ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் ஒட்டுமொத்த கரைவேட்டிகளின் சங்கமமாகக் காட்சி யளிக்கிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு பிரதான கட்சிகளின் மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கானோர் ஈரோட்டில் இறங்கியுள்ளார்கள்.
ஈரோடு பகுதியில் தட்டி விலாஸ் எனப்படும் சிறு உணவகம் முதல் பெரிய உணவகங்கள் வரை வழக்கமாக நடைபெறும் வியாபாரத்தைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. லாட்ஜ், தங்கும் விடுதிகள் எங்குமே அறைகள் காலியில்லை. தனியார் வீடுகளையும் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார்கள் உடன்பிறப்புகளும் ர.ர.க்களும். குறுக்குச்சந்து, முட்டுச்சந்து என்று எல்லா இடங்களிலும் விலையுயர்ந்த இனோவா, ஸ்கார்பியோ கார்களாகவே நின்றுகொண்டிருக்கிறது. ஈரோடு மாநகரம் முழுக்கவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது! இவை எல்லாமே நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒரு திருவிழாபோல மாற்றியிருக்கிறது.
தி.மு.க. தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு கேட்கச் சென்றாலும், அவரை எதிர்பார்க்காமல் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் பம்பரமாகச் சுழல்கிறார்கள். மாவட்ட அமைச்சரான சு.முத்துசாமி எல்லோரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்கிறார்.
ஈரோடு தி.மு.க.வின் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் உள்ள சு.முத்துசாமி இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் இளங் கோவனுக்கு அடுத்தபடியாக தி.மு.க. தரப்பு ஹீரோவாக அசத்துகிறார்.
தி.மு.க. தலைமை, தேர்தல் பணியாற்ற முதலில் 13 அமைச்சர்களையும், பிறகு பெரும்பாலான அமைச்சர்களையும் ஈரோட்டில் களமிறக்கியது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை, அங்கு வாழும் மக்கள் நிலை, வாக்காளர்களின் எண்ண ஓட்டம் அனைத்தையும் பட்டியல் போட்டு அவர்களுக்கு வழங்கி எப்படி எல்லாம் அங்கு பணியாற்றவேண்டும் என்பதையும் வகுப் பெடுக்கிறார்.
கருங்கல்பாளையம் பகுதியில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் இங்கு வாக்குரிமை உண்டு. பொதுவாக பா.ஜ.க. மனநிலையில் இருக்கும் அவர்களை தொழில்துறையில் இந்த அரசு எப்படி எல்லாம் உங்களை ஊக்குவிக்கிறது என அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களின் வாக்குகளை வளைக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஒரு வழியாக அ.தி.மு.க. பஞ்சாயத்து முடிவுற்று எடப்பாடி அணி வேட்பாளரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பிறகு இறுதி நாளான 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார் தென்னரசு. அ.தி.மு.க. தேர்தல் குழுவும் ஒவ்வொரு பகுதியாக களமிறங்கியுள்ளது, துணிகளுக்கு இஸ்திரி போட்டும் டீ கடைக்குள் சென்று டீ ஆத்தியும் வித்தியாசமான முறையில் வாக்காளர்களைக் கவர்கிறார் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான உதயகுமார். 9-ஆம் தேதி மாலை அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் முடியும்வரை பெரும் பாலும் ஈரோட்டி லேயே இருந்து பணியாற்றுவதாகக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் "நானும் பிரச்சாரம் செய்வேன்' என வாலண்டரியாக அறிவித்திருக்கும் ஓ.பி.எஸ்., பா.ஜ.க. தலைமையில் அமைக்கும் மேடை யைப் பயன்படுத்த உள்ளார். பா.ஜ.க. தலை மையிலான குழு வாக்கு கேட்க செல்லும்போது ஓ.பி.எஸ். குழுவும் செல்வதோடு, பா.ஜ.க. தலைவர்கள் பேசும் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸும் கலந்துகொண்டு பேசுவதாகத் திட்டமிட் டுள்ளார்கள்.
சின்னம் கிடைக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் வேட்பாளர் வாபஸ் வாங்கிக்கொண்டதால் நான்கு பேர் பிரதான கட்சிகளின் வேட்பாளராகவும், சுயேட்சைகள் 80 பேரும் களத்தில் உள்ளனர். தி.மு.க. தரப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் 24, 25 -ஆம் தேதிகளில் தொகுதியில் உள்ள எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அ.தி.மு.க.விலோ எடப்பாடி முதல் தங்கமணி, வேலுமணி, முனுசாமி, செங்கோட்டையன் என மாஜிக்கள் எல்லோருமே எல்லா நாளும் இங்கேயே இருந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களின் பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு தரப்புமே கையில் வைத்து, இருதரப்பினரும் ஆய்வில் உள்ளார்கள். இந்த ஆய்வு தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் ஆய்வு என்பதால், இருப்பதிலேயே அதிகமான விலைப்புள்ளி இரு தரப்பிலும் முடிவாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் வாக்காளர்கள்.