சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப் புக் குழுவை அமைத்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தக் குழு பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தியது.
அந்த ஆலோசனையின் ஒரு பகுதியாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட னர். அவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த 28-ந் தேதி அறிவாலயத்தில் நடத்தினார் மு.க.ஸ்டாலின்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்திய நடிகர் விஜய், தி.மு.க.தான் எங்களின் அரசியல் எதிரி என்று முழங்கியிருந்தார். அவர் கர்ஜித்ததற்கு மறுநாள் (28-ந் தேதி) தி.மு.க.வின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததால், ஸ்டாலினின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த உடன்பிறப்புகளிடமும் இருந்தது.
துணை முதல்வரும் இளைஞரணிச் செய லாளருமான உதயநிதி, மேடை ஏறாமல் கீழே அமர்ந்துகொண்டார். கலைஞர் ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றிருந்த சமயத்தில், அறிவாலயத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருந்தார் ஸ்டாலின். இதனை கவனித்த தேர்தல் பொறுப்பாளர்கள் சிலர், தலைவர் பாணியை அப்படியே சின்னவரும் (உதயநிதி) பின்பற்றுகிறார் என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் போல இருந்தது இந்த ஆலோசனைக் கூட்டம். கட்சி நிர்வாகிகளையும் பார்வையாளர்களையும் பேச வைத்தார் ஸ்டாலின். அவர்களது பேச்சிலிருந்த முக்கிய விசயங்களை உன்னிப்பாகக் கவனித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன.
முதலில் மைக் பிடித்த ஆர்.எஸ்.பாரதி, ‘’"நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை நாம் பெற்றதைப்போல சட்டமன்றத் தேர்தலிலும் பெறவேண்டும். அதற்கு உங்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் ரொம்பவே முக்கியம். முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தினோம்; எதிலெல்லாம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆராய்ந்து அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அதேபோல, தலைமையிலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளின்படி பொதுக்கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், போராட்டங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் முறைப்படி காலதாமதமின்றி நடக்கிறதா என்பதை நீங்கள்தான் கண்காணிக்க வேண்டும். அது பற்றிய அறிக்கையை தலைமைக்கு அனுப்புவது அவசியம்''’என்று அறிவுறுத்தினார்.
துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, "இன்றைக்கு தி.மு.க.வை நோக்கி இளைஞர்கள் பட்டாளம் பெரியளவில் படையெடுக்கிறது. ஆர்வமாக அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் எண் ணிக்கை நம் கட்சியில்தான் அதிகம் இருக்கிறது என்ற நிலையை உருவாக்க வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களான நீங்கள்தான் இதனை கண்காணிக்க வேண்டும்''’என்றார்.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும்போது, "தொகுதிப் பார்வை யாளர்களான நீங்கள், தொகுதியிலுள்ள உள்கட்சி பிரச்சினையில் கவனம் செலுத்தக் கூடாது. அதில் சிக்கிக்கொள்ளவும் கூடாது. தொகுதியில் கட்சிரீதியாக நமக்கு சில பிரச்சினைகள் இருக்கும். அதேபோல, தொகுதியில் மக்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கண்காணித்து தேர்தல் வெற்றிக்கானதாக அதனை சரி செய்யப் பார்க்கணும்.
பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் உங்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். நம்முடைய ஆட்சியில் நிறைய திட்டங்களை முதல்வர் கொண்டுவந்துள்ளார். அந்த திட்டங்கள் மக்களிடம் போய்ச்சேர்ந் துள்ளதா? என தெரிந்துகொண்டு, போக வில்லை எனில் வீடு வீடாகச் சென்று தி.மு.க. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது நம்முடைய கடமை. இன்னும் சொல்லப்போனால், மகளிருக்கு பல திட்டங் களை நம்முடைய அரசு கொண்டு வந்திருக் கிறது. அதையெல்லாம் நீங்கள் பெண்களிடம் விவரிக்க வேண்டும். அப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என கவனித்து அதனை தலைமைக்கு தெரிவிப்பதும் உங்களின் கடமை''’என்று அட்வைஸ் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பார்வையாளர்கள் பலரும் பேசினர். தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதத்தில் இருந்தது. தொகுதியில் நிலவும் பிரச்சனைகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினர்.
மயிலாப்பூர் தொகுதி பார்வையாளரும் ஐ.டி.விங் ஆலோசகருமான கோவி.லெனின் பேசும்போது, "எந்த தேர்தலாக இருந்தாலும் சென்னையில் பதிவாகும் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கிறது. காரணம், இறந்துபோன வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்படுவதே இல்லை. உதாரணத்திற்கு, கழகத்தின் செயல்வீரர் மறைந்த சைதை கிட்டுவின் பெயர் இன்னமும் பட்டியலில் இருக்கிறது. இதுமட்டுமல்ல, டபுள் என்ட்ரிகள் நிறைய இருக்கின்றன. ஒரு தேர்தலுக்கு ஒரு தொகுதியிலிருப்பவர்கள் அடுத்த தேர்தலின் போது சென்னையை விட்டோ அல்லது தொகுதி மாறியோ போய்விடுகிறார்கள். அவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதில்லை. இத னால், டபுள் என்ட்ரிகள் அதிகமாக இருக்கிறது. இந்த டபுள் என்ட்ரியால்தான் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வாக்குப் பதிவு குறைவாகவும் ரிசல்ட் வருகிறது. இவைகள் நீக்கப்படவேண்டும். தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பது வாக்காளர்கள் பட்டியல். இது முறையாகவும் சரியாகவும் இருந்தாலே கழகத்தின் வெற்றி சதவீதம் அதிகரித்திருப்பதை நாம் பார்க்க முடியும்''’என்று விவரித்தார்.
கூட்டத்தில் பேசிய தலைவர் ஸ்டா லின், "நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் வெற்றிபெற்று சில மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடியிருக்கிறோம். இந்தமுறை நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதிலும் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம், சந்தேகமில்லை. அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இன்றிலிருந்தே அதனைத் தொடங்கவேண்டும். 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். நமது வெற்றியை உறுதி செய்வதற்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மா.செ.க்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பணிகளைத் தொடங்குங்கள். தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும், ஓராண்டுக்குள் தொகுதியை நமக்கானதாக தயார்படுத்தும் பொறுப்பும் உங்களுடையது.
தி.மு.க. ஒரு ஜனநாயகக் கட்சி. உள்கட்சி பிரச்சினைகள் நிறைய இருக்கவே செய்யும். அவற்றை அமைச்சர்கள், மா.செ.க்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களால் தீர்க்க முடியவில்லையெனில் தலைமையின் கவனத்துக் கொண்டுவாருங்கள். அதை விட்டுவிட்டு நீங்கள் ஊதிப் பெரிதாக்கிவிடாதீர்கள். உங்கள் மீது எந்த புகாரும் வராத மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
பார்வையாளர்கள் அறிவிப்பு வந்ததும், பட்டியலிலிருக்கும் நிர்வாகிகளிடம், உங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது; அதனால்தான் பார்வையாள ராகப் போட்டிருக்காங்க என சிலர் சொல்லிக் கிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் பயப்படாதீர்கள்... உங்களுக்கும் வேட் பாளராகும் வாய்ப்பு உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எப்போதும்வென்றான் எனும் ஊரின் பெயர் தனக்குப் பிடிக்கும் என கலைஞர் சொல்வார். அந்த பெயர்தான் நினைவுக்கு வருகிறது, அதனால் எப்போதும் வென்றானாக நாம் உழைக்க வேண்டும். அதனை மனதில் நிறுத்தி பணியாற்றுங்கள்'' என்று தனது பேச்சை முடித்தார்.
என்ன நினைத்தாரோ மீண்டும் மைக் பிடித்த ஸ்டாலின், "நேற்று நடந்த மாநாட் டைப் பற்றியோ நேற்று வந்தவர்களைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். இது போன்ற பலரை இந்த இயக்கம் இதற்கு முன்பும் பார்த்திருக்கிறது. அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்த கட்சி, அந்த கட்சின்னு எந்த கட்சி வந்தாலும் நம்மைத்தான் விமர்சிப்பார்கள். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்தெல்லாம் கவலைப் படாமல் கட்சி கொடுத்த வேலைகளை செய்து முடியுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். யாருக்கும் நீங்கள் பதில் சொல்லாதீர்கள். அதனை தலை மைக்கழகம் பார்த்துக்கொள்ளும்''’என்று நடிகர் விஜய்யின் மாநாடு குறித்து பஞ்ச் கொடுத்தார். அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
200 இடங்களில் வென்றாக வேண்டும் என்கிற இலக்கை வைத்து தனது பாய்ச்சலைத் துவக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!