யம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ எனச் சொல்வதுபோல, எடப்பாடி அணியும் பன்னீர் அணியும் ஒரு தினுசான அரசியலைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சி என்றால், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களுக்காக, ஆளும்கட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டங்களை நடத்துவது, வழக்கத்தில் உள்ளதுதான். இத்தகைய கூட்டங்கள், மக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துவது போலவும் இருக்கும். ஆளும்கட்சியைத் தாக்குவதற்கு வசதியாகவும் இருக்கும். ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் முட்டல் மோதல்களால், சில பொருமல்கள்தான் வேறுவிதமாக வெளிப்படுகின்றன.

eps

Advertisment

"தென்மாவட்ட முக்குலத்தோர் ஆதரவு எங்களுக்கே'’என எடப்பாடி அணிக்கு, பன்னீர் அணி ‘தண்ணி’ காட்டிவரும் நிலையில்... "தென்மாவட்டமும் என் மாவட்டமே'’என ஒரு சுற்று சுற்றி வந்து, கிலி கிளப்பத் திட்டமிட்டு, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டங்களின் பெயரால் சிவகாசியிலும், மதுரையிலும் ‘பல்ஸ்’ பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் சிவகாசியில் நடந்த கூட்டத்துக்கு வரும் எடப்பாடிக்கு எரிச்சல் உண்டாக்க, "எங்க ஏரியா உள்ள வராதே'’என்கிற ரீதியில், முதலில் போஸ்டர் ஒட்ட திட்டமிட்டது பன்னீர் அணி. எடப்பாடிக்கு கருப்புக்கொடி காட்டி, வசைபாடவும் முடிவு செய்தது. இதைக் கேள்விப்பட்ட பன்னீர் தரப்பின் முக்கிய பிரமுகர், "‘இது சரிவராது, இப்படி செய்தால், வட மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ். செல்லும் போது, எடப்பாடி தரப்பினரும் இதே ரீதியில் நடந்தால், அவமானப்பட நேரிடும்...'’என ‘நோ’ சொல்லியிருக்கிறார். அந்தப் பிரமுகரிடம் ‘எடப்பாடியின் வாகனத்தை நேரடியாக மறித்து கோஷம் போடுவோம். உடனே, வாகனத்திலிருந்து ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் இறங்கு வார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களைத் தாக்குவோம். எங்களுக்கு உயிர் பயம் இல்லை. வழக்கு பயமும் இல்லை. ஜாமீனில் எடுப்பதற்கான செலவு மற்றும் குடும்பச் செலவுக்கு தலைக்கு ரூ.10 ஆயிரம் தந்தால் போதும்.’ என்று பன்னீர் அணியின் பலத்தைக் காட்ட துடித்திருக்கின்றனர். கூட்டிக்கழித்து கணக்கு பார்த்த அந்தப் பிரமுகர், "வன்முறை சரிவராது...'’எனப் பின்வாங்கியிருக்கிறார்.

பலசாலிகளின் வேகம் தடைப்பட்டுவிட, அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பு என்ற பெயரில், ‘"ஒரே சாதிக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதியினரை வஞ்சித்த எடப்பாடி அவர்களே! எங்கள் பகுதிக்கு வராதீர்!'’ என நாகரிகமாக விருதுநகர் மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

ee

Advertisment

ஏற்கனவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனப் பேசிவருகிறார் எடப்பாடி. விருதுநகர் மாவட்டத்தில் அவருக்கு ஏதாவது நேர்ந்தால்? அவ்வளவுதான்!’என பன்னீர் அணியினரின் நடவடிக்கைகளை ‘ஸ்மெல்’ செய்து ‘அலர்ட்’ ஆன காவல்துறையினர், விருது நகரில் ஓ.பி.எஸ். அணியின் நகரச் செயலாளர் ராஜ்குமார், இளைஞரணிச் செயலாளர் காளி ராஜ் உள்ளிட்ட 32 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

ee

கூட்ட ஏற்பாடுகளில் பிரம்மாண்டத்தைக் காட்டி எடப்பாடியைக் குஷிப்படுத்துவது மதுரை மாவட்டமா? விருதுநகர் மாவட்டமா? என்ற போட்டியில், சுலபமாக பெயரைத் தட்டிச் சென்ற ராஜேந்திரபாலாஜி கண்டனக் கூட்டத் தில் மைக் பிடித்தபோது, "ஒரு சமுதாயத்திற்கு எதிரானவர் எடப்பாடியார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அவர் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாதுகாவலர். இந்தக் கூட்டத்துக்கு முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், நாயுடு சமுதாயத்தினர், முத்தரை யர், இஸ்லாமிய சகோதரர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய பெருமக்களும் பல்லாயிரக்கணக்கில் பெரும் திரளாக வந்திருக்கின்றனர். அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் எடப்பாடியார்...''’என, தென்மாவட்ட சூழலை மனதில் வைத்தே பேசினார். எடப்பாடி பழனிசாமியோ, "கமிஷன்... கலெக்ஷன்... கரப்ஷன்..''’என தி.மு.க. ஆட்சியை வழக்கம் போல் ஒரு பிடி பிடித்துவிட்டு “இதுதான் திராவிட மாடல்...'' ’என கிண்ட லடித்தவர், பொதுமக்களுக்கு எதிராக தி.மு.க. அமைச்சர் களின் வாய் நீளுவதைப் பட்டியலிட்டு, "தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்'’என கோரிக்கையும் விடுத்தார்.

கடந்த 15-ஆம் தேதி விருதுநகரில் முப்பெரும் விழா நடத்திய தி.மு.க.வுக்கு இருந்த அதே சென்டிமென்ட், 2014-ல் ஜெயலலிதா பேசிய இடத்தில் தற்போது எடப்பாடியை பேச வைத்த அ.தி.மு.க.வுக்கும் இருக் கிறது. பாராளுமன்றத் தேர்தல் வெற்றியைக் குறிவைத்தே கண்டனக் கூட்டம் நடத்தினர். ஆனாலும், தன் பலத்தைக் காட்டுவதற்காக எடப்பாடி மேற்கொள்ளும் சுற்றுப்பய ணத்தால், தென்மாவட்டங் களில் டென்ஷனோ டென்ஷன்

_____________

மணலில் கயிறு திரிக்கும் பன்னீர் அணியினர்!

சிவகாசி பொதுக்கூட்ட பந்தலுக்கு வெளியே அரட்டை யடித்துக்கொண்டிருந்தார்கள் அக்கட்சியினர். அந்த நான்கைந்து பேரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது பேச்சில் வெளிப்பட்டது.

eps

"முக்குலத்தோரை, எடப்பாடி பகைத்துக்கொள்வது தேவைதானா?'’என்ற கேள்வியை அவர்களில் ஒருவர் முன்வைக்க... அந்த இடம் ரசாபாசமானது. அவர்கள் பேசிய நேர்மையான கருத்துக்களின் சாராம்சம் இதுதான்...

"அ.தி.மு.க. எப்போது முக்குலத் தோர் வசமானது? எம்.ஜி.ஆர். காலத்திலா? ஜெயலலிதா காலத்திலா? முன்னணி நடிகையாக இருந்ததால், ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் பணத்தாசை இருந்திருக்காது. தனிப்பட்ட சொந்தபந்தங்கள்கூட அவருக்கு இல்லை. பிறகு, யாருக்காக ஊழல் செய்து பணம் சேர்க்கவேண்டும்? குழந்தை இல்லை என்றாலும் சசிகலா தனி ஆள் கிடையாது. அவருடைய உறவு வட்டம் மிகப்பெரியது. அவர்கள் அத்தனை பேருக்கும் பெருமளவில் படியளக்க, பணத்தேவை மிக அதிகமாக இருந்தது. உறவுக் கூட்டம் அவரை மொய்த்தது. அதனால், அவர்கள் அனைவருக்கும் படாடோப வாழ்க்கை கிடைத்தது. உடன்பிறவா சகோதரியை பக்கத்தில் வைத்திருந்த தாலேயே, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு பாய்ந்தது, சிறை செல்லவும் நேர்ந்தது. இப்பேர்ப்பட்ட சசிகலாவை திரும்பவும் அ.தி.மு.க.வில் எதற்காக சேர்க்கவேண்டும்? சசிகலாவோ, டிடிவி தினகரனோ, பன்னீர்செல்வமோ, இவர்களால் தனிப்பட்ட முறையில் முக்குலத்தோர் என்ன பயனடைந்தார்கள்? தி.மு.க. விலும், அ.தி.மு.க. எடப்பாடி அணியிலும் முக்குலத் தோர் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அப்படியென்றால், பன்னீர் அணியில் இருப் பவர்கள் மிகமிகச் சொற்ப மானவர்களே? அதுவும்கூட, தேனி, பெரியகுளம் பகுதிகளில்தான்.

எடப்பாடிக்கும் சாதிப்பாசம் இல்லாமல் இல்லை. அதற்காக சாதிரீதியாக யாரையும் அவர் அணி திரட்டவில்லை. மாறாக, பணத் தாலேயே அடிக்கிறார். இந்த மூவரால் என்ன செய்துவிட முடியும்? வாக்குகளைப் பிரித்து அ.தி.மு.க.வோ, எடப்பாடியோ ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட முடியும்? அதைத்தான் செய்துவருகிறார்கள்.

இம்மூவரையும் எதிர்க்கும் எடப்பாடியின் துணிச்சலை, பிற சமுதாயத்தவர் ரசிக்கிறார்கள். அதனால், தென் மாவட்ட சுற்றுப்பயணத்தின் மூலம் அந்த மக்களின் வாக்குகளை எடப்பாடியால் கவரமுடியும். இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான், தென் மாவட்டங்களில் எடப்பாடியின் கை ஓங்கிவிடக் கூடாதென்று, எதிர்ப்பு போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது, சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது என மணலில் கயிறு திரிக்கிறார்கள் பன்னீர் அணியினர்.