ர்ச்சைகள் இல்லாமல் என்கவுண்ட்டர்கள் நடப்பதில்லை. கடந்த 21-ந் தேதி காலை, "சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டர்' என ஊடகங்களில் பரபரப்பானது. சூட்டோடு பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்...’""கொலை முயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சங்கரை அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான டீம் பிடிக்க முயன்ற போது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியுள்ளார். ஆய்வாளர் நடராஜன் ரவுடி சங்கரை எச்சரித்தும் ரவுடி சங்கர், அதைக் கேட்காததால் ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் அவரைச் சுட்டுள்ளார். இதில், ரவுடி மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. குண்டு காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், வழியிலேயே இறந்துவிட்டார். காவலர் முபாரக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்'' என்று பேட்டியளித்தார்.

cc

சங்கரின் அம்மா கோவிந்தம்மாளும் அக்கா ரேணுகாவும்...’""சங்கரை உயிரோடு மடக்கி, திட்டமிட்டே போலீஸ் அடிச்சிக்கொன்னுட்டு, என்கவுண்ட்டர்ன்னு நாடகமாடுது. நீதி கிடைக்கும்வரை சங்கர் உடலை வாங்கமாட்டோம்'' என கதறித் துடித்தனர். என்னதான் நடந்தது என போலீஸ் ஏரியாவிலேயே விசாரித்தோம். அவர்களோ இன்ஸ்பெக்டர் நடராஜனை நோக்கி கை காட்டுகிறார்கள்.

""மாதவரத்தில் எஸ்.ஐயாக இருந்தபோதே. அங்கே மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை மடக்கி, அவரது வீட்டுக்கே சென்று, கல்யாணம் செய்து வைக்கும்படி டார்ச்சர் கொடுத்தார். இவரது தொல்லைக்கு பயந்தே, அந்த குடும்பம், பி.வி. காலனிக்கு குடியேறியது. நீண்ட வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே ஏரியாவுக்கு இன்ஸ்பெக்டராக வந்த நடராஜன், அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருந்தவர்களைக் கடுமையாகத் தாக்க, இது மேலதிகாரிகள் வரை புகாராகி, பள்ளிக்கரணைக்கு மாற்றப்பட்டார்.

Advertisment

பள்ளிக்கரணையில் முருகன் என்ற வியாபாரி, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் லாக்கப்பிலேயே இறந்துபோனார். கம்யூனிஸ்ட், மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலரும் போராட்டத்தில் குதித்தனர். இது தொடர்பாக நீதிபதி பவானி தலைமையில் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கும் நிலைவையில் இருக்கும் போதே இன்ஸ்பெக்டர் நடராஜன், நீலாங்கரைக்கு டிரான்ஸ்பர் செய்யபட்டார்.

நீலாங்கரையில் அவர் இருக்கும் போது க்ரைம் பிராஞ்ச் டீம் ஒரு என்கவுண்டரை நடத்த, அதிலும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜனுக்கும் தொடர்பு உண்டு என்று, அவரை மீண்டும் அயனாவரத்திற்கு மாற்றியது காவல்துறை மேலிடம்.

இங்கும் பிரச்சினைகள் தான். ஒரு குடும்பத்தின் மாமியார்-மருமகள் தகராறு போலீஸ் ஸ்டேஷன் வரை வரவே, மருமகள் மீது கண் வைத்திருக்கிறார் நடராஜன். பயந்துபோன மருமகள், ரவுடி சங்கரின் உதவியை நாடியுள்ளார். சங்கர் ஐடியாபடி பத்திரிகைகளிடம் இன்ஸ் பற்றி அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதனால் சங்கர் மீது கோபமான இன்ஸ்பெக்டர் நடராஜன், அயனாவரம் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் சரவணன் வழக்கில் சங்கரையும் தேடினார். அப்புறம்தான் எல்லாம் நடந்தது'' என்றார்கள் விரிவாகவே.

Advertisment

cc

நாம் மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கினோம். சங்கருடன் தொடர்புடைய ராணியையும் அவர் மகன் திலீப்பையும் பிடித்துள்ளார் நடராஜன். டார்ச்சர் தாங்க முடியாத ராணி, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் 7வது தெருவில் உள்ள முதல் வீட்டில் சங்கர் தங்கியிருக்கும் விசயத்தைக் கக்கினார். கடந்த 21-ந் தேதி அதிகாலை, தன் டீமோடு அங்கு விரைந்த இன்ஸ்பெக்டர் நடராஜன், அந்த வீட்டில் தங்கி யிருந்த சங்கரை மடக்கியிருக்கிறார்.

அங்கு என்ன நடந்தது என்பதை மிகுந்த தயக்கத்தோடும் நடுக்கத்தோடும் நம்மிடம் பேச ஆரம்பித்த அந்த வீட்டின் உரிமையாளர் மகளான வித்யா...’""அன்று விடியற்காலை 3 மணிக்கு, "என்னை அடிக்காதீங்க.. அடிக்காதீங்கன்னு...' அலறல்சத்தம் கேட்டுச்சு. யாரோ திருடனை மடக்கிட்டாங் களோன்னு பயந்துபோனேன். மெதுவா எட்டிபார்த்த போது, போலீஸ்காரர்கள் சங்கரை சுற்றிவளைச்சி லத்தியாலே அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. என்ன செய்றதுன்னு தெரியலை. சங்கர் அலறிக்கிட்டே இருந்தார். ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் சங்கரை அவங்க அடிச்சிருப் பாங்க. அவர் அப்படியே பேச்சு மூச்சு இல்லாமல் ஆயிட்டார். பிறகு கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ஒரு போலீஸ் வாகனத்தை அப்படியே ரிவர்ஸில் கொண்டுவந்து, சங்கரை அதில் ஏத்துனாங்க. அப்பவே சங்கரின் கழுத்து, கைகால் எல்லாம் தொங்கிப் போயிருந்துச்சு'' என்றார் பீதி விலகாமலே.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் நடராஜிடம் நாம் கேட்ட போது, ""தற்போது தான் அவசர மீட்டிங்கில் இருப்பதால் பேசமுடியாது'' என்றார்.

அவரை அறிந்தவர்களோ, ""அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கு மிக நெருக்க மானவர் நடராஜன். அவர்தான் சிக்கல்களிலிருந்து நடராஜனைக் காப்பாற்றி வருகிறார்'' என்கிறார்கள்.

ரவுடி சங்கர்மீது தான் கொண்டிருந்த தனிப்பட்ட பகையை, சாமர்த்தியமாக "என்கவுண்டராக' மாற்றியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் நடராஜன். அவரது முயற்சிக்கு மாநகர காவல்துறையும் ஒத்துழைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உண்மை எப்போது வெளிப்படுமோ?

-அ.அருண்பாண்டியன்