பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மூண்டுள்ள அதிகாரச் சண்டைதான், தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு ஈரான் -இஸ்ரேல் போரைவிட பயங்கர உஷ்ணத்தைக் கூட்டியிருக்கிறது.
எனினும், பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த உத்வேகத்தில் அவர், மாவட்டந்தோறும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் தொடங்கி விட்டார். இந்நிலையில், சேலம் இரும்பாலை அருகே ஒரு தனியார் மண்டபத்தில், ஜூன் 19-ல், ஒருங்கிணைந்த பா.ம.க. மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் அன்புமணி.
மேற்கு மா.செ. சதாசிவம் எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில செயலாளரும் மாஜி எம்.எல்.ஏ.வுமான மு.கார்த்தி ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் அன்புமணியை வரவேற்று பேனர்கள், கட்சிக் கொடிகள் அமைத்து தடபுடலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், கலசம் எடுத்து வந்து வரவேற்பு அளித்ததைப் பார்த்து உற்சாகமடைந்தார் அன்புமணி. சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்குழு நடக்கிறது என்பதையறிந்த, அந்த தொகுதியின் சிட்டிங் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், அதற்கு முதல் நாளே நெஞ்சுவலி எனக்கூறி, சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார். சேலத்தைத் தொடர்ந்து, அன்று மாலை தர்மபுரியிலும் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவிருந்ததால், பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணியும் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொதுக்குழுவில் மருத்துவர் அன்புமணி, ''நமது கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் உடல்ரீதியாக, "மனரீதியாக' பூரண குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்,'' என்று சம்பவம் செய்தார். இதைக் கேட்டு, கூட்டத்தில் பலத்த சிரிப்பலை.
அவர் பேசுகையில், "சேலம் மாவட்டம் பா.ம.க.வின் கோட்டை. என் மீது பல குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானவை. இன்னும் சில நாள்களில் இதை நான் தெளிவுபடுத்துவேன்'' என்ற அன்புமணி, தி.மு.க. பக்கம் பேச்சைத் திருப்பினார்.
''சமீபத்தில் இந்த நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் நாம் ஒரு மாநாட்டை நடத்தினோம். இந்த மாநாட்டைப் பார்த்து தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக தி.மு.க.வுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்ற பயம் தி.மு.க.வுக்கு வந்துவிட்டது.
சாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கே அதிகாரம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திரும்பவும் பொய் சொல்கிறார் முதல்வர். வரும் தேர்தலில் ஊழல் மற்றும் கொடுங்கோல் ஆட்சி யான தி.மு.க. ஆட்சியை அகற்றுவோம்'' என்றார்.
கட்சி நிர்வாகிகள் பேசுகையில், வரும் தேர்தலில் அன்புமணி ராமதாஸ், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அவர் சேலத்தில் போட்டி யிடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கட்சியினர்.
பா.ம.க. மூத்த நிர்வாகிகளிடம் பேசிய போது, ''கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகள், கட்சியின் எதிர்காலம் குறித்து அன்புமணி பேசினார். திடீரென்று அவர், மருத்துவர் அய்யாவை ஒரு தீய சக்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த தீய சக்தி சொல்வதைத்தான் அய்யா கேட்கிறார். கஷ்டப்பட்டு வளர்த்த இந்த இயக்கத்தை அந்த தீய சக்தி அழிக்கத் துடிக்குது. இதை சும்மா விடக்கூடாது என்றார்.
அந்த தீய சக்தி யார்? என்று எங்களிடம் அன்புமணி வெளிப்படையாகக் கூற வில்லை. ஆனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் அன்புமணி இந்த தகவலைச் சொல்லிவருகிறார். நிச்சயமாக அந்த தீய சக்தி, எங்கள் கட்சியிலோ, பிற கட்சி களிலோ இல்லை'' என் கிறார்கள்.
இன்னும் சிலரோ, "மருத்துவர் அய்யா முதலில் 2026 தேர்தல் வரைக்கும் தலைவராக இருப்பேன் என்று கூறினார். அப்போது யாரிட மிருந்தோ அவருக்கு ஒரு போன் வந்தது. அதற்குப் பிறகு, இறுதி மூச்சு உள்ள வரை தலைவராக இருப்பேன் என்று மருத்துவர் அய்யா சொன்னார். ஒருவேளை, போனில் பேசிய அந்த நபர்கூட தீய சக்தியாக இருக்கலாம்'' என ட்விஸ்ட்டுடன் முடித்தனர்.
தந்தை, மகனுக்குமான அதிகாரச் சண்டை யில் மாம்பழத்துக்கு டேமேஜ் வந்துவிடக்கூடாது என்பதே பா.ம.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
_______________
குழப்பத்தில் தொண்டர்கள்!
கடலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமை யில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஜூலை மாதம் நடைபயணம் மேற்கொள்ள வுள்ள நிலையில் மாவட்டம்தோறும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி கட்சியில் தனக்கான செல்வாக்கை தந்தைக்கு நிரூபிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். கடலூர் மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு, ராமதாஸ் புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய மாவட்டச் செயலாளர்களே தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு அதிகார மையம் இருப்பதால், தந்தை நீக்குவதும் மகன் தொடர்வார் என அறி விப்பதும் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
-காளிதாஸ்