தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது முகநூல் பதிவொன்றில், "புதிய வந்தே பாரத் ரயிலுக்காக சில நண்பர்கள் எனக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளார்கள். ரயில்வே துறைக்காக அதிகக் கோரிக்கைகளை வைத்து நாடாளுமன்றத்தில் பேசுபவன் என்பதால் வந்தே பாரத் ரயிலுக்கும் நான் முயற்சி செய்திருப்பேன் என நினைத்திருப்பார்கள். வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத, உயர் வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப் படும் ரயில் அது. எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று எழுதியது பலராலும் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது..

train

இதுகுறித்து நாம் ஆய்வுசெய்ததில், வந்தே பாரத் மட்டுமல்ல, மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ரயில்வே திட்டங்கள் அனைத்துமே சாமானிய மக்களைப் புறக்கணிப்பதாகவே இருப்பது தெரியவருகிறது. குறிப்பாக, முதியோர்களுக்காக வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை கடந்த கொரோனா காலத்திலிருந்தே முற்றிலும் நீக்கியது மிகப்பெரிய தவறு. மோடி ஆட்சியின் ரயில்வே திட்டங்கள் சிலவற்றைக் காண்போம்.

மஹாமனா எக்ஸ்பிரஸ்: 2016ஆம் ஆண்டில், சூப்பர்ஃபாஸ்ட் ரயில் வண்டிகளை மேம்படுத்தி உருவாக்கப்பட்ட மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைவருக்குமாக இருக்குமென்றாலும் கட்டணம் அதிகம், வழித்தடங்கள் மிகக்குறைவு என்பதால் சாமானியர்களுக்கு இதனால் பெரிதும் பயனில்லை.

Advertisment

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்: அதே 2016ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்படும் இந்த சூப்பர்ஃபாஸ்ட் ரயில் வண்டி, முழுக்க முழுக்க "3 டைர்' குளிர்சாதன வசதி கொண்டது. ஆனால் சாதாரண ஏ.சி. பெட்டியைவிட 20% கட்டணம் அதிகம்.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ்: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸும் முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாகும். தனித்தனி எல்.இ.டி.திரை, ஆட்டோமேட்டிக் கதவுகள் என பல வசதிகள் கொண்ட இந்த ரயில் வண்டியின் கட்டணமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல்.

உதய் எக்ஸ்பிரஸ்: 2018ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் வண்டி, சுற்றுலா பயணிகளுக்கானதாகும். முழுக்க முழுக்க குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இதற்கான கட்டணமும் மிக அதிகம்.

Advertisment

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ரயில் வண்டி சேவை மோடியின் கனவுத்திட்டம் என்றே கூறப்பட்டது. இதன் வேகம் அதிகமெனக் கூறப்பட்டாலும், பெரிதாக வித்தியாசமில்லை. ஆனால் கட்டணமோ ஆயிரத்திற்கு மேல்.

train

விஸ்டாடம் கோச் ட்ரெய்ன்: இது முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளுக்கான ரயில் வண்டியாகும். முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் வண்டியின் கட்டணமும் அதிகமே.

ஆக, இதுபோல் மோடியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ரயில் வண்டிகள் பெரும்பாலும் குளிர்சாதன வசதியுடன் எலைட் வர்க்க மக்களின் பயன்பாட்டுக்காகவே இருக்கின்றன. நாம் வழக்கமாகப் பயணிக்கும் நெல்லை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில் வண்டிகளில் இருக்கும் அன்ரிசர்வ்ட், இரண்டாம் வகுப்பு குறைந்த கட்டணங்கள் எதுவுமே இவற்றில் இல்லை. உதாரணத்துக்கு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்ல, பொதுப்பெட்டிக்கான கட்டணம் 195 ரூபாய், ஸ்லீப்பர் கோச் 395 ரூபாய், ஏசி பெட்டியில் அதிகபட்சமாக முதல் வகுப்பு ஏசி கட்டணம் 2,440 ரூபாய். அதுவே வந்தே பாரத் ரயில் வண்டியில் சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்கு குறைந்த கட்டணமே 1,620 ரூபாய். அதிக கட்டணம் 3,025 ரூபாய். இது விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. ஆனால், மோடி அரசானது, வந்தே பாரத் ரயில்களைத்தான் அதிக அளவில் இயக்குகிறது.

இதுகுறித்து, பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, "நீங்க 1620 ரூபாயில் வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேரத்தில் பாதுகாப்பாக, திருநெல்வேலிக்கு விரைவாக ஆம்னி பஸ் கட்டணத்தில் போக முடிகிறது. அப்படி ஒப்பிட்டால் இது குறைவான கட்டணம்தான். இந்த ஒன்பதரை வருடங்களில் இந்தியாவெங்கும் இரட்டை ரயில் பாதை போட்டு முடிக்கப்போகிறோம். இவைபோக, 84 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குவதால் அனைத்து வர்க்க ரயில் பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது'' என்றார்.

இதுகுறித்து தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "ஃப்ளைட்டில் செல்லும் மக்களை ரயிலில் பயணிக்கச் செய்வதை சாதனையாகக் கூற முடியாது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ரயில் சேவைகளில் இருக்கும் குறைகளைச் சரிசெய்து சாமானிய மக்களுக்கான அதே கட்டணத்தில் இயக்குவது தான் சரியானதாக இருக்கும். ஒடிசா பாலசோரில் நடந்த விபத்துக்கு பாதுகாப்புக் குறைபாடு களைத்தான் காரணமாகக் கூறுகிறார்கள். அப்படியானால் அதனைச் சரிசெய்வதுதான் முதன்மையான செயலாக இருக்கவேண்டும். அதேபோல், இவர்கள் அறிமுகப் படுத்தும் ரயில்கள் அனைத்துக்கும் இந்தியிலேயே பெயர் வைக்கும் போக்கு இருப்பதும் கண்டிக்கத் தக்கது'' என்றார். ஆக, மோடியின் ரயில்வே துறையானது, சாமானிய மக்களைப் புறக்கணித்துவிட்டு எலைட் மக்களுக்கான தாக மாறியிருப்பது வெட்டவெளிச்ச மாகிறது.