வருமானத்தில் கொழிக்கும் தேவஸ்தான நிர்வாகம், எங்களை மட்டும் கொரோனாவை சாக்காக்கி காயவிடுகிறது'’-என்று மனம் குமுறுகிறார்கள் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்.
புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில், கொரோனா ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு ஜூலை மாதமே திறக்கப்பட்டுவிட்டது. இந்த அவசரத் திறப்பால், கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்களை கொரோனா அட்டாக் செய்ததில், அர்ச்சகர் உட்பட சிலர் பரிதாபமாக மரணத்தைத் தழுவினர். ஆனால் கோயில் நிர்வாகம், மரண சம்பவங்களின் போது கூட கோயிலை மூடவில்லை என்ற குமுறலும் அங்கே சேர்ந்தே எதிரொலிக்கிறது.
வருமானத்திலேயே கவனமாக இருக்கும் நிர்வாகம், அங்குள்ள ஊழியர்களுக்குக் கூட உரிய சம்பளத்தைக் கொடுக்காமல், அவர்களை மொட்டையடித்து வருகிறதாம்.
இதுபற்றி கோயில் நிர்வாகத்தோடு சம்மந்தப்பட்டவர்களிடம் நாம் பேசிய போது, ""சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வருவது வழக்கம். இவர்கள் மூலமாக தினசரி உண்டியல் வருமானம் இரண்டரை கோடி வந்தது. லட்டு விற்பனை மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கட் போன்றவற்றின் மூலமும் தினசரி 5 கோடி கிடைத்தது. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டபோது, இலவச தரிசனத்தை ரத்து செய்து ஆன்லைன் டிக்கட்டுகளை 9 ஆயிரம் ரூபாய் வரையிலும் கூட விற்றார்கள். மணிக்கு 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்த இடத்தில் தற்போது 1500 பேர்தான் தரிசனம் செய்கிறார்கள். அதேபோல் 67 லட்டு கவுன்டர்கள் உள்ளன. அதில் 27 மட்டுமே திறக்கப்படுகின்றன. தற்போது தினமும் குறைந்த அளவில்தான் வருகிறார்கள். பிரம்மோற்சவத்துக்கு கொரோனாவால் பக்தர்களின் வருகை வெறும் 25 ஆயிரம் என்ற அளவில்தான் இருந்தது. இப்படி பக்தர்கள் வருகை குறைந்தாலும் கோயிலின் வருமானம் குறையவில்லை. இருந்தபோதும், நிர்வாகம், அங்குள்ள ஊழியர்களை மொட்டையடித்து வருகிறது''’என்கிறார்கள் ஆதங்கமாய்.
"அண்மைக்கால வருமானம் என்று பார்த்தால், அக்டோபர் 3-ந் தேதி மட்டும் 13,486 பேர் சுவாமி தரிசனம் செய்ததில் 1.02 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது. அக்டோபர் 4-ந் தேதி உண்டியல் வருமானம் 2.14 கோடியாகவும், கடந்த 5ந்-தேதி 18 ஆயிரத்து சொச்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததில் உண்டியல் வருமானம் 1.44 கோடி ரூபாய் கிடைத்துள்ளது' என்கிறது கோயில் நிர்வாகம். இதன் மூலம், கோயிலின் வருமானம் அடைபடவில்லை என்பது தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தோடு சலுகை விலை லட்டுகளை நிறுத்திவிட்டு பக்தர் ஒருவருக்கு ஒரு லட்டு இலவசம் என்றும், கூடுதல் லட்டு தேவையென்றால் 1 லட்டை 50 ரூபாய் வீதம் வாங்கிக்கொள்ள வேண்டுமென்றும் அறிவித்தார் தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி. அந்த வகையிலும் தினசரி 3 லட்சம் லட்டுகள் வரை, விற்பனை நடப்பதால் அதன் மூலமும் தினசரி 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துவருகிறது. இப்படி எல்லா வகையிலும் வருமானம் குவியும் போதும், ஊழியர்களை மனக் கசப்பிலேயே உழல வைத்திருக்கிறது கோயில் நிர்வாகம்.
லாக்டவுன் காலக்கட்டத்தில் நிரந்தர ஊழியர்கள் 8 ஆயிரம் பேருக்கும், ஒப்பந்த பணியாளர்கள் 8 ஆயிரம் பேருக்கும் 50 சதவீத சம்பளம்தான் வழங்கப்பட்டி ருக்கிறது. ஏஜென்ஸிகள் மூலமாக பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு சம்பளமே போடப்படாததால் அவர்கள் பசியோடும் பஞ்சத்தோடும் போராடிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்களுக்கு நிர்வாகம் எந்த உதவியும் இதுவரை செய்ய வில்லை என்பது கொடுமை. நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர் சங்கங்கள் கேள்வி எழுப்பி போராட்டம் செய்ததால், அவர்களிடம் பிடிக்கப்பட்ட 50 சதவிதம் சம்பளத்தைத் திரும்ப வழங்கிய தேவஸ்தானம், ஏஜென்ஸிகள் மூலமாக பணியாற்றிய 6 ஆயிரம் பணியாளர்களின் கண்ணீரைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.
தற்போது கோயிலுக்கு வருகிறவர் கள், கொரோனா காரணமாக அங்கே தங்காமல், வந்த வேகத்தில் சென்றுவிடுவதால், திருமலையில் உள்ள ஹோட்டல்கள், பொம்மைக் கடைகள் என ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் ஏறத்தாழ 8 ஆயிரம் வியாபாரக் குடும்பங்கள் அங்கே பரிதவிக்கின்றன.
இதுபற்றி எல்லாம் கவலைப் படாமல் இருக்கிறது தேவஸ்தான நிர்வாகம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட யார் வரப் போகிறார்கள்?
-து.ராஜா