அமெரிக்காவில் பரிசோதனைகள் முடித்து திரும்பிய ரஜினி, உடலாலும் மனதாலும் உற்சாகமடைந்த நிலையில், "அண்ணாத்தே' படத்தில் இறுதிக்கட்டப் பணிகள், புதுப்பட கமிட்மெண்ட் என விறுவிறுப்பாகிவிட்டார். தனது மன்றத்தினரையும் சந்தித்துவிட வேண்டும் என அவர் எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. அரசியலுக்கு ரஜினி வரவில்லை என தேர்தலுக்கு முன் அறிவித்த நிலையில், அவர் பெயரிலான மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் என்ன என்ற கேள்வி இருந்தது. சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்றனர். கிருஷ்ணகிரி மா.செ சீனுவாசன் தலைமையில் 10 மா.செக்கள் கட்சி மாற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனை அவர்கள் தரப்பில் மறுத்தனர். இருப்பினும், நிர்வாகிகள் குறித்த செய்திகள் வந்தபடியே இருந்ததாலும், ரசிகர்களிடம் ஒரு சோர்வு இருந்ததாலும், அவர்களை நேரில் சந்தித்து ஒரு முடிவெடுக்கலாம் என ரஜினி தீர்மானித்தார்.
இதன்படி, ஜூலை 12 அன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்த ரஜினி, தனது மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, அதே நிர்வாகிகளுடன் பழையபடி ரஜினி ரசிகர் மன்றமாக செயல்பட்டு, மக்கள் நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்க, அதனை நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.
மன்ற நிர்வாகிகள், ரசிகர்களின் குடும்பத்தினரை மாவட்டவாரி யாக சந்தித்து போட்டோ எடுக்கும் எண்ணமும் ரஜினிக்கு உள்ளதாம்.
________________________
அடுத்தென்ன? அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதம்!
காவிரியில் மேகதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு அடம்பிடிக்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மோடியிடம் பேசினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் விவாதித்த பின்பும் கர்நாடக அரசு பிடிவாதம் காட்டிவருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க ஜூன் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. 13 கட்சிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அடுத்தகட்டமாக தமிழகம் எத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதென விவாதிக்கப்பட்டது.
-கீரன்