வேகவேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் தீவிர பொது முடக்க நடவடிக்கையில் இறங்கியதில், முதற்கட்டமாக அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்து சேவையை நிறுத்தியது. திடீரென உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தமிழர்கள் ஆங்காங்கே முடங்கினர். குறிப்பாக கிழக்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கில் முடங்கினர்.
வெளிநாடுகளில் முடங்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு "வந்தே பாரத்' என்ற மீட்பு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. மே 7ஆம் தேதி அன்று தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் முதற்கட்டத்தில் 84 சேவைகளைப் பிறநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வழங்கியது. அதில் 10 சேவைகள் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட்டன. ஆனால், இரண்டாம் கட்டத்தில் 260 சேவைகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ஒன்றுகூட இல்லாதிருந்த நிலையில், நக்கீரனில் இதுபற்றி நீண்ட கட்டுரையை மே30-ஜூன்2ஆம் தேதியிட்ட இதழில் வெளியிட்டோம். நக்கீரன் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ இதன் எதிரொலியாக உடனடியாக, ‘வந்தே பாரத்’ 2ஆம் கட்ட மீட்பு கட்டத்தில் மொத்தமுள்ள 186 சேவைகளில், தமிழ்நாட்டிற்கு 11 சேவைகள் வழங்கப்பட்டன.
வந்தே பாரத் 2ஆம் கட்ட மீட்பு கட்டத்தில் மொத்தமுள்ள 128 சேவைகளில் வளைகுடா நாடுகளில் இருந்து 10 சேவைகளும் கிழக்காசிய நாடுகளில் இருந்து 22 சேவைகள் என மொத்தம் 32 சேவைகள் வழங்கப்பட்டன. இதில் சிங்கப்பூரில் இருந்து மட்டும் 15 சேவைகள், கோலாலம்பூரில் இருந்து 5 சேவைகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் 3-வது கட்டமாக ஜூன் 11ஆம்தேதி தொடங்கி ஜூன் 30 வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தற்போது வந்தே பாரத் மூன்றாவது கட்ட மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதில் வளைகுடா, கிழக்காசிய நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு விமான சேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இன்றைய அளவில் (14/6/2020) அனுமதிக்கப்பட்ட 544 மீட்பு விமானச் சேவைகளில், தமிழ்நாட்டிற்கு, அர்மீனியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஸ்வீடன், யுனைட்டெட் கிங்டம், உக்ரைன், யூ.எஸ்.ஏ உட்பட்ட நாடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மீட்பு விமான சேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி வழக்கமாக மீட்பு சேவைகள் வழங்கி வந்த பொதுத்துறை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் மட்டுமன்றி தனியார் விமான நிறுவனங்களான, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், விஸ்த்தரா மற்றும் கோ ஏர் ஆகியவையும் முழுவீச்சில் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று வரை திருச்சிராப்பள்ளிக்கு மட்டும் மாலத்தீவின் மாலே மற்றும் சவுதி அரேபியாவின் தம்மாமில் இருந்து மீட்பு விமானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது தவிர அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட யுஏஇ, ஜித்தா, ரியாத் உள்ளிட்ட சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் நாடுகளில் இருந்து அனுமதிக்கப்பட்ட தனியார் விமா னங்களைக் குத்தகைக்கு எடுத்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்பினர் முயன்று வருகின்றனர். ஆனால் பொதுத்துறை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமான நிறுவனங்களின் கட்டணத்தைவிட இந்தத் தனியார் விமானங்களின் கட்டணம் மிக அதிகம் என்பதால் மக்கள் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இருப்பினும் தமிழ்நாடு அரசானது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துப் பொதுத்துறை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை அதிகமாக இயக்கினால், அதுவும் அதிகத் தேவையுடைய யுஏஇ, சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்கு இயக்கினால், வேலை இழந்து, செலவுக்குப் பணம் இன்றி மிகக்கடுமையான மன உளைச்சலில் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் என்பதே வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனைத் தமிழக அரசு கவனித்து நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி. இதற்காக தோழமை சக்திகளை ஒருங் கிணைத்து காணொலி வழியே போராட்டத்தை நடத்தியதுடன், எந்தெந்த வெளிநாடுகளில் தமிழர்கள் தவிக்கிறார்கள் என்ற விவரங்களைத் திரட்டி, முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.
நக்கீரனிடம் இது குறித்துப் பேசிய தமீமுன் அன்சாரி, ""அதிகளவிலான தமிழர்கள் வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர்-மலேசியா போன்ற நாடுகளிலும் உள்ளனர். அதுபோல, ஐரோப்பிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களை நம்பி தமிழகத்தில் 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கான அந்நிய செலாவணியைப் பெருக்குவதில் இவர்களின் பங்களிப்பு அதிகம். பல .ஊர்களில் பள்ளிக்கட்டடங்கள், சமூக நலக் கூடங்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் பராமரிப்பு ஆகியவற்றை இவர்கள் மேற்கொண்டு, தமிழ்நாட் டின் உள்கட்டமைப்பிலும் பங்காற்றி வருகின்றனர்.
தற்போதைய பேரிடர் சூழலில் அவர்களைப் பாதுகாப்பாக, தாயகம் அழைத்து வர வேண்டிய மத்திய-மாநில அரசுகளின் கடமை. அதனால்தான், இதனை ஒரு தொடர் முயற்சியாக எங்கள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. முதல்வரின் கவனத்திற்கும் இதனைக் கொண்டு செல்கிறேன். வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்றி வைக்கும் என நம்பு கிறேன்''’என்றார். அனைத்துத் தரப்பின் நம்பிக்கை யும் எதிர்பார்ப்பும் அப்படித்தான் உள்ளது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக இருந்தது. கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்கள், திருச்சியிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் ஏறியபோது, டிக்கெட் கட்டணம் 1000 ரூபாய் என்றதும் அதிர்ந்து போய்விட்டனர்.
திருச்சியிலிருந்து திருவாரூர் 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதற்கு அரசுப் பேருந்தில் இவ்வளவு கட்டணமா என்று பேருந்துகளை இயக்கிய நிர்வாகிகளிடம் பயணிகள் கேட்டபோது, "இஷ்டம் இருந்தால் ஏறு'’என்பது போன்ற பதில்களே வெளிப்பட்டன. ""மூணு மாசமா வெளிநாட்டில் வேலை இல்லை. இப்பதான் ஃப்ளைட் கிடைத்தது. சேமிச்சி வச்சிருந்த பணத்தைப் போட்டு டிக்கெட் எடுத்துட்டு வந்தோம். கைச்செலவுக்கு கொஞ்சம் தான் பணம் இருக்கு. இதில் அரசு பஸ்ஸூக்கு ஆயிரம் ரூபாய் என்றால் என்ன செய்ய முடியும்?'' என்று ஒரு பயணி புலம்பினார். பெண் பயணி ஒருவர் தன்னிடம் 300 ரூபாய்தான் இருக்கிறது என்றபோது, அவரிடம் அரசு அதிகாரி ஒருவர், “பணம் இருந்தால் பஸ்ஸில் ஏறுங்க. இல்லைன்னா, உங்களுக்கு டெஸ்ட் பண்ணி, தனிமைப்படுத்திடுவோம். முகாமுக்கு போங்க என்று சொன்னது சுற்றி இருந்தவர்களை அதிர வைத்தது.
தாயகம் திரும்பினால் நிம்மதியாக இருக்கலாம் என இத்தனை மாத காலப்போராட்டத்திற் குப் பிறகு வந்தவர்களை வஞ்சிக்கிறது தமிழக அரசு.
-ஜெ.டி.ஆர்.