அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டிருந்தாலும் அ.தி.மு.க. தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவுடன் இயங்கி வருவதாக அக்கட்சியின் தலைமைக்கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள தங்கள் மாவட்டங்களில் சீரியஸ் காட்டி வருகின்றனர். கொங்கு மண்டல அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரிடமும், ""நம் (கொங்கு) மண்டலத்தில் அடங்கியுள்ள 60 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். ஒரு தொகுதி யில்கூட தி.மு.க. வரக்கூடாது. அதற்கான அனைத்து வேலையையும் பாருங்கள். புத்தாண்டு துவக்கத்தில் முதல் ரவுண்ட் வேலைகள் முழுவதும் முடிந்திருக்க வேண்டும்'' என அழுத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி. இதனை யடுத்து, ’தேர்தல் யுக்திகளை’ இப்போதே துவக்கி விட்டனர்.
அதேபோல, சமூக ரீதியாக மூத்த அமைச்சர்கள் பலரும், தங்கள் மாவட்டத்திலுள்ள தொகுதிகளை முழுமையாக கைப்பற்றினால்தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் எடப்பாடியிடம் ஆதிக்கம் செலுத்த முடியும் என திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி. சம்பத், காமராஜ் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் வித்தைகளுக்கு விதைபோடத் துவங்கியுள்ளனர்.
ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளராக இருந்து தற்போது எடப்பாடியின் ஆதரவாளராக கருத்தப்படும் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசிய போது, ""எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டாலும் ஒவ்வொருத்தரிடமும் ஒரு அஜெண்டா இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த அஜெண்டா பகிரங்கமாக வெடிக்கப் போகிறது. அதாவது, எடப்பாடியின் கை ஓங்கினால் அவரை தூக்கிப் பிடிக்கலாம்; ஓ.பி.எஸ். கை ஓங்கினால் அவரது பின்னால் நிற்கலாம்; இவர்கள் இருவரும் இல்லாமல் சசிகலாவிடம் அ.தி.மு.க. சரணடைந்தால் அவரை உயர்த்திப் பிடிப்போம் என்கிற திட்டத்தில்தான் கட்சியின் மூத்த தலைவர்களும் சரி, அமைச்சர்களும் சரி தங்களுக்கேயுரிய பாணியில் நாடகமாடி வருகிறார்கள். அதற்கேற்ப, எடப்பாடியை சந்திக்கும் போது, ""மக்கள் செல்வாக்கும் கட்சித் தொண்டர்களின் ஆதரவும் உங்களுக்கே இருக்கிறது. நான் உங்கள் பக்கம்தான்'' என உற்சாகப்படுத்துகின்றனர்.
அதேபோல, ஓ.பி.எஸ்.சை சந்திக்கும் போது, ""என்னுடைய மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கும் கட்சிக்கும் ஓ.பி.எஸ்.தான்’ என அம்மாவால் அடையாளப்படுத்தப்பட்ட அவருடைய அரசியல் வாரிசு நீங்கள்தான். நீங்கள்தான் முதல்வராக வரவேண்டும். என்னுடைய ஆதரவு உங்களுக்குத் தான்'' என்கிற ரீதியில் பேசுகின்றனர். இப்படி இரண்டு முகாம்களிலும் துண்டு போட்டுள்ள அ.தி.மு.க. தலைவர்கள், டிடி.வி. தினகரனை ரகசியமாக தொடர்பு கொண்டும் விவாதிக் கிறார்கள். அவரிடம் சசிகலாவைப் பற்றி உருகி உருகிப் பேசுகின்றனர்.
மேலும், ""சின்னம்மாவாலும் உங்களாலும் (தினகரன்) மட்டும்தான் அ.தி.மு.க. இழந்துள்ள வலிமையை மீட்டெடுக்க முடியும். சின்னம்மா வெளியே வந்ததும் நீங்க எடுக்க நினைக்கும் அஸ்திரத்திற்கு இப்போதே திட்டமிடுங்கள். சின்னம்மா வந்ததும் அவரை நோக்கி அ.தி.மு.க. வந்துவிடும். நாங்களும் உங்கள் பின்னால் வந்துவிடுவோம். நீங்கள் முதல்வராக வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்'' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இப்படி அ.தி.மு.க.வின் தலைவர்கள் நாடகமாடி வருகின்றனர். சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் இந்த நாடகம் அம்பலத்துக்கு வரும்'' என்கிறார் உறுதியாக.
இந்த நாடகத்தை அறிந்துள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து கருத்தறிய அவரை தொடர்புகொள்ள நாம் முயற்சித்தபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ளதை நாம் ஆராய்ந்தபோது, யார் மனசுல யாரு என தலைப்பிட்டு சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் பூங்குன்றன். அதில், தாங்கள் ஏற்றுகொண்ட தலைவர்களுடன் தொண்டர்கள் பயணிக்கிறார்கள். பக்தர்களோ, இரட்டை இலை இருக்கும் இடத்தில் பயணிக்க நினைக்கிறார்கள். சரி, தலைவர்கள் யாருடன் பயணிக்கிறார்கள் என கண்டுப்பிடிக்க மனம் ஆசைப்பட்டது.
ஆராய்ந்து பார்த்தேன்; அலசிப்பார்த்தேன்; பேசிப்பார்த்தேன். கடைசிவரை, யார் மனசுல யாரு என்ற வார்த்தைக்கு விடை காண முடியவில்லை. கட்சிக்கார நண்பர் ஒருவர் என்னிடம், முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டாகி விட்டது . கழகத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? இனி நிலைமை எப்படி இருக்கும் என கேட்டார்.
அதற்கு நான், காலம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. யார், யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைத்தான் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சிலர் கட்சி மாறுவதற்குக்கூட தயாராக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என அவர்களால் கணிக்க முடியாததுதான் மாறாமல் இருப்பதற்கான காரணம் என்றேன்.
ஏன், அப்படி நினைக்கிறீர்கள் என அவர் கேட்டார். முதல்வரிடம் செல்கிறார்கள். உங்களை முதல்வராக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனி உங்களுக்கே வெற்றி என ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்களே, ஒருங்கிணைப் பாளருக்கு வேண்டியவர் களிடம் சென்று, அம்மா தேர்ந்தெடுத்தது ஐயா வைத்தான். அவர் விட்டு கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். அவர் களே சின்னம்மாவுக்கு நெருங்கியவர்களிடம், சின்னம்மா வந்தால்தான் விடிவு காலம் பிறக்கும் என சொல்கின்றனர். இப்படித்தான் தலைவர் களின் மனநிலை இருக்கிறது. பலருடன் பேசியதிலிருந்து நான் தெரிந்துகொண்டது இதுதான் என்றேன்.
கேட்டுக்கொண் டிருந்த நண்பரும் சிரித்து விட்டு, ""சரியாகச் சொன் னீர்கள். இதுதான் இன்றைக்கு நடக்கிறது. நான் பலரிடமும் பேசிய தில் தெரிந்து கொண்ட தும் இதுதான்'' என்றார். உடனே நான், நண்பர்கள் எல்லோரிடமும் பார்த்துப் பேசுங்கள் என அறிவுரைச் சொன்னேன். நண்பரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் . நண்பரிடம் சொன்னவையே தொண்டர்களுக்கு அறிவுரை. பேருந்தில் துண்டு போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல பல இடங்களில் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள். ஜாக்கிரதை.
இவர்களெல்லாம் ஜெயிக்கிற இடத்துக்குச் சென்று விடுவார்கள்; உயர்ந்தும் விடுவார்கள். இவர்களை நம்பிச் சண்டை போட்டுக் கொள்ளும் தொண்டர்களின் நிலைதான் பரிதாபம். ஆடு, கசாப்புக் கடைக்காரனைத்தான் நம்பும் என சொல்வார்களே! அதேபோல, நடிப்பவர்களைத்தான் தலைவர்களும் நம்புவார்கள். நம்பியவர்கள் ஏமாற்றும் போது, ஏமாந்த பின்புதான் நல்லவர்களை நம்பத் தொடங்குவார்கள். அதற்குள் காலம் நம்மை விட்டு போய்விடும்.
கழகத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைக்கும் தலைவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். காப்பாற்ற வேண்டும் என நினையுங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். நல்லவர்களை நம்புங்கள்; துதிபாடுபவர்களை கூட வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு குழி தோண்டி கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை. உங்களிடம் எதிர்பார்ப்பில்லாத பொதுவானவர்களிடம், அரசியலில் பயணிக்காத நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களே உங்களுக்கான நல்லதைச் சொல்வார்கள்.
யார் மனசுல யார் என்பதை காலம்தான் நிர்ணயிக்கப் போகிறது. நீங்களோ, நானோ இல்லை. ஆனால், தொண்டர்களின் மனதில் அம்மாவும் கழகமும் நிறைந்திருக்கிறார்; நிறைந்திருக்கிறது. எதையும் எதிர்பார்க்காத தொண்டனே, கழகம் என்கிற விருட்சத்திற்கு ஆணிவேர். ஆணிவேருக்கு யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்? யார் வெந்நீர் பாய்ச்சுகிறார்கள்? என்பது போகப்போகத் தெரியும். கழகம் எங்கள் இதயம் என நினைக்கும் தொண்டர்களில் ஒருவனாக பயணிக்க ஆசைப்படுகிறேன்'' என்று தனக்கு கிடைத்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார் பூங்குன்றன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை தலைவர்கள் வழிநடத்தும் நோக்கத்தை அவ்வப்போது அம்பலப்படுத்தி வரும் பூங்குன்றன், தற்போது நிலவும் நாடகத்தையும் பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த பதிவுகள் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொண்டர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பதிவுகளையும் வரவேற்பையும் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டுப் போயிருக்கிறது உளவுத்துறை.
உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, ""பூங்குன்றனின் பதிவுகள் எடப்பாடியை அதிர்ச்சியடைய வைக்கவில்லை. காரணம், அவரும் இதே சிந்தனையில் இருப்பதுதான். தன்னிடம் புகழ்ந்து பேசுபவர்களையும் ஜால்ரா அடிப்பவர்களையும் எடப்பாடி நம்புவதில்லை. அப்படி பேசுபவர்களின் நோக்கத்தை அறிந்துள்ள அவர், ஜால்ராக்கள் தம்மை ஏமாற்றுகிறார்கள் என உணர்ந்து அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்கிறார் எடப்பாடி!'' என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.
-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்