கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தமிழகத்தின் ஆளுங் கட்சியாகத் தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும் கோவையின் 10 தொகுதிகளிலும் தோற்றுப் போனது. பொள்ளாச்சி பாலியல் கொடுமையால் நாடே அ.தி.மு.க. மீது கோபமுற்று இருந்த நிலையில், அந்தத் தொகுதியில் 1700 ஓட்டு கள் வித்தியாசத்தில் தி.மு.க. தோற்றது.
தெற்கு மா.பொறுப்பாளர் தென்றல் செல்வராஜூம், தமிழ் மணியும் சரியாக செயல்படாமல், அ.தி.மு.க வியூகத்திற்கு சாதகமாக அமைந்ததும்தான் தோல்விக்கு காரணம் என்பதை நக்கீரன் அம்பலப்படுத்தியது. கள நிலவரத்தை ஆராய்ந்த தி.மு.க தலைமையும் தனது களையெடுப்பைத் தொடங்கியுள்ளது.
மாவட்டப் பொறுப்பாளரான தென்றல் செல்வராஜின் பதவியை, பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளராக நின்ற டாக்டர் வரதராஜனுக்கு வழங்கியுள்ளது தி.மு.க தலைமை. ஏற்கனவே பொள்ளாச்சி நகரச் செயலாளராகவும், வேட்பாளராகவும் இருந்திருந்தாலும் களப்பணியில் டாக்டர் அதிகம் ஈடுபட்டதில்லை என்கிறார்கள் தொண்டர்கள்.
தேர்தல் நேர அறிமுகக் கூட்டத்தில் பேசிய டாக்டர் வரதராஜன், "பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மட்டும் பொள்ளாச்சி ஜெயராமன் அண்ணன் பெயர் அடிபடாமல் இருந்தால்... அவரை எப்போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது'' என அ.தி.மு.க. தரப்புக்கு ஆதரவாய்ப் பேசிய சர்ச்சையும் எழுந்தது.
தனது தோல்விக்கு காரணம் என மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கே.வி.கே. சபரி கார்த்திகேயன் மீதும் தலைமைக்குப் புகார் தெரிவித்திருந்தார் டாக்டர் வரதராஜன். சபரி தனக்கு சீட் எதிர்பார்த்து அதற்கான பிரச்சார வேனையும் ரெடி செய்திருந்த நிலையில், வரதராஜனுக்கு சீட் என்றதும் வருத்தத்தைத் தாண்டி, அவருக்காக பிரச்சாரம் செய்து, தனது வாகனத்தையும் கொடுத்து உதவினார் என்கிறார்கள் சபரி தரப்பினர். கோவை மாவட்டத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்த நெகமம் கந்தசாமியின் பேரன்தான் சபரி.
மாவட்ட நிர்வாகம் மாற்றப்பட்டால் சபரிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவருடைய ஏரியாவில் உதயசூரியனுக்கு வாக்கு குறைந்துவிட்டது என தலைமையிடம் சொல்லி, தனக்கு அந்தப் பதவியைப் பெற்றுவிட்டார் என டாக்டரின் அரசியல் ஆபரேஷன் பற்றிச் சொல்கிறார்கள் சபரி தரப்பு உடன்பிறப்புகள்.
களையெடுத்தாலும் பயிர் வளராதபடி, களைகளே வளர்கின்றன மேற்கு மாவட்ட தி.மு.க.வில்.
அறிவாலயம் ஸ்பெஷல் ஆபரேஷன் செய்தாக வேண்டும்.