வரிந்து கட்டுகிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது ஆதரவாளர்களும் சொந்த சமுதாயத்தினரும். எடப்பாடியும் தன் ஆதரவு பலத்தைப் பெருக்கியபடி ஆலோசனைகளை நடத்தி வருறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு விசிட் அடித்தவர், தனது மகன் எம்பி ரவீந்திரநாத்குமார் மற்றும் குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து வந்த கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் முன்னாள் இன்னாள் எம்.எல். ஏ.க்களுடன் அமைச்சர் உதயகுமாரும் கலந்துகொள்ள, ரகசிய ஆலோனை கூட்டம் நடந்தது. இந்த விஷயம் பத்திரிகையாளர்களுக்கு தெரியவே பண்ணை வீட்டுக்கு படையெடுத்தனர். ஆனால் மதியத்திலிருந்து இரவு வரை இந்த ரகசியக் கூட்டம் நடந்ததால் பத்திரிகையாளர் யாரையும் பண்ணை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
அதன்பின் இறுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமாரோ, ""கடந்த சட்டமன்றத் தேர் தலின் போது உசிலம்பட்டியில் மூக்கையாத் தேவர் சிலை வைப்பதாக துணை முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். அதன் அடிப்படையில் சிலை வைப்பதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த சிலையை முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு அருகில் வைக்க இருக்கிறோம். அதற்கான முழு செலவையும் துணை முதல்வர் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்து துணை முதல்வரை சந்தித்து பேசியதுடன் மட்டுமில்லாமல், அந்த இடத்தை அவரே ஆய்வு செய்ய வருவதாகவும் கூறி இருக்கிறாரே தவிர, மற்றபடி அரசியல் ஏதும் பேச வில்லை'' என்று கூறிவிட்டு சென்றார்
பின்னர், பண்ணை வீட்டி லிருந்து கிளம்பிய ஓ.பி.எஸ்., இரவு 9.45 மணிக்கு தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் வத்தலகுண்டு அருகே உள்ள சென்றாய பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அப்போது பக்தர் ஒருவர், ""உங்களுக்கு நல்ல காலம் வரப்போகிறது. ஏற்கனவே இரண்டு முறை நீங்கள் இங்கு வந்து விட்டுப் போனதற்கு பிறகுதான் முதல்வர் பதவி வந்தது. அதுபோல் முதல்வராக போகிறீர்கள்'' என்று சொன்னவுடன் "வீட்டுக்கு வாங்க' என்று கூறி விட்டு செல்லும் போது, வழியில் நின்றிருந்த மக்கள் ஆலாத்தி எடுக்கும்போது "நீங்க தான் அடுத்த முதல்வர்' என்று கூறி யதைக் கேட்ட ஓ.பி.எஸ். புன்சிரிப்புடன் வீட்டுக்கு சென்றார்.
இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.க்களிடம் கேட்ட போது... ""முதல்வர் எடப்பாடி கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர் சமூக மக்களை வைத்து காய்நகர்த்த பார்க்கிறார். அதனால தான் அண்ணன் ஓ.பி.எஸ்.சும் தென்மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தை வைத்து காய் நகர்த்த களமிறங்கியிருக்கிறார். அதற்காகத் தான் உசிலம்பட்டியை மையமாக வைத்து ஏற்கனவே தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்த மூக்கையா தேவர் சிலையை உடனடியாக வைக்க முடிவுசெய்து, அதன்மூலம் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூக மக்களின் செல்வாக்கையும் பெற இருக்கிறார். இதை மையமாக வைத்துதான் அமைச்சர் உதயகுமாரை தன் பக்கம் இழுத்து அவர் மூலம் காய் நகர்த்தி வருகிறார். அதோடு தென் மாவட்டத் திலுள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி யிலும் உதயகுமார் களமிறங்கி யிருக்கிறார்.
அதன் பலனாகத்தான் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், மதுரை எம்.எல்.ஏ. சரவணன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் வரை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் ஆதரவை ஓ.பி.எஸ்.சுக்கு உறுதிப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதை தொடர்ந்துதான் தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமூக மக்களின் பலத்துடன் எம்.எல். ஏ.க்களை இழுக்கும் முயற்சியிலும் அமைச்சர் உதயகுமார் களம் இறங்கி வருகிறார் என்று கூறினார்கள்
முதல்வர் என்ற அதிகாரம் எடப்பாடியிடம் இருப்ப தால், இயல்பாகவே அவருக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவை அவரது சமுதாயத் தினர் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ள நிலையில், ஓ.பி.எஸ்.சும் அதே ஆயுதத்தை எடுத்திருக்கிறார். முக்குலத்தோர் சமுதாயத்தை ஒருங்கிணைத்து, தன் பேர பலத்தை கூட்டுவதில் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துகிறார். தமிழக அரசியலில் இதற்கு முன்பு இத்தனை வெளிப்படையாக சாதிரீதியான பலம் காட்டுதல் இருந்ததில்லை'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-சக்தி