ஸ்ரீமதியின் மரணம் கனியாமூர் சக்தி பள்ளியை முடக்கி வைத்திருக்கிறது. காவல் துறையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பள்ளியை புகைப்படம் எடுப்பதற்குக் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்தப் பள்ளியை அடுத்தகட்டமாக ஒரு மருத்துவக் கல்லூரியாக கொண்டுவருவதற்கு சிறையிலிருக்கும் ரவிக்குமார் முடிவு செய்துள்ளார்.
அந்தப் பள்ளியை தற்பொழுது சாந்தியின் சகோதரர் அருள் சுபாஷ் நிர்வகித்துவருகிறார். அவரிடம் நாம் பேசினோம். பேசிக்கொண்டி ருக்கும்பொழுதே பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மோட்டார் வாகனங்களில் வந்து அவரிடம் "என்ன... ஏதாவது பிரச்சினையா...?'' என நம்மை மிரட்டும் வகையில் அவரிடம் பேசினார்கள்.
இந்தப் பள்ளி முழுவதையும், அ.தி.மு.க.வின் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், பள்ளி உரிமை யாளரின் சமூகத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். ஸ்ரீமதி மரணமடைந்த போதே, இதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
பள்ளியில் பராமரிப்புப் பணி நடைபெறு கிறது, என பள்ளி சார்பில் வாட்ஸ்-ஆப் மெஸெஜ்கள் மாணவர்களுக்கு 13-ந் தேதியே அனுப்பப்பட்டுவிட்டது. அன்று முதல் பூட்டப் பட்ட அந்தப் பள்ளியில் ராஜசேகர் மற்றும் மோகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே கறி விருந்துடன் சாப்பாடு போடப்பட்டது.
ஸ்ரீமதியின் அம்மா நியாயம் கேட்டு பள்ளிக்குச் சென்றபோது மோகன், ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகியோர் அவரிடம் பேரம் பேசினார்கள். பள்ளி உரிமையாளரின் அறையில் நடந்த இந்த பேரத்திலிருந்து ஸ்ரீமதியின் அம்மா "இங்கே நியாயம் கிடைக்காது... எனக்கு பணமெல்லாம் வேண்டாம், என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்'' என வெளியேறிய தால்... இந்த கும்பல் பதறியது. அந்த இடத்தில் வைத்தே ஸ்ரீமதியின் அம்மாவையும் அவருடன் நியாயம் கேட்டு பள்ளிக்கு வந்தவர்களையும் அடித்து விரட்ட முயற்சித்தபோது, ஸ்ரீமதியின் அம்மாவுடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாங்கள் தப்பித்தோம் என்ற ஸ்ரீமதியின் அம்மா, மோகன் மற்றும் செல்வம் என்கிற இன்னுமொரு சாதி பிரமுகர், எடப்பாடியை கல்லூரி உரிமையாளர் ரவிக்குமாருடன் சேர்ந்து சந்தித்த புகைப் படத்தை நமக்குக் காட்டினார். "இவர்கள்தான் என்னிடம் பேரம் பேசினார்கள்' என விளக்கினார்.
எடப்பாடியின் நிழலான சேலம் இளங்கோவன் கொடநாடு கொலை விவகாரத்தைப் போலவே இந்த விவகாரத்தில் பள்ளிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார். இந்தப் பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமாரைக் காப்பாற்ற அனைத்து வேலைகளையும் ராஜசேகர், மோகன் ஆகியோர் செய்துவரு கிறார்கள். இவர்களிடம் பணம் ஏராளமாக உள்ளது. "இந்தப் பள்ளியை எப்படியாவது நாங்கள் திறப்போம், ஒரேநாளில் எங்களால் 100 கோடி ரூபாய் என்றாலும் பணமாக திரட்ட முடியும். அதற்கு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி -கல்லூரி அதிபர்கள் உதவுவார்கள்' என அடித்துச் சொல்கிறார் அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் உரிமையாளர் சாந்தியின் தம்பி.
இந்தக் கும்பலை கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் யுவராஜும், சேலம் இளங்கோவனும் வழிநடத்து கிறார்கள். இதில் அடியாள் படைக்கு அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் ராஜ சேகர் தலைமை தாங்குகிறார்.
கடந்த 17-ந் தேதி பள்ளியில் நடைபெற்ற கலவரத் துக்கு இந்த கும்பல்தான் காரணம். இவர்கள் போராட் டத்திற்கு வந்தவர்கள் மீது முத லில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதில் கொடுக்கும் வகை யில்தான் போராட்டக்காரர்கள், வன்முறையின் இறங்கினார்கள். போராட்டக்காரர்கள் வந்த வாகனங்களை ராஜசேகர் தலைமையிலான கும்பல்தான் எரித்தது. அவர்களை போலீசா ரிடமும் சிக்க வைத்தது. மாலினி என்கிற பள்ளி ஊழியரிடம் இருந்த சாவியைக் கொண்டு பள்ளியில் சி.சி.டி.வி.க்கள் இருந்த அறையைத் திறந்து இந்த கும்பல்தான் முதலில் கொளுத்தியது.
அத்துடன் ஸ்ரீமதி யை பிணமாக ஏற்றிச் சென்ற மாருதி வேனை யும் இந்த கும்பல் கொளுத்தியது.
"சக்தி பள்ளி உரிமையாளர் ரவிக் குமாரை ஸ்ரீமதி மரணம் என்கிற விவகாரத்தில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சிறிய சம்பவத்துக்குப் பதில்... ஒரு பெரிய சம்பவத்தை நிகழ்த்த வேண்டும். அதில் ஸ்ரீமதியின் மரணம் ஏற்படுத்திய பழி மறைந்து போகும் என இவர்கள் செய்த வேலைதான் நடந்த கலவரத்துக்குக் காரணம்' என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
அத்துடன், "இந்த கலவரத்துக்கு காரணம் அந்தப் பகுதியில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்' என்கிற பொய்யையும் இந்தக் கும்பல் திட்டமிட்டு பரப்பி வருகிறது.
"கோகுல்ராஜ் படுகொலை என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் கவுண்டர் சமுதாயத்திற்கும் இடையே நடந்த மோதல்' என யுவராஜ் சொல்லியதைப் போல, கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், கவுண்டர்களுக்கும் இடையே நடந்த மோதல் என தவறான செய்தியை இந்த கும்பல் பணத்தை செலவு செய்து பரப்பி வருகிறது என்கிறார்கள், இந்த சம்பவத்தை நன்கு அறிந்த சமூக ஆர்வலர்கள். இதற்கு சாட்சியாக செந்தில்குமார் என்கிற பேருந்து ஓட்டுநரை பயன்படுத்துகிறார்கள்.
ஸ்ரீமதி பெரியநசலூர் என்கிற இடத்திலிருந்து கனியாமூர் பள்ளிக்கு ப்ளஸ் 1 படிக்கும்போது வந்த பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர்தான் இந்த செந்தில்குமார். அப்பொழுது ஸ்ரீமதியின் தாயார், ஸ்ரீமதி அடரி என்கிற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை காதலிப் பதாக செந்தில்குமாரிடம் வந்து புகார் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக ஸ்ரீமதி "அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு, டிரைவரிடம் சொல்லிட்டாங்க' என ஒரு வெள்ளைத் தாளில் மூன்று வரிகள் எழுதியதாகவும், அதை செந்தில்குமார் பிடுங்க முயற்சித்ததாகவும், ஸ்ரீமதி அதை சுக்கல் சுக்கலாக கிழித்துவிட்டதாகவும் ப்ளஸ் 1 படிக்கும்பொழுது அவர் எழுதிய மூன்று வரிகள் கொண்ட கடிதத்தின் துண்டுகளை, செந்தில்குமார் பத்திரமாக வைத்திருந்து, அந்தக் துண்டுக் கடிதத்தை தற்பொழுது இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும்... செந்தில்குமார் கூறுகிறார்.
ஸ்ரீமதி ப்ளஸ் 1 படித்தது கடந்த வருடம். கொரோனா காலகட்டமான கடந்த வருடத்தில் பள்ளி நடந்ததே சில நாட்கள்தான். அந்த காலகட்டத்தில்... ஸ்ரீமதி எழுதியதாகச் சொல்லப்படும் அவராலேயே துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்ட கடிதத்தின் துண்டுகளை பல மாதங்கள் கழித்து கலவரக்காரர்களால் எரிக்கப்பட்ட பேருந்தில் கண்டக்டர் பாக்ஸிலிருந்து எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் எப்படி செந்தில்குமார் ஒப்படைத்தார்? என நாம் கேட்டதற்கு... அவரிடம் பதில் இல்லை.
ஸ்ரீமதியின் காதலன் எனச் சொல்லப்படும் அடரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் அக்காவைச் சந்தித்து, "இப்படியொரு சம்பவம் நடந்ததா?'' எனக் கேட்டோம்.
அதற்கு, "அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்த மாணவன் ப்ளஸ் 1 படிக்கும் காலத்தில் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லவில்லை'' என பதில் கூறினார்
ஸ்ரீமதியின் தாயாரும் "அப்படி நான் எந்தப் புகாரையும் பஸ் டிரைவர் செந்தில்குமாரிடம் சொல்லவில்லை. இப்பொழுது ஸ்ரீமதி எழுதிய கடிதம் என ஒரு கடிதத்தைக் காட்டுகிறார்கள். அதுபோலத்தான் இந்த டிரைவர் செந்தில்குமார் சொல்லும் விஷயங்களும் இருக்கின்றன. இவை யெல்லாம் ரவிக்குமார் விளையாடும் பண விளையாட்டு. இறந்து போன பிறகு எனது மகளை அவமானப்படுத்து கிறார்கள்'' என வருத்தப்படுகிறார்.
இதற்கிடையே, ஸ்ரீமதியை நள்ளிரவில் சின்னசேலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு உயிருடன் கொண்டு சென்றதாகவும், அங்கு இவர் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறார் என டாக்டர் கூறியதால் ஸ்ரீமதியை பள்ளிக்கு கொண்டுவந்துவிட்டு, விடியற்காலையில் கள்ளக் குறிச்சி மருத்துவமனைக் குக் கொண்டு சென்றிருக் கிறார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
நாம் சின்னசேலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று இதுகுறித்து விசாரித்தபோது, அங்கி ருந்த பதிவுகளில் ஸ்ரீமதி அந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ரெக்கார்டுகள் எதுவுமே இல்லை. நாம் கள்ளக் குறிச்சி மருத்துவமனை ரெக்கார்டுகளை பரி சோதித்தபோது... ஸ்ரீமதி பிணமாக காலை 6:05-க்கு அழைத்து வரப்பட்ட தாகவும் அந்த உடலை உடனே பிணவறைக்கு அனுப்பிவிட்டதாகவும் ரெக்கார்டுகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அந்த ரெக்கார்டு களை நாம் படமெடுத்துக் கொண்டோம். ஆனால், அந்தப் பிண வறையில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர், ஸ்ரீமதியை அதிகாலை 4:30 மணிக்கே கொண்டுவந்தார்கள். அதைப் பார்த்த டாக்டர்கள், 5 மணி நேரத்திற்கு முன்பே ஸ்ரீமதி மரணமடைந்துவிட்டார் என கூறினார்கள். சிதைக்கப்பட்ட ஸ்ரீமதியின் உடலைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது'' என ஸ்ரீமதி யின் உடல் அங்கே கிடந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத் தையும், ஸ்ரீமதியின் உடல் கிடத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சரில் ரத்தக்கறை படிந்திருந்ததையும் புகைப்படமாகக் காட்டினார்.
ஸ்ரீமதி விழுந்த இடத்தில் ரத்தம் எதுவும் இல்லை என அவரது தாயார் கூறுகிறார். ஆனால், ஸ்ரீமதி பிணமாக படுத்திருந்த ஸ்ட்ரெச்சரில் ஏகப்பட்ட ரத்தம் காணப்பட்டது என்கிறார் அந்தப் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்.
"ஸ்ரீமதி மூன்றாவது மாடியிலிருந்து விழுந்தார்' என்பதற்கு நிர்வாகத் தரப்பிலேயே எந்த சாட்சியமும் இல்லை. ஸ்ரீமதி மேலே இருந்து கீழே விழுந்தாரா? அல்லது அவரைக் கொலை செய்துவிட்டு பிணமாகக் காண்பித்தார்களா? என்கிற சந்தேகம் இன்றுவரை நீடிக்கிறது.
"பணம், கட்டுக்கதைகள், போலி சாட்சிகள்... என ரவிக்குமார் ஸ்ரீமதியின் மரணத்தை திசை திருப்பப் பார்க்கிறார்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: நவீன், அஜீத்
____________
இறுதிச்சுற்று!
விட்டுத்தர மறுத்த ஜெயக்குமார்!
தமிழக தேர்தல் ஆணையம், ஆகஸ்டு 1-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குமே அழைப்புச் சென் றிருந்தது. ஓ.பி.எஸ். அணி சார்பில் கோவை செல்வராஜ் வருகை தந்தார். அவரது இருக்கையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடும் பலகை காணப்பட்டது. சற்று நேரத் துக்குப் பின் வருகை தந்த ஜெயக் குமார், செல்வராஜுக்கு நேராகக் காணப்பட்ட அ.தி.மு.க. என்பதைத் தெரிவிக்கும் பெயர்ப் பலகையை தமக்கு நேராக இழுத்து வைத்துக் கொண்டார். இந்தக் காட்சி கூட்டத் துக்கு வருகை தந்த மற்ற கட்சியின ரிடையே நமட்டுச் சிரிப்புக்கு வழி வகுத்ததோடு, பெரும்பான்மை அ.தி.மு.க., ஓ.பி.எஸ். பக்கமிருந்து எடப்பாடி அணிப் பக்கம் இடம் மாறி யதை குறியீட்டு ரீதியாகச் சுட்டிக் காட்டும் கணநேரக் காட்சியாகவும் அமைந்தது.
-மணி