"சுண்டி இழுக்கும் ஜல்சா மசாஜ்கள்! -தடம் மாறும் இளைஞர்கள்!' என்ற தலைப்பில் கடந்த செப்.3 இதழில் திருச்சியில் சிற்றின்ப வியாபாரத்தில் இறங்கிய சில மசாஜ் (spa)சென்டர்களை பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம்.

trichy

நம் செய்தியின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி களம் இறங்கிய 5 தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில், 5 மசாஜ் சென்டர்கள் நடத்திய ஐந்து ஆண்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பத்து பெண்களை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் உரிமம் பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தியது தெரிய வந்தது. அதன் பேரில் ஐந்து பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டனர். அங்கிருந்த பெண்கள் மீட்கப் பட்டு அரசு பெண் கள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

மேலும் இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக மசாஜ் சென்டர்கள் இயங்குவது கண்டறியப்பட்டால் அந்த மசாஜ் சென்டர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் எச்சரித்தார். 10 பெண்களை மீட்ட தனிப்படை போலீசாரை ஆணையர் பாராட்டினார்.

அதேபோல் திருச்சியில் உலா வரும் கஞ்சா செய்தியையும் விரிவாக வெளியிட்டிருந்தோம். இதனையடுத்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன் உத்தரவின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அதற்கென்று தனிப்படை அமைத்து ராம்ஜிநகர் கஞ்சா வியாபாரிகள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சப்ளை செய்த கஞ்சா வியாபாரிகளை கைது செய்யும் நோக்கில் போலீசார் தேடி வருகிறார்கள்.

உடனடி நடவடிக்கை எடுத்த, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கும் பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இரண்டாவது தலைநகர் எனப்படும் திருச்சியில் நடைபெறும் இத்தகைய அக்கிரமங்களை உடனடியாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நக்கீரனின் துணிச்சலுக்கும் சபாஷ் போடுகிறார்கள் திருச்சி வாசிகள்.

-மகேஷ்