விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் 71 வயதான சுயேட்சை வேட்பாளர் அரசன் என்பவருக்கு செருப்பு சின்னத்தை வழங்கியுள் ளது தேர்தல் கமிஷன். இவர், செருப்புகளையே மாலையாகப் போட்டு வாக்கு கேட்டுச் செல்வதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் விழுப் புரம் தொகுதி வாக்காளர்கள்.

ee

இவர் இதற்கு முன்னரும் பல்வேறு தேர்தல்களில் போட்டி யிட்டுள்ளார். "உங்களுக்கு செருப்பு சின்னத்தை வழங்கியுள்ள தேர்தல் ஆணை யத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா?'' என்று கேட் டோம். அதற்கு, "மனிதர்களை காலில் சுமந்து செல்லக்கூடியது செருப்பு. அதை எனக்கு சின்னமாக தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கியதால் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மரியாதை தரும்படியாக நான் கழுத்தில் சுமந்து செல்கிறேன்'' என்கிறார் அதிரடியாக. செருப்புக்கு மரியாதை!

வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இய லாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடியே தபால் மூலமாக வாக்கு செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இவர்களிடம் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தபால் வாக்கு பெறப்பட்டு வருகிறது. சேலம் தொகுதியில் தபால் மூலம் வாக்கு செலுத்தும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க.வினர் 1000 ரூபாயும், அ.தி.மு.க. தரப்பினர் 500 ரூபாயும் பக்காவாக பட்டுவாடா செய்துள்ளனர் எனச் சொல்லப் படுகிறது. அதேபோல், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கு செலுத்தும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் தரப்பிலும் தலா 500 வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்குப்பதிவைப் பொறுத்தவரை, மூத்த வாக்காளர்கள் பெரும்பாலும், ஏற்கெனவே அவர்களின் அபிமானம் பெற்ற கட்சிக்குத்தான் வாக்களிப் பார்களென கட்சி முகவர்கள் கூறுகின்றனர். பணப்பட்டுவாடாவும் தபால்லயே நடக்குமோ?!

Advertisment

dd

நாமக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. வேட்பாளர் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். தொகுதி பொறுப் பாளராக தி.மு.க. கிழக்கு மா.செ.வான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. வேட் பாளர் "ராகா' தமிழ்மணி, பணத்தை தண்ணீராய்ச் செலவழித்துவரும் நிலையில், ஆளும் தரப்பிலோ பூத் கமிட்டிக்குக்கூட பெரிய அளவில் பணம் பாய்ச்சவில்லையாம். இந்நிலையில், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நிர்வாகிகளுடன் ராஜேஷ்குமார் ஆலோசனை நடத்திய போது, "தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் எந்த இடத்தில் ஓட்டுகள் குறைந்தாலும் கட்சித் தலைமை என்னை கலந்து ஆலோசிக்காமலேயே சம்பந்தப் பட்ட கட்சி நிர்வாகியை பொறுப்பை விட்டு உடனடியாகத் தூக்கிவிடும் என் பதை மனதில் வைத்து செயல்படுங்கள். ஒரு காலத்தில் பெரிய செல்வாக்காக இருந்த வீரபாண்டியார் குடும்பத்தில் தற்போது யாருக்கும் சீட் இல்லை. தற்போது அவர்களைக் கண்டுக்க ஆள் இல்லை. இதையெல்லாம் நன்றாக யோசித்துக் களப்பணியாற்றுங்கள்'' எனக்கூற, அங்கிருந்த உ.பி.க்களோ, "வேட்பாளரும் பணத்தைக் காட்ட வில்லை, தி.மு.க. தரப்பிலும் பணம் வர வில்லை. பிறகெப்படி வேலை பார்ப்பார் கள்?'' என்று முணுமுணுக்கிறார்களாம். கரன்ஸி இல்லாமல் காரியமில்லை!

சிதம்பரம் தொகுதியில் போட்டி யிடும் வி.சி.க. தலைவர் தொல்.திருமா வளவன், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் கடந்த வியா ழனன்று, மரியாதை நிமித்தமாக நட ராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்கள். அப்போது தீட்சிதர்கள் திருமாவிடம், "உங்க கட்சிக்காரங்கதான் கோவிலில் சின்னதா எது நடந்தாலும் பெருசா பேசுறாங்க. நீங்களும் கோயில் குறித்து வெளியில பேசாதீங்க. நாங்களும் உங்களப் பத்தி பேச மாட்டோம். உங்களுக்கு ஆதரவாக இருப்போம்'' எனக்கூறி விபூதி பூசினார்கள். "கோவில் கனக சபையிலேறி தரிசனம் செய்ய பொதுமக்களை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டு மென்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைக் கண் காணிக்க இந்து அறநிலையத்துறை சார் பில் செயல் அலுவலர் பணியாற்றுகிறார். அதனைப் பொருட்படுத்தாமல் அப்படித்தான் வாங்கு வோம் என பக்தர்களிடம், ஒரு ஆளுக்கு ரூ.100 கொடுத் தால் மட்டுமே கனகசபையில் ஏற விடுகிறார்கள். இப்படி நடக்கும் பல்வேறு தவறுகளை மூடிமறைக்கவே தீட்சிதர்கள் விபூதியடிக்கப் பார்க்கிறார்கள்'' என்று அங்கு வந்த வெளியூர் பக்தர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பேசிக்கொண்டனர். திருமாவுக்கே விபூதியடிக்கிறீங்களா?!

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பாஸ்கு திருவிழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், பழனி எம்.எல்.ஏ. செந்தில் குமார் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதே நேரத்தில், அ.தி.மு.க.விலிருந்து மாஜி திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதனுடன், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் உள்ளிட்டோர் வந்தனர். இரு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தபடி இருக்கைகளில் அமர, மாஜி சீனி வாசன், தனது இளைய மகன் சதீஷை அமைச்சர் ஐ.பி.யிடம் அறிமுகப்படுத்தியதோடு, காலில் விழுந்து ஆசி வாங்க வைத்தார். அப்போது, "இவனுக்குத்தான் சீட் வாங்கலாம்னு இருந்தோம். அதற்குள் கூட்டணிக் கட்சிக்கு கொடுத்து விட்டனர்'' என ஐ.பி.யிடம் தெரிவித்தார் சீனிவாசன். விழாவில் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள பா.ம.க. வேட் பாளர் திலகபாமா ஆப்சென்ட். கலந்துக்கிட்டால் பா.ஜ.க. கோபத்துக்கு ஆளாகணுமே!

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றிக்காக உழைக்கும் காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்தில் இருக்கிறார்கள். அதுகுறித்து “"சொந்தக் கட்சிக்காரங்க மேல வேட் பாளருக்கு பெரிசா நம்பிக்கையில்ல. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் எல்லாத்தயும் பார்த்துப்பாங்கன்னு மிதப்புல இருக்காரு. விருதுநகர்ல காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பிரச்சாரத்துக்கு வந்தப்ப அவங்ககூட வேட்பாளர் வரல. அந்த அளவுக்கு பிசியா இருக்காரு. சிவகாசியில ஓட்டு கேட்கப்போற தி.மு.க.காரங்களுக்கு ரூ.5000 கொடுக்கிறாங்க. ரெண்டு மணி நேரம் வார்டை சுத்திட்டு வர்றதுக்கு ஆளுக்கு 100 ரூபாய். ஆனால் காங்கிரசுக்கோ மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கோ செலவுக்கு பணம் எதுவும் தரமாட் டாங்க. எங்கள அரசியல் அனாதைகளாக்கிட் டாங்க''’என்று புலம்ப, சிவகாசி தொகுதி தி.மு.க. பார்வையாளரான ரஞ்சன் துரையிடம் பேசி னோம். “"தி.மு.க.காரங்களுக்கு கொடுக்கிற மாதிரி காங்கிரஸ்காரங்களுக்கு டெய்லி கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு நிதி ஒதுக்கல. தி.மு.க.க்காரங்களுக்கே பத்தல. அடுத்து வரும்போது காங்கிரஸ்காரங்களுக்கும் செஞ்சிரு வோம்'' என்றார். கதரை கதர் வேட்பாளரே கதற விடலாமா?!

திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத் தாமன், தேர்தலுக்காக தொடங்கிய வங்கிக்கணக்கில் பா.ஜ.க. தேசியத் தலைமை 90 லட்ச ரூபாய் நிதியை வரவு வைத்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பாலசுப்பிர மணியின் கட்சிக் கணக்கில் 1.5 கோடி ரூபாய் தேர்தல் செலவுக் காக வரவு வைத்துள்ளது. இவையில்லாமல் ரொக்கமாகவும் கோடிகள் தரப்பட்டுள்ளன. தலைமை கொடுத்த பணத்தை யார் முதலில் எடுத்துச் செலவு செய்வது என்கிற மோதல் வேட்பாள ருக்கும், மாவட்டத் தலைவருக்குமிடையே உருவாகி புகைந்து கொண்டிருந்தது. கணந்தம்பூண்டி கிராமத்தில் தேர்தல் பிரச்சா ரம் செய்யச் சென்றபோது, வேட்பாளர் அஸ்வத் தாமனை வழிநடத்தும் பா.ஜ.க. ஆன்மீகப் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் சங்கருக் கும், மா.த. பாலசுப்பிரமணிக்கு மிடையே தேர்தல் செலவுக்கு பணம் தராதது குறித்து பிரச்சனை எழ, இருவரும் கற்களை வீசியும், கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டும் சண்டையிட்டனர். இதைப் பார்த்த பொதுமக்களோ, "பிரச்சாரத்துக்கு வர்றப்பவே இவ்ளோ மோசமா நடந்துக்கறாங்க... இவங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாலும்'' என்று தலையிலடித்துக்கொண்டனர். ஓரமா போய் சண்டை போடுங்கப்பா!

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தையடுத்த காங்குப்பத்தில், அமைச்சர் துரைமுருகனின் பங்காளியான நடராஜன் வீட்டிற்கு 8ஆம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்று கதவைத் தட்டினர். நடராஜன் குடும்பத்தினர் கதவைத் திறக்கவில்லை. அதன்பின்னர் காவல்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளை வரவைத்தனர். காவல்துறையினர் பக்கத்து வீட்டு மாடி வழியாக நடராஜன் வீட்டு மாடிக்கு சென்றபோது, மாடி முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்கள் இறைந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அதனைச் சேகரித்ததில் 2 லட்ச ரூபாய் இருந்துள்ளது. அதன்பின்னர் வீட்டுக்குள் இறங்கி கதவைத் திறந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், பீரோவுக்குள் மேலும் 5 லட்சம் பணம் இருந்தது. நடராஜன் - விமலா தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், இது தங்கள் சொந்தப் பணம் எனத் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை கே.வி.குப்பம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இது துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர்ஆனந்த் பணம் எனத் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே பகை உள்ளது, அதுதொடர்பாகக் காவல்நிலையத்தில் வழக்குகளும் உள்ளன. கைப்பற்றப்பட்ட பணம், வாக்காளர்களுக்குத் தருவதற்காக தேசிய கட்சி வேட்பாளர் கொடுத்துவைத்துள்ளதென்றும், ஒவ்வொரு ஊரிலும் சிலரிடம் இதுபோல் பணத்தைப் பதுக்கியுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர்! இவங்களே வைப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்!

ee

Advertisment

ரூர் தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியே மீண்டும் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. சார்பில் தங்கவேல் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். 1996க்கு பிறகு, 28 ஆண்டு களை கடந்து மீண்டும் பா.ஜ.க. தனியாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. பா.ஜ.க. செந்தில்நாதன், ஏற்கெனவே அ.தி. மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்துள்ளதால் இம்முறை வெற்றிபெறும் நம்பிக்கையில் இருக்கிறார். இத்தொகுதியிலுள்ள 3 வேட்பாளர்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சமுதாய வாக்குகள் 3 பேருக்கும் சரிசமமாகப் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொகுதியின் வளர்ச்சிக் காகத் தான் செய்துள்ளவற்றை எடுத்துக்கூறி, "ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. எனவே மோடிக்கு எதிராக தொடர்ந்து என்னுடைய குரலை உயர்த்துவேன்'' என்று காங்கிரஸின் ஜோதிமணி செய்யும் பிரச்சாரத்துக்கு மக்கள் ஆதரவு பெருகுவதால், காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க கரூர் மக்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஜோதிமணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசம்!

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நெல்லையில், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் சுணக்கம் பற்றி முதல்வருக்கு தகவல் வர, தொகுதிப் பொறுப்பை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார் முதல்வர். கிழக்கு மாவட்ட தி.மு.க. மா.செ. ஆவுடையப்பனின் பொறுப்பிற்குட்பட்ட திசையன்விளை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கூட்டத்தில், திசையன்விளை நகர செயலாளரான ஜான்கென்னடி மற்றும் அவரது ஆதரவாளர்களும் இருந் தனர். மாவட்டம் ஆவுடையப்பன் ஆப்சென்ட். கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "போன உள்ளாட்சித் தேர்தலில் மாவட் டமும், ந.செ. ஜான்கென்னடியும் மறைமுகமா அ.தி.மு.க.விற்கு சப்போர்ட் பண்ணதால அ.தி. மு.க.வின் ஜான்சிராணி பேரூ ராட்சித் தலைவியானார். நம்ம கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப் பட்டார். அத மாதிரி இந்தத் தேர்தல்ல பா.ஜ.க.வுக்கு மறைமுகமா சப்போர்ட் பண்ணது தெரிஞ்சா, தலைமைக்கு ரிப்போர்ட் பண்ணிடுவேன். கடுமையான நடவடிக்கை பாயும்' என்றதும் அரங்கில் சலசலப்பு. அசராத அனிதா, ந.செ. ஜான்கென்னடியை ஒதுக்கிவிட்டு, எம்.பி. தேர்தலுக்கான திசையன் விளை நகர பொறுப்பாளர்கள் என்று ஒ.செ. வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நெல்சன், எம்.என்.கண்ணன், ரமேஷ் ஆகிய நால்வரின் பெயர்களை அறிவிக்க, கூட்டத்தில் சலசலத்தவர்கள், "நகரத்திற்கு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுப்பாளராக்கி யிருக்கிறீர்கள். அப்ப ஒன்றியத்திற்கு யார் பொறுப்பாளர்?'' என்று கேட்டதும். "ஒன்றியத்துக்கு நான்தான்யா பொறுப்பாளர். தேர்தல் வேலையப் பாருங்கய்யா'' என அதட்டலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பவும், எழுந்த சலசலப்பு சைலண்ட் மோடுக்கு வந்திருக்கிறது. அரசியலில் அதிரடிக்குத்தான் பவர் அதிகம்!

ss

திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், வேட்புமனுத் தாக்கலின் போதே திருப்பூர் குமரன் சிலைக்கு காவியை உடுத்திவிட்டு களங்கப்படுத்தினார். இந்நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி, ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், அலுவலர் முருகேசன் தலைமையிலான பறக்கும்படையினர், வாகனச் சோதனைக்காக முருகானந்தத்தின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் முருகானந்தமோ காரை நடுச்சாலையில் நிறுத்தி, அலுவலர் முருகேசனைப் பார்த்து, "யாருயா நீ? அடையாள அட்டையக் காட்டு'' என அதட்டியதோடு, "உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்! ஜூன் 4க்கு பிறகு பாருங்கடா'' என பகிரங்கமாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது இவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முருகானந்தத்தின் முதல் மனைவியின் தந்தையான சுந்தரசாமி கூறுகையில், "என் மகளை திருமணம் செய்து அவருக்கு இறப்பைக் கொடுத்த பாவி இந்த முருகானந்தம். அடுத்தவன் மனைவியை அபகரித்து சொந்தம் கொண்டாடிய நபர். பெண்கள் விஷயத்தில் மோசமான ஆளுங்க. 20க்கும் மேற்பட்ட வழக்குகள் முருகானந்தத்தின் மேல் உள்ளது. இந்த நபரை திருப்பூர் தொகுதி மக்கள் நிராகரிக்க வேண்டும்'' என்றார். வேட்பாளராக இருக்கும்போதே இம்புட்டு அதுப்பா?!

-ராம்கி, ஜீவா, எஸ்.பி.எஸ்., சக்தி, ராஜா, பகத், மகேஷ், இளையராஜா, இராம்குமார், காளிதாஸ்