வானம்-கடல் எல்லாவற்றையும் கண் கொத்திப்பாம்பாக கண்காணிப்பதாக நம்பிக் கொண்டிருந்த மத்திய புலனாய்வுத்துறை, என்.ஐ.ஏ, ரா எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது தமிழகத்தில் நடந்த அந்த மர்ம மரணம். இந்திய அமைப்புகள் கோட்டை விட்டதை மோப்பம் பிடித்து சொன்னது, இலங்கை நுண்ணறிவுப் பிரிவு.
கோவையில் மரணமடைந்து, மதுரையில் தகனம் செய்யப்பட்ட ஃபுட் சப்ளிமெண்ட் தொழில் செய்துவந்த பிரதீப்சிங் என்பவர் வேறு யாருமல்ல, சர்வதேச அளவில் தொடர்புகளுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் "அங்கோடா லொக்கா' என்பதுதான் இலங்கை தந்த அதிர்சித் தகவல்.
இலங்கையில் நிழலுலக தாதாவாக வலம் வந்தவர் அங்கோடா லொக்கா. 2017 இலங்கையின் வடக்குப் பகுதி சிறைச்சாலை வாகனம்மீது லொக்கா நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவனது பரம எதிரியான தாதா சமயம் என்பவரின் ஆட்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இலங்கையிலுள்ள தனது கழுகுப் பண்ணையிலிருந்து மிக பிரம்மாண்டமான ராஜாளி கழுகுகளை வளர்த்தவர் அங்கோடா. 15 கிலோ போதைப் பொருளைக்கூட அசால்டாக தூக்கிவரக்கூடிய இந்த ராஜாளிகள், நடுக்கடல் பகுதியில் கப்பல்களைத் தேடிச்சென்று அங்கிருந்து போதைப் பொருட்களை டெலிவரி எடுத்துக்கொண்டு அங்கோடா இருக்கும் பகுதிக்கு கொண்டுவந்து சேர்க்குமாம். இதனாலேயே இலங்கை மக்கள் "கழுகுக் கள்ளன் அங்கோடா'’என்று அழைப்பார்கள். கொலை, கொள்ளை, ரியல்எஸ்டேட், மாஃபியா, போதைப்பொருள் கடத்தல் என்று அனைத்து விதமான குற்றச்செயல்களிலும் வித்தை காட்டியிருக்கிறான் அங்கோடா லொக்கா.
இரண்டு வருடங்களுக்கு முன்பே இலங்கை போலீசாருக்குப் பயந்து இந்தியாவுக்கு தப்பிவந்து கோவையில் குடியேறியிருக்கிறான் அங்கோடா. தனது குடியுரிமையை மறைத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப்சிங் என்கிற பெயரில் தங்கியிருந்திருக்கிறான். கூடவே அமானி தான்ஜி என்னும் இலங்கைப் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி மாரடைப்பு எனக்கூறி கொண்டுவரப்பட்ட பிரதீப்சிங் என்கிற அங்கோடா இறந்துவிட்டதாக கூறப்பட்டதால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையை முடித்துக்கொண்டு, மதுரை ரயிலார் நகரில் அவரது வீடு இருப்பதாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போலி ஆதாரைப் பயன்படுத்தி அவனது உடலை மதுரைக்குக் கொண்டுவந்து எரித்துள்ளனர்.
மதுரை தத்தநேரி மின்மயானத்திற்கு அங்கோடா லொக்காவின் சடலத்தை கொண்டுவந்து எரித்ததாக அவருடன் வசித்த அமானி தான்ஜி, உதவிய ஈரோட் டைச் சேர்ந்த தியானேஸ்வரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமிசுந்தரி ஆகியோர் கைதுசெய்யப் பட்டனர். அம்பானிதான்ஜி கர்ப்பமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கைக்கு வந்திருக்கிறது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கோடா லொக்கா மதுரையில் 3 மாதம் தங்கியிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதற்காக 2 லட்ச ரூபாய் கொ டுத்து சிவகாமிசுந்தரி தனது வீட்டருகிலேயே ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டு உரிமையாளர் லட்சுமியின் ரேஷன் கார்டை வாங்கி அதிலிருந்து முகவரி மூலம் லோகாவிற்கு போலியான ஆதார் கார்டு தயாரித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் லெட்சுமியை இதுதொடர்பாக நாம் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோது தயங்கிபடியே பதிலளித்தார். ""எங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் வழக்கறிஞரான சிவகாமிசுந்தரிக்கு இரண்டு லட்ச ரூபாய் ஒத்திக்கு வீடு வாடகைக்கு விட்டோம். கடந்த 5 மாதங்களுக்கு முன்னரே அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்று விட்டார். எனது வீடு வேறு பகுதியில் இருப்பதால் நான் அங்கே அடிக்கடி சென்று பார்க்க முடிந்ததில்லை. எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்காக என்னுடைய குடும்ப அட்டையை சிவகாமிசுந்தரி வாங்கிச் சென்றார். சிவகாமி சுந்தரிக்கு மட்டும்தான் நான் வீட்டை வழங்கிய நிலையில் அவர் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தற்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது'' என தெரிவித்தார்.
கோவையில் இறந்தவரின் உடல் மதுரையில் எதற்காக எரிக்கப்பட்டது? சிவகாமிசுந்தரிக்கும் அங்கோடாவின் காதலி அமானிதான்ஜிக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? அவருக்கு இவர் போலியான ஆதார் அட்டை எடுக்க ஏன் உதவினார்? இதற்காக கைமாறிய பணம் எவ்வளவு? வேறு யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
மதுரை ரயிலார்நகரில் தங்கியிருந்த சிவகாமி சுந்தரியின் தாய், தந்தை மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர். இதுகுறித்த கூடுதல் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை வந்தனர்.
பெண் வக்கீல் சிவகாமி சுந்தரியின் மதுரை கூடல் புதூர் ரயிலார் நகர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 பாஸ்போர்ட் இலங்கை பணம் மற்றும் ஆவ ணங்கள் சிக்கின. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார், ""சிவகாமசுந்தரி வீட்டை உள்ளூர் போலீசாருடன் திறந்து சோதனை நடத்தப்பட்டது. வங்கிஆவணம் மற்றும் இலங்கை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும்போது அங்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’.’3 பாஸ்போர்ட் மற்றும் அவருடைய உடலை தகனம் செய்து கொண்டு வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளனர். அவர்கள் யார் என விசாரணை செய்து வருகிறோம்'' என்றார். சிவகாமி சுந்தரியின் அம்மாவிடமும் சி.பி.சி.ஐ.டி விசா ரணை நடத்தியுள்ளது. இதில், அவரது கணவர் தினகரன், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவர, வழக்கம்போல புலிகள் மீதான குற்றச் சாட்டாக்கி வழக்கை முடிக்கும் வேலைகளும் நடக்கின்றன.
இதற்கிடையே, கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் சிவகாமிசுந்தரியின் சட்டப் படிப்பு பற்றிக்கூட சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெங்களூரில் சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை வட்டாரம் தெரிவிக்கிறது. கணவன்- மனைவி பிரிந்து வாழ்ந்ததாக சொல்லப்படும் நிலையில், அதுவும்கூட சட்டரீதியான பாதுகாப்புக்காகத்தான் என்கிறார்கள் விவரமறிந்த வர்கள். சிவகாமிசுந்தரியின் கணவர் வினோதகன் மதுரையில் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியில் முக்கியத்துவம் பெற்றவர். அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் உள்ள செல்வாக்கினால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றவர் வினோதகன். அங்கோடா விவகாரத்தில் சிவகாமி சுந்தரி பெயர் அடிபடத் தொடங்கிய நிலையில், வினோதகன் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை முடக்கி வைத்துள்ளார்.
இலங்கை தரப்போ, தாதா அங்கோடா லொக்காவை அவனுடன் சேர்ந்து வசித்த அமானி தான்ஜி என்ற பெண் மூலம் அவனது எதிரிகள் விஷம் கொடுத்து கொன்றிருக்கவேண்டும். அங்கோடாவின் இறுதிச் சடங்குகள் அவனது சகோதரிகளில் ஒருவருக்கு வீடியோ காட்சிகளாக இங்கிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என கூடுதல் விவரங்களைத் தருகிறது.
அத்தனை எளிதில் அங்கோடாவைச் சாகடிக்கமுடியுமா... யாரோ ஒருவரின் பிணத்தை அவசர அவசரமாக எரித்துவிட்டு, இருநாட்டு காவல்துறை கண்களிலும் மண்ணைத் தூவப்பார்க்கிறான் அங்கோடா என்றும் இலங்கையில் இன்னொரு தரப்பு நம்பிவருகிறதாம். இந்திய உளவு அமைப்பான ரா, வெளிநாட்டுத் தீவிரவாத தொடர்புகளை ஆராயும் என்.ஐ.ஏ உள்பட பலவும் இப்போது விழித்துள்ளன.
- அண்ணல்,
நாகேந்திரன்
____________________
உரிய விதிகளின்படியே பதவி உயர்வு!
- செய்தித் துறை இயக்குநர் விளக்கம்
ஆகஸ்ட் 5ஆம் நாளில் வெளிவந்த நக்கீரன் பருவ இதழில், "பதவி உயர்வில் ஆளுக்கொரு ரூல்' என்ற தலைப்பிட்ட செய்தியில் உண்மைக்குப் புறம்பானவை இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் செ.சங்கர் இ.ஆ.ப. அவர்கள், ""செய்தித் துறையில் பதவி உயர்விலோ இடமாற்றத்திலோ எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, விருப்பு-வெறுப்போ இல்லாமல் நிர்வாகக் காரணங்களுக்காகவே உரிய விதிகளைப் பின்பற்றியே அனைத்து பதவி உயர்களும் வழங்கப்பட்டு வருகின்றது'' என விரிவான விளக்கங்களுடன் தெரிவித்திருக்கிறார்.
-ஆசிரியர்