அரசுத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் பலரும், தமிழ்வழியில் பயின்றவர்களுக்குக் கிடைக்கும் 20% இடஒதுக்கீட்டுக் காக போலிச் சான்றி தழ்கள் தந்து தேர்ச்சி பெறுவதாக புகார் கிளம்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சக்திராவ். டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், அதன்பின் நடக்கும் பிரதான எழுத்துத் தேர்விலும் முதல்நிலையில் வந்தார். நேர்முகத் தேர்வில் சிறப்பாகத் தேர்வாகியும் தேர்வானவர்கள் பட்டியலில் தன் பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களின் பட்டியலில் யார் யாரெல்லாம் தமிழ்வழியில் பயின்று அரசின் 20% இடஒதுக்கீட்டில் தேர்வாகினர் என்ற லிஸ்ட்டை எடுத்தார். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை அறிந்தவர், "மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் போலியாக தமிழ்வழியில் பயின்றதாக சான்றிதழ் பெற்றுள்ளனர். அதை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழ்வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து குரூப் 1 தேர்வு மூலம் அரசு உயர்பணியில் சேர்ந்தவர்கள் மீது, குற்ற வழக்கு பதிந்து நட வடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார், போலி ஆவணங்கள் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, டி.எஸ்.பி. சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி ஆகியோர் 2012 முதல் 2019 ஆண்டு வரை தொலைதூரக் கல்வி முலம் தமிழ்வழிக் கல்வியில் பயின்றதாக போலியான பட்டம் பெற்றதும், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முலம் அரசுப் பணிக்கு தேர்வாகி பணியாற்றிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ. சங்கீதா மீதும் லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. உடந்தையாக இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
வக்கீல் சக்திராவ் நம்மிடம், "மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன். கடந்த 2020-ல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 1 தேர்வில் பங்கேற்றேன். தமிழ்வழிக் கல்வியில் படித்தோருக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப் பட்டும், எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
எனவே, கல்லூரிக்குச் சென்று முழுநேரமாக தமிழ்வழியில் பயின்றவர்களை தேர்வுசெய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்ணயிக்கப் பட்ட முழு கல்வித்தகுதியையும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தர விட்டது. ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமல் இருந்தநிலையில், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுவில் கோரியிருந்தேன்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வில் அக்டோபர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் குரூப் 1 தேர்வுக்காக நான்கு பேர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு உயர்பதவியில் சேர்ந்துள் ளார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி.க்கு பரிந்துரை அனுப்பப் பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "போலிச் சான்றிதழ் மூலம் அரசு உயர் பதவிகளுக்கு வருவோர், லஞ்சம் வாங்காமல் வேறென்ன செய்வார்கள்? இந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்வார்களா? இந்த சம்பவங்களால் இரவு, பகலாக அரசுத் தேர்வை நம்பி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்? இந்த வழக்கில் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு பதவி வகிப்போர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பான நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் தாமதிக்காமல் மேற்கொள்ளவேண்டும்' என்று கடுமையாகக் கூறினர்'' என்றவர்,
"போலீஸார் இந்த வழக்கில் வேண்டுமென்றே வலுவான பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். போட வில்லை. தமிழ்நாடு முழுவது முள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இதேபோல் முறைகேடுகள் நடந்திருக்கும். தமிழ்வழியில் படித்து அனைத்திலும் தேர்வாகியும், இடஒதுக்கீட்டுக்கு தகுதியில் லாதவர்கள் என் வேலையைத் தட்டிப்பறிப்பது என்ன நியாயம்?'' என்றார் வேதனையுடன்
மதுரை காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர் முரளி, "இது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. 2017-ல் இதேபோன்று புகார் தெரிவிக்கப்பட்டு அப்போதைய அரசு நீதிபதி அக்பர் அலி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
முழுமையாக விசாரணை நடத்தியபிறகு 500 நபர்களுக்கு போலிச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5,058 பேருக்கு போலி முகவரியில் அட்மிஷன் போடப் பட்டுள்ளது தெரியவருகிறது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கில் அரசு என்ன செய்யப்போகிறதோ?'' என்றார்.