முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விளைவு களை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக ஐம்பத்தெட்டு கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணிமீது வழக்குப் பதிவு செய்தது. அ.தி.மு.க. அமைச்சர்களிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிக மாக சோதனை நடத்தியது வேலுமணியின் வீட்டில்தான்.
பல சமயம், இந்த சோதனைகள் பற்றிய தகவல்கள் வேலுமணிக்கு முன்கூட்டியே தெரிந்து விடும். சோத னைக்கு வரும் அதிகாரிகளை ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறீர்கள் என கேட்பது வேலுமணியின் ஸ்டைல். அத்து டன், சோதனை நடக்கும் வீட்டைச் சுற்றி தொண்டர்களை திருவிழா போல் திரட்டி, அவர்களுக்கு கூல்டிரிங்ஸ், டாஸ்மாக் ஐட்டங்கள், சாப்பாடு தருவதும் வழக்கமாக நடக்கும். வேலுமணி என்ன வேண்டுமென்றாலும் கூத்தடிக்கட்டும். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பலமானவை. அதிலிருந்து அவர் தப்பிப்பது கஷ்டம் என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சொல்லி வந்தார்கள்.
டெண்டர் முறைகேடு என்பது மிகவும் பலமான வழக்கு. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்களை வேலுமணியின் உறவினர்கள், அவரது பினாமிகள் காண்ட்ராக்ட் பெற்றிருக்கிறார்கள். அமைச்சரின் உத்தரவில்லாமல் அப்படி காண்ட்ராக்ட்களை வழங்கி இருக்க முடியாது. மற்ற அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்குதான் தொடரப்பட்டு உள்ளது. வேலுமணி, ராஜேந்திரபாலாஜி இருவர் மீது மட்டும்தான் இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டார். அரசு நினைத்தால் வேலுமணியை டெண்டர் முறைகேடு வழக்கில் கைது செய்ய முடியும் என இந்த வழக்கைத் தொடுத்த அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் கூறினார். ஆனால் இந்த டெண்டர் முறைகேடு நடந்தபோது மாநகராட்சி அதிகாரிகளாக இருந்த கார்த்திகேயன், பிரகாஷ் மற்றும் கண்காணிப்புப் பொறியாளராக இருந்த நந்தகுமார் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. அதிகாரிகளைச் சேர்க்காமல் அமைச்சரை மட்டும் குற்றம்சாட்டுவது தவறு என அறப்போர் இயக்கத்தின் சார்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தி.மு.க. தொடர்ந்த இந்த வழக்கில் தி.மு.க. சார்பிலும் அரசு சார்பிலும், அறப்போர் இயக்கத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “"டெண்டர் முறைகேட்டில் அமைச்சரின் சகோதரர்களுக்கும் பினாமிகளுக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ள தாகக் கூறுவதால் மட்டும் அமைச்சர் வேலு மணியை வழக்கில் சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல் வாதிகள் என்கிற ஒரு பொதுக்கருத்து நிலவுகின்றது. அந்த பொதுக்கருத்தின் அடிப்படையில் அர சியல்வாதிக்கு எதிராகவோ அல்லது சாதாரணக் குடிமகனுக்கு எதிராகவோ வழக்கு தொடர முடியாது. ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்து விட முடியாது. அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளை வேட்டை யாட அனுமதிக்க முடியாது.”
ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடக் கூடிய வேலையைத் தான் காவல்துறையினர் செய்து வருகிறார்கள் என்பது இந்த வழக்கில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்கு இந்த நீதிமன்றம் தயாராக இல்லை. வேலுமணிக் கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முறையான ஆரம்ப கட்ட விசாரணை நடத்தவில்லை. காவல்துறை தனது அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது அதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது''’ என டெண்டர் முறைகேட்டு வழக்கிலிருந்து வேலுமணியை விடுவித்திருக்கிறது.
டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கோர்ட்டில் தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கத்தால் தொடரப் பட்டது. அப்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.பி.யாக இருந்த பொன்னி என்பவரை, வேலு மணி மீதான இந்தப் புகாருக்கு முகாந்திரம் இருக் கிறதா என விசாரணை நடத்துவதற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. பொன்னி உயர்நீதிமன்றத் துக்கு அளித்த அறிக்கையில் வேலுமணி மீதான புகார் உண்மையில்லை. அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை கொடுத்தார்.
தி.மு.க. ஆட்சி வந்தவுடன் கங்காதர் என்கிற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கொடுத்த அறிக்கையின்படி வேலுமணி மீது டெண்டர் ஊழல் வழக்கு போடப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்த வழக்கைத் தொடர்ந்த அறப் போர் இயக்கத்தின் தலைவர் ஜெய ராமனிடம் கேட்ட போது, "இந்த தீர்ப்பில் நிறைய பாசிடிவ் ஆன அம்சங்கள் இருக் கின்றது. டெண்டர் முறைகேட்டில் ஊழல் நடக்க வில்லை என நீதி மன்றம் சொல்ல வில்லை. அதில் ஊழல் நடந்திருக்கின்றது. ஆனால் அந்த வழக்கு சரியாக விசாரிக்கப் படவில்லை. அதில் வேலுமணிக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்பதைப் பற்றி தெளிவாக விசாரிக்கவில்லை என்பதை மட்டும்தான் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. டெண்டர் வழக்கில் மறுபடியும் ஒரு விசா ரணை நடத்தி வேலுமணியை குற்றவாளியாகக் கைதுசெய்ய எந்தத் தடையும் விதிக்கவில்லை. அதேநேரத்தில் வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை டெண்டர் வழக் கைப் போல, நீதிமன்றம் அவர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவில்லை. இதே டெண்டர் வழக் கில் வேலுமணி மீதான குற்றம் ஊர்ஜிதப்படுத் தப்பட்டால் மறுபடியும் இந்த வழக்கு உயிர் பெறும். டெண்டர் முறைகேட்டில் வேலு மணியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளைச் சேர்க்க வேண்டும் என தொடக் கத்தில் இருந்து அறப்போர் இயக்கம் கோரிக் கை வைத்திருக்கிறது. அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது'' என்றார்.
வேலுமணி குற்றமற்றவர் என இந்த வழக்கில் சொன்ன பொன்னி, அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி.யாக இருந்தார். இப்பொழுது அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவில் தென் மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். பொன்னியைப் போலவே முன்னாள் அமைச் சர் ராஜேந்திரபாலாஜி மீது தி.மு.க. எழுப்பிய புகார்கள் தவறு என அறிக்கை கொடுத்த மற்றொரு எஸ்.பி.யான சண்முகம் இன்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடருகிறார். பொன்னியும் சண்முகமும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்படக் காரண மாக இருந்தவர் அவர்களது உயர் அதிகாரிகளாக இருந்த டி.ஐ.ஜி. ராதிகா. வேலுமணியின் நேரடி உறவுக்காரரான ராதிகாவை வைத்துத்தான் லஞ்ச ஒழிப்புத்துறையை ஆட்டிப் படைத்தார் வேலுமணி. அந்த ராதிகா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்பட்ட நிர்மல் குமார் ஜோஷி சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகத் தொடர்கிறார். தினகரன் சிலை தடுப் புப் பிரிவில் ஐ.ஜி.யாக இருக்கிறார். இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ.வுக்கு நெருக்கமாக இருந்த சங்கர் ஐ.பி.எஸ்., சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக் கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமான கயல்விழி, தஞ்சாவூர் டி.ஐ.ஜி.யாக உள்ளார். இப்படி காவல் துறையில் அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் கோலோச்சுகிறார்கள். வேலுமணியுடன் சேர்ந்து டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், உயர் கல்வித்துறை செயலாளராக இருக்கிறார் என் கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தத் தீர்ப்பு அ.தி. மு.க.விலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக் கின்றது. தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ யார் வழக்குப் போட்டாலும் அதை கோர்ட் மூலம் சமாளிக்க முடியும், பயப்படத் தேவையில்லை என்கிற சிந்த னையை இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க.வில் உருவாக்கி யிருக்கிறது. ஜெ.வுக்கு சசிகலா போல எடப்பாடிக்கு வேலுமணி என்கிற அதிகார சமன்பாட்டை அ.தி. மு.க.வில் உருவாக்கியுள்ளது. இனி அ.தி.மு.க.வும், எடப்பாடியும் வேலுமணியின் இந்த வெற்றி பார் முலாவின் அடிப்படையில் பா.ஜ.க.வை கூட எதிர் கொள்வார்கள். சசிகலாவையும் ஓ.பி.எஸ்.ஸையும் அ.தி.மு.க.வில் சேர்க்கமாட்டார்கள் எகிறார்கள் அ.தி.மு.க. ர.ரக்கள்.
__________________
இறுதிச் சுற்று!
தீபம் காண ஆளுநர் வருகை? பயப்படும் காவல்துறை!
திருவண்ணாமலையில் 10 நாள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் மிக முக்கியமானது. தமிழக கவர்னர் ரவி, இவ்வாண்டு தீபத் திருவிழா காணவருகிறார் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்கு சொல்லப்பட்டுள்ளது. இது காவல்துறை அதிகாரிகளை பதட்டத்துக்கு ஆளாக்கியுள்ளது. கவர்னருக்கு என தனியே பாதுகாப்பு விதிகள் உள்ளது. அவர் தங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யவேண்டும், வந்துசெல்லும் சாலை முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் ஆல்டர் ரூட், தங்கும் இடம் போன்றவற்றையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக பாதுகாப்பு பணிக்காக போடப்பட்ட திட்ட மேப்பை திருத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கவர்னர் கோவிலுக்கு வரும்போது அவர் கான்வே, கிரிவலப் பாதையை க்ராஸ் செய்யாமல் போகவே முடியாது. கிரிவலம் வரும் பக்தர்களை 10 நிமிடம் நிறுத்தி னால் சுமார் பல்லாயிரம் பக்தர்கள் ஒரு இடத்தில் தேங்கி நிற்பார்கள். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விபரீதத்தை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 1992-ல் கும்ப கோணம் மகாமகத்தின்போது நடந்த விபரீதம்போல் நடந்து விடுமோ என அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர். மகாதீபம் டிசம்பர் 6-ஆம் தேதி ஏற்றப் படுகிறது. இது பாபர் மசூதி இடிப்பு நாளும்கூட. தீபத் திருவிழாவில் ஏதாவது அசம்பா விதம் ஏற்பட்டால் பாதுகாப்பு குறைபாடு என மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற் படுத்தலாம். ஆளுநர் வருகை யின் பின்னால் இத்தகைய நோக்கங்கள் உள்ளதோ என பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
-து.ராஜா