"ஹலோ தலைவரே, தேர்தல் பரபரப்புக்கு நடுவே ஒரு மூத்த அரசியல் தலைவரைத் தமிழகம் இழந்திருக்கு.''”
"ஆமாம்பா, மரியாதைக்குரிய முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீ., தன் 98ஆம் வயதில் இயற்கையோடு கலந்திருக்காரேப்பா.''”
"தலைவரே அரசியல், சினிமா, இலக்கியம்னு பன்முக ஆளுமை கொண்டவர் வீரப்பன். பெரியார் மீதான பற்றால் அரசியல் ஆர்வம் ஏற்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரின் அன்பையும் நட்பையும் ஆர்.எம்.வீ. பெற்றார். அவரது நம்பிக்கைக்கு உரியவ ராகவே கடைசிவரை இருந்தார். அவர் தனிக்கட்சி ஆரம் பித்தபோது அதன் முக்கிய தூணாகவும் இருந்தார். எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெ.’ஆகியோர் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக வும் இருந்த ஆர்.எம்.வீ, பிறகு ஜெ.வுடன் முரண்பட்டு, எம்.ஜி.ஆர். கழகம் என்கிற கட்சி யை உருவாக்கினார். முதுமை காரணமாக அரசியல் நடவடிக் கைகளில் இருந்து விலகி ஓய்விலிருந்த அவர், இப்ப மரணத்தைத் தழுவியிருக்கார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, கமல், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்திருக்கு. ஆர்.எம்.வீ.யின் மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவிச்சிருக்கார்.''”
"நிலையாமை உலகத்தின் இயல்பாச்சேப்பா. அதுசரி, பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில், சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களை முதல்வர் ஸ்டாலின் ரொம்பவும் கவர்ந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் களமிறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்காக, பிரச்சாரம் செய்யப்போன முதல்வர் ஸ்டாலின், அங்கே வழக்கத்துக்கு மீறிய உற்சாகத்தில் இருந்திருக்கார். பொதுக்கூட்ட மேடையில் அவர் ஏறி அமர்ந்தபோது, அவரது வலப்பக்கம் அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோரும், இடப்பக்கம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அமர்ந்திருக்காங்க. வேட்பாளரான திருமாவளவனோ ஒரு கார்னரில் அமர்ந் திருக்கிறார். இதைக் கவனித்த ஸ்டாலின், அவரைத் தன் அருகே அழைத்து அமரவைத்துக் கொண்டு, அவருடன் அன்பாக தொகுதி நிலவரம் பற்றி விசாரித்திருக்கிறார். இதைப் பார்த்து எதிரில் அமர்ந்திருந்த சிறுத்தைத் தொண்டர்கள், ரொம்பவே நெகிழ்ந்துபோய் பலமாகக் கரகோஷம் எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்காங்க.''”
"கொங்குமண்டல தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வரின் மருமகன் சபரீசனே நேரடியாக சில அறிவுறுத்தல்களைத் தந்திருக்கிறாராமே?''”
"கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கான கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு தொகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார் சபரீசன். அங்குள்ள மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘இந்த கொங்கிலிருந்து வரும் தேர்தல் தொடர்பான ரிப்போர்ட்டுகள் பாசிட்டிவாக இருந்தாலும், கட்சி நிர்வாகிகளான உங்களிடம் போதுமான வேகம் இல்லை என்கிற தகவல்களும் எங்களுக்கு வருகின்றன. இப்படி இருப்பது நல்லதல்ல. முதல்வரின் மூன்றாண்டு கால நல்லாட்சிக்கு கட்டியம் கூறும் வகையில் தி.மு.க.வின் கோட்டையாக கொங்கு மண்டலத்தை எல்லோருமாகச் சேர்ந்து உருவாக்க வேண்டும். அதற்கேற்ப எல்லாமே நல்லபடியாக அமைய வேண்டும். இல்லையென்றால், சில பின்விளைவுகளைச் சந்திக்க நேரும்’ என்று எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை அவர் தந்திருக்கிறாராம்.''”
"அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை கொடுத்திருக்கே?''
"முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீடு ஒதுக்கியதாக, லஞ்ச ஒழிப்புத் துறை 2012-ல் வழக்கைப் பதிவு செய்திருந்தது. இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை மறு ஆய்வு செய்வதாக அறிவித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேசன், விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரிய சாமி மீதான வழக்கை மூன்று மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்கிற உத்தர வையும் அவர் பிறப்பித்தார். இதை எதிர்த்து அமைச்சர் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், உயர்நீதிமன்ற உத்தரவுக்கும், விசாரணை நீதிமன்ற விசாரணைக்கும் உச்சநீதி மன்றத்தில் தடை உத்தரவை இப்போது வாங்கியிருக் கிறார்.''”
"அ.தி.மு.க. மா.செ.க்களைப் பற்றி, தே.மு.தி.க. பிரேமலதா, எடப்பாடியிடம் புகார் வாசிச்சிருக் காரே?''”
"அ.தி.மு.க. கூட்டணியில் மத்திய சென்னை, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி களமிறக்கப்பட்டிருக்கிறார். அங்கே தி.மு.க.வில் வரிந்துகட்டி நிற்பது தயாநிதி மாறன். இவர்களோடு, பா.ஜ.க.வைச் சேர்ந்த வினோஜ் பி.செல்வமும் களத்திலிருக்கிறார். அங்கே தே.மு.தி.க. தனது வேட்பாளரை அறிவித்ததில் இருந்தே, அ.தி.மு.க. பெருந்தலைகள் யாருமே தலைகாட்டவில்லையாம். இந்த தொகுதி எல்லைக்குள், தி.நகர் சத்யா, பாலகங்கா, ஆதி ராஜாராம், வெங்கடேஷ்பாபுன்னு அ.தி.மு.க.வில் 4 மா.செ.க்கள் இருக்கிறார்களாம். இவர்கள் அத்தனை பேரையும் அண்ணாநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்தி, தயாநிதி மாறனுக்காக வளைத்துவிட்டாராம். அதேபோல் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர்களும் வளைக்கப் பட்டுவிட்டார்களாம்.இந்தத் தகவல் தெரிஞ்சி கொதித்துப்போன பிரேமலதா, வளைக்கப் பட்டவர்கள் பற்றி எடப்பாடியிடமே புகார் வாசிக்க, இதைக்கேட்டு ஷாக்கான அவர், தங்கள் மா.செ.க்களுக்கு கடுமையாக டோஸ் விட்டாராம்.''”
"ஓ...''”
"அதுமட்டுமில்லீங்க தலைவரே, இது தொடர்பாக இன்னும் சில செய்திகளும் இருக்கு. ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பாலாவுக்கு அண்ணாநகர் கார்த்தி, அ.தி.மு.க. மா.செ. தி.நகர் சத்யாவை முதலில் அறிமுகப்படுத்தி வைத்தாராம். அதன் மூலம் பாலாவும் சத்யாவும் தொழில் ரீதியாக நெருக்கமாகிவிட்டார்களாம். இந்த நிலையில் தி.நகர் சத்யா, தங்கள் கட்சியின் மற்ற 3 சென்னை மா.செ.க்களையும் கார்த்தியோடு நட்பாக்கினா ராம். இவர்களுக்கும் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் களுக்கும் அவரவர் வெயிட்டுக்கு ஏற்ப, ’வெயிட் டான’ ஸ்வீட் பாக்ஸ்களை பரிசாகக் கொடுத்து தான், அவர்களை வளைத்தாராம் கார்த்தி. இதேபோல் ஒரு முக்கிய பகுதிச் செயலாளருக்கு மதிப்பு வாய்ந்த பங்களா ஒன்றும் அன்பளிக்கப்பாக வழங்கப்பட்டிருக்கிறதாம். இதனால்தான் அவர்கள் அனைவரும் தே.மு.தி.க வேட்பாளரை கண்டுகொள்ளாமல் சைலண்ட் ஆனார் களாம். இதுபற்றிய ரிப்போர்ட்டும் எடப்பாடி கைக்குப் போய், அவருடைய பிரஷரை எகிற வைத்திருக்கிறதாம்.''”
"எடப்பாடி சரியாகக்கூட உறங்கமாட்டேங்கறார்னு அவர் குடும்பத்தினர் கவலைப்படறாங்களாமே?''”
"தேர்தல் பிரச்சாரம் முடிந்து இரவில் ஓய்வெடுக்கச் செல்லும் எடப்பாடி, என்னதான் களைத்திருந்தாலும் உடனே உறங்கச் செல்வதில்லையாம். பா.ஜ.க. உறவை தலைமுழுகிய நிலையில் அ.தி.மு.க. எதிர்கொள்ளும் இந்தத் தேர்தலில், தங்கள் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டிக் காட்டியே ஆகணும்னு தவிக் கிறாராம். அதனால் தொகுதிகள் தோறும் உள்ள அவங்க கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஏறத்தாழ 2 மணி நேரமாவது அவர் விவாதிச்சிட்டுதான் தூங்கறாராம். அப்ப, கட்சி நிர்வாகிகள் என்ன செய்தார்கள்? வேட்பாளர் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தார்? பிரச்சாரத்தில் மக்களின் ரியாக்சன் எப்படி இருந்தது? என்றெல்லாம் கேட்டறியும் எடப்பாடி, உங்கள் தொகுதியில் நம்ம வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், உங்களுக்கு ஆச்சரிய மான பரிசு ஒன்று காத்திருக்குன்னும் அவர்களை முடுக்கி விடறாராம். ஆனால் தேர்தல் பொறுப் பாளர்களோ, நீங்கள் அனுப்பிய ’ஸ்வீட் பாக்ஸுகள் போத வில்லைன்னு சொல்லி, அவரைத் திகைக்க வைக்கிறாங்களாம்.''”
"தனக்கு இலக்கே 2026 சட்டமன்றத் தேர்தல்தான்னு எடப்பாடி சொல்கிறாராமே?''”
"ஆமாங்க தலைவரே, தனக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்களிடம் மனம்விட்டுப் பேசும் எடப்பாடி,’"இந்த நாடாளு மன்றத் தேர்தலில் எனக்குப் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. காரணம், நானா பிரதமராகப்போகிறேன்? என் இலக்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தல் தான். நான் இப்போது தி.மு.க.வுக்கு எதிராக கையில் எடுக்கும் பிரச்சாரமெல்லாம், சட்டமன்றத் தேர்தலுக்கான ட்ரைலர்களே. நான் பா.ஜ.க.வை ஓரங்கட்டிய இந்த நேரம், அதற்கு மோசமான நேரம். தமிழ்நாட்டிலும் பா.ஜ.க.விற்கு தெம்பில்லை. வடக்கிலும் அதன் பலம் பழைய மாதிரி இல்லை. அ.தி.மு.க. மட்டும் தப்பித்தவறி பா.ஜ.க. கூட்டணியிலேயே இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு பவர் ஏறியிருக்கும். அதன் போதாத நேரம், நாம அதன் பிடியிலிருந்து தப்பித்துவிட்டோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியெல்லாம் நமக்குத் தேவையில்லை. மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு கிடைத்தால் கூட போதும். இருந்தாலும் ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி இந்த மூன்று தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க'’ என்றெல்லாம் சொன்னாராம். இதுதான் அவருடைய இப்போதைய மன நிலையாம்.''”
"தி.மு.க.வுக்கு சாதகமான நிலை ஏற்படக் காரணமான நபர்னு ஒருவரைப் பற்றிய டாக் இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, இப்போது தமிழகத் தில் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான அலை வீசுவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதை கமலாலயத் தரப்பும் கூட நம்புகிறது. இந்த நிலைமைக்குக் காரணம், கோவையில் களமிறங்கியிருக்கும் தங்கள் கட்சியைச் சேர்ந்த அந்த நபர்தான்னு அவங்க சொல்றாங்க. ‘அந்த நபர் மட்டும் அ.தி.மு.க.வுடன் மோதல் போக்கை கையில் எடுக்கலைன்னா, அந்தக் கட்சி பழைய மாதிரி எங்கள் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கும். அதோடு, தே.மு.தி.க.வும் எங்கள் பக்கம் வந்திருக்கும். இதெல்லாம் நடந்திருந்தால், எங்கள் கூட்டணி தி.மு.க.வுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வலிமையா ஆகியிருக்கும். இப்ப, எங்க அணி, பலவீனமா இருக்குன்னா, எங்க கோவை வேட்பாளர்தான் காரணம். அதனால் தி.மு.க. தரப்பு, அந்த நபரை மறக்கக்கூடாது’என்றெல்லாம் அந்த நபரை வஞ்சப்புகழ்ச்சி மூலம் கிண்டலடிக்கிறாங்க. தற்போதைய நிலவரப்படி, தேனி மட்டும்தான், பா.ஜ.க. தரப்புக்கு சற்று கணிசமாக வாக்கு கிடைக்கும் தொகுதியாக இருக்கிறதாம். காரணம், அங்கு அவர்கள் கூட்டணியில் களமிறங்கிய தினகரன், கரன்சி வித்தைகளைக் காட்டி வருகிறாராம்''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பேசியே வளர்ந்த இயக்கம்னு தி.மு.க.வை வர்ணிப்பாங்க. அதுக்குக் காரணம், தி.மு.க.வின் கொள்கைகளையும் பிரச்சாரத்தையும் தமிழகத்தின் இண்டு இடுக்குக்கெல்லாம் எடுத்துச்சென்ற பெருமை, தி.மு.க. தலைவர்களுக்கும் அதன் பேச்சாளர்களுக்கும் உண்டு. அப்படிப்பட்ட தி.மு.க.வில் இருக்கும் பேச்சாளர்கள், தேர்தல் என்றாலே பம்பரமாகச் சுழலுவார்கள். கருத்துக்களை மக்களிடம் எடுத்துவைப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இந்த முறை பெரிய அளவில் தி.மு.க. மா.செ.க்கள் பயன்படுத்திக்கலையாம். காரணம், தேர்தலுக்கு இடையிலான நாட்கள் இந்தமுறை குறைந்ததால், டோர் டூ டோர் கேன்வாஸ் செய்கிற பணிகளுக்கு மட்டுமே அவர்களைப் பயன் படுத்தறாங்களாம். அதனால் இது தொடர்பான ஆதங்கம், அவர்களுக்கு அதிகமாகவே இருக்குதாம்.''”
_________
இறுதிச்சுற்று!
ஜாபர்சாதிக்குடனான தொடர்பு பற்றி விளக்கமளிக்க புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு 11-ந் தேதி வியாழக்கிழமை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சில வருடங்களுக்கு முன்பு அண்ணாசாலையில், இயக்குனர் அமீர், சினிமா பாடல் எழுத்தாளர் சினேகன் ஆகியோரை அழைத்துவந்து "பாண்டி கபே' என்ற கடையைத் திறந்தார். இதனிடையே "ஈரம்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கிய ராஜேந்திரன், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதியை குறிவைத்து பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இது ஒரு புறமிருக்க, சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்குடன் இவருக்கு தொடர்பிருப்ப தாக புதுச்சேரி அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த ராஜேந்திரன், தன்னைப் பற்றி அவதூறு பரப்பினால் வழக்கு தொடர்வேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றி விளக்கமளிக்க ராஜேந்திரனுக்கு சம்மன் அனுப்பிய துடன், வரும் 14, 15ஆம் தேதிகளில் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகவும் அமலாக்க துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-நாகேந்திரன்