போர்முனையில் சொந்த நாட்டில் (ஈழம், ஈரான்) வாழ வழியின்றி இந்தியாவிற்கு வந்து, குடி யுரிமையின்றி அகதிகளென்ற அடையாளத்தோடு வாழ்ந்து, தங்களது குடி யுரிமைக்காக உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடல் பயணம் செய்த ஈழத்தமிழர்கள், ஈரானியர்கள் பல ஆயிரம் பேர். ஆனால் கடந்த 12 வருடங்களாக சுமார் 12 ஆயிரம் பேருக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா கிடைக்காததால், தங்கள் உழைப்பால் கிடைக்கும் வருவாய், உணவு, உறைவிடம், மருத்துவச் செலவுக்கே சரியாகப் போவதால் அவர்களின் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால், எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள், மருத்துவ அடையாள அட்டை கொடுங்கள் என்று தொடர்ந்து போராடும் இலங்கை, ஈரான் மக்கள் சார்பாக 22 பெண்கள், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மெல்போனிலிருந்து பாராளுமன்றம் நோக்கி 670 கி.மீ. நடைபயணத்தை தொடங்கி, கடுமையான பாதைகளைக் கடந்து, அக்டோபர் 18ஆம் தேதி கான்பராவிலுள்ள ஆஸ்திரேலிய பாராளு மன்றம் முன்பு, பல ஆயிரக்கணக்கானோ ருடன் கூடி நின்று தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் களைச் சந்தித்தும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கை நடைபயணம் குறித்து அந்த பெண்கள் கூறும்போது, "நியாயமான எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 22ஆம் தேதி பயணத்தை தொடங்கினோம். எங்கள் சின்னக் குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம். நடைபயணத்தில் கால் வலியால் அவதிப்பட்டோம். ஆனாலும் எங்கள் கோரிக்கையை திட்டமிட்ட நாளில் பாராளுமன்றம் முன்பு கூடிச் சொல்ல வேண்டும் என்பதால் வலிகளை பொறுத்துக் கொண்டு பயணித்தோம். நடைபயணத்தில் ஷ்யாமளா சசிக்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பயணத்தில் கலந்துகொண்டார். பரமேஸ்வரி மோகனின் குழந்தைகள் உள்பட பலர் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் போய்ப் பார்க்கக்கூட எங்களுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்க முடியாமல் கண்ணீரோடு தவிக்கிறோம். 18ஆம் தேதி புதன்கிழமை பல ஆயிரம் பேர் பாராளுமன்றம் முன்பு கூடிநின்று அமைதியான முறையில் எங்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறோம். எங்களின் இந்த நடைபயணப் போராட்டம், அரசாங்கத்திடமும், அரசாங்க பிரதிநிதிகளிடமும் சற்று மனமாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம். நிச்சயம் எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிரந்தர விசா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது'' என்றனர்.
இவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாக தினுஷன் என்ற இளம் கிரிக்கெட் வீரரும் 1400 கி.மீ. சைக்கிள் பயணம் செய்து கான்பரா பாராளுமன்றம் முன்பு திரண்டிருந்த பொதுமக்களுடன் கலந்துகொண்டார். தினுஷன் நம்மிடம், "இலங்கையில் பிறந்த நான் அங்கே வாழ முடியாது என்ற நிலையில் சின்ன வயதில் பெற்றோருடன் இந்தியா வந்து, 22 ஆண்டுகள் இந்தியாவில் பல முகாம்களில் வாழ்ந்தோம். உணவும், வசிப்பிடமும் கொடுத்த இந்திய அரசாங்கம் எங்களுக்கு குடியுரிமை தரவில்லை. நான் அனுமந்தை அரசுப் பள்ளியில் படிக்கும்போது தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கினார் கள். அப்போது என்னோடு 3 மாணவர் களுக்கு தரவில்லை. எங்களுக்கு மனசு வலித்தது. நமக்கென்று ஒரு நாடு இருந்தால் இப்படி ஒதுக்கப்பட்டி ருப்போமா? ஓ.சி. என்று எங்களுக்கு சான்று கொடுத்தார்கள். சக மாணவர்கள் எங்களை 'ஓசி' என்றழைக்கும்போது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்த வலிகளைப் பொறுத்துக் கொண்டு 22 ஆண்டுகள் வாழ்ந்தோம்.
அதன் பிறகுதான் கடுமையான பயண மென்பதை உணர்ந்தே 14 நாட்கள் கடலில் பயணித் தோம். பயணத்தின் இடையே திசைகாட்டி பழுதானதால் 2 நாட்கள் கடலில் தவித்துப் போனோம். நாங்கள் வந்தவுடன் உணவு கொடுத்து உபசரித்து தங்க வைத்தார்கள். சில மாதங்களில் தற்காலிக விசா கிடைத்தது. ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் 6 மாத விசா தான். விசா காலம் முடிந்ததும் வேலை கேள்விக்குறியாகும். மறுபடியும் விசா பெற வேண்டும். இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. இதற்காகத் தான் நிரந்தர விசா வேண்டும் என்கிறோம்.
எனக்கு 33 வயதாகிறது எனக்கு பிறக்கும் குழந்தை குடியுரிமையோடு பிறக்கவேண்டும் என்பதற்காகவே திருமணத்தை மறுத்து வருகிறேன்.
நான் ஒரு கிரிக்கெட் வீரர். இந்தியாவில் பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவிலும் எனக்கு வாய்ப்புகள் வந்தும் பாஸ்போர்ட் எடுக்கமுடியாததால் தட்டிப்போனது. இதற்காகத்தான் எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு உயிரைப் பணயம் வைத்து வந்த எங்களை ஏமாற்றி நாடுகடத்தி விடாதீர்கள் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கென்று உரிமையோடு சொல்லிக்கொள்ள ஒரு நாடு வேண்டும். அது ஆஸ்திரேலியாவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்'' என்றார். அகதிகள் என்ற சொல்லை மாற்ற, நிரந்தர விசா கோரிக்கை போராட்டம் வெற்றிபெறட்டும்!