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட உடலை பிரேதப் பரிசோதனை முடித்து மதியம் 3:00 மணிக்கே ஒப்படைத்தனர். தவிரவும் அவர்களது குடும்பத்தினரை வலியுறுத்தி உடனடியாக அடக்கம் செய்யவும் வைத்தனர். நாராயணசாமியின் தற்கொலை விவகாரம் விவசாயிகள் மத்தியில் அதிகம் தெரியாதவாறு கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.

அனைவரின் சோகமும் அழுத்தமாக மறைக்கப்பட்ட ஞாயிறன்றுதான், வில்லிச்சேரியில் எதுவுமே நடக்காததுபோல், ""விவசாயி என்றால் உழைப்பாளி'' என முதல் பத்தியில் இடம்பெற்ற வசனத்தை, தேர்ந்த நடிகர்போல ஒரே டேக்கில் பேசிக்காட்டி கைத்தட்டலை வாங்கிக் குவித்தார் எடப்பாடி.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்