அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி லஞ்சம்பெற்ற மதுரை மாவட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்த விவகாரமும், அமலாக்கத்துறை மதுரை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றிய சம்பவமும், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. அமைச்சர்களை குறி வைத்து சமீபகாலமாக தமிழகத்தில் ரெய்டு நடத்தி வரும் அமலாக்கத் துறையினருக்கு எதிராக, தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாள் சுழற்றியதில் முதல்வர் ஸ்டாலினை வட இந்திய முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டியிருக் கிறார்கள். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா வின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறைக்கு எதிராக இயக்கியதை தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள் தி.மு.க. மேலிடத்தொடர்பாளர்கள்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, "அமலாக்கத் துறையின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள லஞ்சஒழிப்புத் துறையினர், யார் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்தாலும் அதனை அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தியாக வேண்டும்.
அப்படி பதிவுசெய்யும் வழக்குகளை சம்பந்தப் பட்ட மாவட்டத்தில் உள்ள அமலாக்கத் துறை யினருக்கு பிரித்தனுப்பி அதனை கண்காணிக்கச் செய்கிறார்கள் உயரதிகாரிகள். அப்படி கண்காணிக்கும் அமலாக்கத்துறையினர், வழக்கு களில் தொடர்புடையவர்களை சந்தித்து பேரம் பேசுகின்றனர்; மிரட்டுகின்றனர் என்றெல் லாம் லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் வரும். ஆனால், கையும்களவுமாக பிடிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இந்த சூழலில்தான், தனது மனைவி பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபு மீது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்சஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தம்மிடம் 3 கோடி கேட்டும், முதல்கட்டமாக 50 லட்சம் தரவேண்டும்; இல்லையெனில், கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்வோம் எனவும் மிரட்டுவதாக புகார் தெரிவித்த சுரேஷ்பாபு, 20 லட்சம் மட்டும்தான் தரமுடியும் எனச்சொன்ன நிலையில், குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை வரச்சொல்லி தம்மிடமிருந்து அந்த 20 லட்சத்தை அங்கித் திவாரி பெற்றுக்கொண்டதாகவும், சில நாட்கள் கழித்து, மீதிப்பணத்தை கேட்டு தற் போது மீண்டும் மிரட்டுவதாகவும் அங்கித் திவாரி மீது புகார் வாசித்தார் சுரேஷ்பாபு.
அமலாக்கத்துறை அதிகாரி மீதே லஞ்ச புகார் தெரிவிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை தங்களது உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையின் மாவட்ட அதிகாரிகள். இதனையடுத்து, ஓரிரு நாளிலேயே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உத்தரவு கிடைத்தது. உடனே, சுரேஷ்பாபுவை அழைத்துப் பேசி, ரசாயனம் தடவிய நோட்டுகள் அவரிடம் தரப்பட்டது.
அங்கித் திவாரியை தொடர்புகொண்டு மீண்டும் 20 லட்சம் தருவதாக சுரேஷ்பாபு சொல்ல, அவரை குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொன்னார் அங்கித் திவாரி. சுரேஷ்பாபுவும் சென்றார். அவரைப் பின்தொடர்ந்தோம். அங்கித் திவாரி பணத்தை கையால் வாங்காமல், கார் டிக்கியில் வைக்கச்சொல்ல, அதன்படி பணக்கட்டுகள் அடங்கிய பேக்கை டிக்கியில் சுரேஷ்பாபு வைத்ததும், காரை கிளப்பிக்கொண்டு பறந்தார் அங்கித் திவாரி. உடனே விரட்டிச் சென்று அவரை மடக்கினோம். பணத்தை கைப்பற்றியபோது, காருக்குள் பணம் வந்தது தனக்குத் தெரியாது என மறுத்தார் அங்கித் திவாரி. அவரை சட்டப்படி கைதுசெய்து சிறையில் அடைத்தனர் எங்கள் அதிகாரிகள்'' என்கிறார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
தமிழக உள்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்கிறார் என்கிற புகாரை, முதல்வர் ஸ்டாலினிடம் மாநில உளவுத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். அப்போது, தமிழக அமைச்சர்களுக்கு குறிவைத்து அமலாக்கத் துறை மூலம் ரெய்டுகள் நடத்தி உங்களுக்கு (ஸ்டாலின்) நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு. தற்போது அந்த அமலாக்கத்துறையின் அதிகாரியே லஞ்சம் கேட்கும் விசயத்தில் நம்மிடம் சிக்குகிறார். அதனால், லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக அந்த அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தால், அமலாக்கத்துறையின் யோக்கியதை அம்பலமாகும்'' எனச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனை யோசித்த முதல்வர் ஸ்டாலின், "லஞ்ச ஒழிப்புத்துறையின் சட்டவிதிகள் என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். அதைத் தவிர்த்து, வேறு வழிகளில் முயற்சிக்கக்கூடாது' என ஸ்ட்ரிக்டாக அட்வைஸ் செய்ததுடன், லஞ்ச ஒழிப்புத்துறையின் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். அதன்படி, அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்'' என்கிறது உள்துறை வட்டாரம்.
தமிழக உயரதிகாரிகள் எதிர்பார்த்தது போலவே இந்த சம்பவங்களால் டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டன. வடமாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து பா.ஜ.க. தலைவர்கள் காத்திருந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆக்ஷன்களால் ஆடித்தான் போனது ஒன்றிய உள்துறை அமைச்சகம் என்றும் விவரிக்கிறது கோட்டை வட்டாரம்.
தி.மு.க. வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘"மாநில அரசின் காவல் துறைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைப் போன்ற விசாரணை அமைப்புக்கும் பல அதிகாரம் இருக்கிறது. மாநில அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அந்த ஒன்றிய அரசுக்கு எதிராக சட்ட ரீதியிலான தாக் குதல்களை மாநில அரசும் நடத்தலாம், தவறில்லை. ஆனால், தற்போது தி.மு.க. அமைச்சர்கள் பலரும் தங்கள் துறை சார்ந்து ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களில் சிக்கியிருக் கிறார்கள்'' என்கின்ற னர்.
அங்கித் திவாரி கைது செய்யப் பட்டுள்ள சம்பவமும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்து ஆவணங் களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அள்ளிச் சென்ற விவகாரமும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கோபப்படுத்தியிருக் கிறதாம். அந்த கோபத்தினூடே அமலாக்கத் துறையின் உயரதிகாரி களுக்கு சில உத்தரவுகள் பறந்துள்ளன.
இதனையடுத்து, அமலாக்கத் துறை அலுவலகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக, அத்துமீறி நுழைந்து ஆவணங்களை திருடிச் சென்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது குற்றம்சாட்டி, அத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலிடம் தங்களின் இணை இயக்குநர் மூலம் புகார் கொடுக்க வைத்துள்ளது அமலாக் கத்துறை இயக்குநரகம்.
இதற்கிடையே, "அமலாக்கத்துறையினர் என்னையும் மிரட்டி னார்கள்' என்று தமிழக சட்டப்பேரவை சபாநாய கர் அப்பாவு வைத்த பகிரங்கமான குற்றச் சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத் திருக்கிறது. ஆவணங் களை திருடிச்சென்றதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அப்பாவுவின் அந்த குற்றச்சாட்டுகள் உண்மை யானதா என்பதை அறிய, அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட் டுள்ளது.
மாநில சட்டப் பேரவையின் தலைவராக இருக்கும் அதிகாரமிக்க ஒருவரை அமலாக் கத்துறையினரால் மிரட்ட முடியுமா? அப்படியே மிரட்டினால், அதனை அப்போதே போலீசிடம் புகார் கொடுத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? அப்படி யானால், இந்த மிரட்டல் பொய் யானதா? என்கிற கோணத்திலும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறதாம் ஒன்றிய உள்துறை அமைச்சகம். அமலாக்கத்துறையின் மிரட்டல் புகார் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை அமலாக்கத்துறை விசாரிக்க நெருங்கும்போது, பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது'' என்கின்றன டெல்லி தகவல்கள்.
_____________
அகப்பட்ட அமலாக்கத்துறை! திண்டுக்கல், மதுரை திகீர்!
அங்கித் திவாரி கடந்த ஏப்ரல் மாதம்தான் மதுரை அமலாக்கத்துறைக்கு ஆய்வாளராக பதவி உயர்வுபெற்று பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ்பாபுவைத் தொடர்புகொண்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதல்வர் அலு வலகத்திலிருந்து அமலாக்கத்துறைக்கு விசாரணைக்கு வந்துள்ளது என்றும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ரூ 3 கோடி தரவேண்டும் என கேட்டிருக்கிறார்.
அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் கொடுத்தனுப்ப டிசம்பர் 01ம் தேதி கொண்டுவந்து, திண்டுக்கல்-மதுரை பைபாஸ் சாலையிலுள்ள தோமையார்புரம் அருகே திவாரி காரின் டிக்கியில் வைத்தார். திவாரியின் காரை விரட்டிமடக்கிய போலீசார் பணத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின் திண்டுக்கல்லில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியான மோகனாவிடம் ஆஜர்படுத்த, அவர் 15 நாள் திவாரியை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரை தபால் தந்தி நகர் பகுதியிலுள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதல்முறையாக சோதனை மேற்கொண்டனர். மேலும் செவ்வாயன்று அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடியானது.
-சக்தி, அண்ணல்