ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்பது போல அமைந்த சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம்- சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. சேலத்தில் தொடங்கி சென்னையில் முடியும் 277.3 கி.மீ. சாலைக்காக தமிழக அரசு, 2343 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது.
இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் என்பதால் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சென்றபோது, 'எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அரசாணையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தது. தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இரு தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8-ஆம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
"நெடுஞ்சாலை ஆணையத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம். முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைசெல்லும். ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்'’’என்ற தீர்ப்பின் ஒரு பகுதி அடிப்படையில் சேனல் களில் வெளியான நியூஸைப் பார்த்து விவசாயிகள் பட்டாசு வெடித்தனர். ஆனால் தீர்ப்பின் மற்றொரு பகுதி, "மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம்' என்று கூறியிருந்தது.
சேலம் ராமலிங்கபுரத்தில் அதிருப்தியுடன் ஒன்றுகூடிய 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்துசெய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்கவேண்டும் என்று முழக்கமிட்ட னர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல் துறை தனிப்பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி. உள் ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல் துறையினரும் வாகனங்களுடன் வந் திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது. எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் நம்மிடம்...
""சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறுகிறது. இந்த அறிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ- 2020 அறிவிக்கையை சட்டமாக்கிவிட்டு, அதன் பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வதுபோல் இருக்கிறது.
டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப்போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண் ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்க வும் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.
தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, ""எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத் தாலும், நிலத்தை வகைமாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும்கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். இந்த திட்டமே தேவை இல்லை என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. ஒரு திட்டம் நிறை வேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டிருப்பது கவலையளிக்கிறது'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.
விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு.
-இளையராஜா