ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இணை பொதுச்செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, தமிழகம் பற்றி மத்திய உளவுத்துறை கொடுத்திருந்த ஒரு ரிப்போர்ட்டும் விவாதத்தில் அலசப்பட்டிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
பா.ஜ.க. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, ”நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள் வதற்காக இப்போதே பல்வேறு விசயங்களை ஆர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் ஆராயத் துவங்கிவிட்டன. முதல்கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வின் உண்மை நிலை என்ன என்பது பற்றி ஆராய்ந்து ரிப்போர்ட் தரும்படி உளவுத்துறையின் உயரதிகாரிகளையும் பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் குழுவினரிடமும் கேட்டுக்கொண்டது பா.ஜ.க. தலைமை.
குறிப்பாக, தென் மாநிலங்கள் குறித்து ஆழமான ரிப்போர்ட் வேண்டும் என அறிவுறுத்தி யிருந்தார் அமைச்சர் அமித்ஷா. காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களை அமித்ஷாதான் கவனிக்கப் போகிறார்.
இதனைத் தொடர்ந்து "பா.ஜ.க. ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் பா.ஜ.க.வின் அரசியல் எப்படி இருக்கிறது? பா.ஜ.க. தலைவர்களின் அணுகுமுறைகள் கட்சியினரை ஈர்த்துள்ளதா? மக்களுக்கான அரசியலை பா.ஜ.க. முன்னெடுக்கிறதா? என்றெல்லாம் துருவித் துருவி ஆராய்ந்துள்ளனர். அந்த வகையில், இரு மாதங்களாக எடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு தயாரித்து தமிழக பா.ஜ.க.வை பற்றிய ரிப்போர்ட்டை அனுப்பி வைத்துள்ளது உளவுத்துறை. அந்த ரிப்போர்ட்டைத்தான் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலசி ஆராய்ந்துள்ளது'' என்கிறார்கள்.
மேலும் நாம் விசாரித்தபோது, "டெல்லிக்கு தரப்பட்ட அந்த ரிப்போர்ட் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல் குறித்து விவரிக்கிறது. குறிப்பாக, தேர்தலை மையப்படுத்திய அரசியலை அண்ணாமலை செய்வதில்லை. அது அவருக்கு தெரியவும் இல்லை. அதாவது, சோசியல் மீடியாக்களுக்கு சென்சேஷனலாக நியூஸ் கொடுத்தால் மட்டும் போதும்; மீம்ஸ் போட்டால் போதும். பா.ஜ.க. வெற்றி பெற்றுவிடும் என்கிற மனநிலையில், மொபைலை மேய்வதில்தான் அவரது கவனம் அதிகமிருக்கிறது.
தன்னை சந்திக்கும் நிர்வாகிகளை நிமிர்ந்து பார்த்து கூட பேசுவதில்லை. மொபைல் ஃபோனை இயக்கிக்கொண்டே பேசுகிறார். இதனால், கட்சித் தொண்டர் களுக்கும் தலைவருக்குமான நெருக்கம் உருவாகவில்லை. இந்த நிலை தொடர்வது தேர்தல் அரசியலில் பா.ஜ.க.வை காணா மல் செய்துவிடும். தமிழகத்தில் அதுதான் நடந்து கொண்டி ருக்கிறது.
அதாவது, தமிழ்நாடு திராவிட கொள்கையில் பற்றுள்ள மாநிலம். இங்கு தி.மு.க.வின் கட்டமைப்பு அனைத்து நிலைகளிலும் மிக வலிமையாக இருக்கிறது. ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை திடீரென உத்தரவிட்டால், தி.மு.க.விலுள்ள ஒரு வட்டச் செயலாளரால் 3,000 பேரை உடனடியாக திரட்ட முடியும். மிகச்சாதாரணமாக 10 லட்சம் ரூபாயை அந்த வட்டச் செயலாளரால் செலவளிக்க முடியும். அந்தளவுக்கு ஒரு வட்டச் செயலாளர் வலிமையாக இருக்கிறார்.
அப்படி ஒரு கட்டமைப்பு தமிழக பா.ஜ.க.வில் உருவாக்கப்படவே இல்லை. ஒரு பா.ஜ.க. நிர்வாகிக்கு 1 லட்சம் ரூபாயை அநாயசமாக செலவு செய்யும் சக்தி கிடையாது. காரணம், பா.ஜ.க. தலைவர்களால் வலிமையான தொண்டர்களை உருவாக்க முடியவில்லை. அதை உருவாக்குவார் என்றுதான் அண்ணாமலை தலைவராக்கப்பட்டார். ஆனால், அது குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை. பண பலத்தில் வலிமையில்லாத நிர்வாகிகளால் கட்சியை வளர்க்க முடிவதில்லை.
அதேபோல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் (பூத்) தி.மு.க. 500 முதல் 600 வாக்குகளை பெறுகிற வலிமையுடன் இருக்கிறது. அ.தி.மு.க.வோ, 150 முதல் 200 வாக்குகளை பெறும் வலிமையில் உள்ளது. ஆனால், பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே பூத்துக்கு 200 வாக்குகளை பெற முடியும். கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்சென்னை தொகுதிகளில் பூத்துக்கு 80 ஓட்டுகள் வாங்க முடியும். மற்றபடி தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் 25 வாக்குகள் வாங்குவதே கடினம்தான். இதுதான் பா.ஜ.க.வின் நிலை. இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க.வை எதிர்த்து எழுந்து நிற்கவே கூட முடியாமல் பலகீனமாகத்தான் இருக்கிறது தமிழக பா.ஜ.க.
ஆட்சி பலம், கட்சி பலம், மக்கள் ஆதரவு பலம் என 3 நிலைக ளிலும் அதிஉச்ச வலிமையிலுள்ள தி.மு.க.வை எதிர்க்கும் ஆற்றல் பா.ஜ.க.வுக்கு இல்லை; அண்ணா மலைக்கும் இல்லை. தி.மு.க.வின் ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்தாலே தமிழக மக்கள் பா.ஜ.க. பக்கம் வந்து விடுவார்கள் என அண்ணாமலையும், கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகமும் நினைக்கின்றனர். கேசவ விநாயகத்தை மீறி அண்ணாமலை மட்டுமல்ல; கட்சியின் சீனியர்கள் கூட அரசியல் செய்யமுடியாது. அந்தளவுக்கு கேசவவிநாயகத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால், இவரும் திராவிட கட்சிகளை எதிர்க்கிற அளவுக்கு ஆற்றல்மிக்கதாக பா.ஜ.க.வை வளர்க்கவில்லை. இந்த எதார்த்தத்தை புரிந்ததால் தலைவர்களை நெருங்கி அரசியல் செய்ய தொண்டர்களுக்கும்கூட ஆர்வம் இருப்பதில்லை. இதனால் இரு தரப்புக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 24 தொகுதிகளை பா.ஜ.க. ஜெயிக்கும் என்று அடிக்கடி அண்ணாமலை சொல்லிவருகிறார். இதில் கட்சியின் தேசியத் தலைமை மயங்கிவிடக் கூடாது. ஏனெனில், தமிழகத்தின் அரசியல் சூழல் அப்படியில்லை. அதேசமயம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், சிலபல பூத்களில் கணிசமான வாக்குகளை பா.ஜ.க. பெறலாமே தவிர வெற்றி என்பது ஒரு தொகுதியை கடந்து கிடைக்கப் போவதில்லை. அதனால், "தி.மு.க.வின் கட்டமைப்பு வலிமையை தோற்கடிக்க கேசவவிநாயகம் மற்றும் அண்ணாமலையால் முடியாது என்பதை தேசிய தலைமை உணர்ந்து கொள்வது அவசியம்'‘என்று ரிப்போர்ட்டில் சொல்லப்பட்ட தகவல்களின் சாரசம்சத்தை விவரிக்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.
நமக்கு கிடைத்த இந்த தகவல்களை தமிழக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் சொல்லி விசாரித்தபோது, "தி.மு.க.வின் கட்டமைப்பைத் தாண்டி பா.ஜ.க.வை வளர்க்கும் வகையில் முயற்சி இல்லை என்பதுதான் எதார்த்தம். இதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் யாருடனும் அண்ணாமலைக்கு ஆரோக்கியமான நட்பு இல்லை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால்... சமீபத்தில், பாண்டிச்சேரிக்கு செல்வதற்காக சென்னை வந்த அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை, கேசவவிநாயகம், அமைச்சர் முருகன் உள்ளிட்டவர்கள் சந்தித்தனர். அப்போது, பா.ஜ.க. நிர்வாகிகள் லிஸ்ட்டில் "முருகனின் சிபாரிசுக்கு வாய்ப்பளியுங்கள்' என அறிவுறுத்திவிட்டுச் சென்றார் அமித்ஷா. ஆனால், புதிய நிர்வாகிகள் பட்டியல் ரிலீஸானபோது முருகனின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட வில்லை.
இதனால் கடுப்பானார் முருகன். இந்த நிலையில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலையாக தூர்தர்சன் ஒளிபரப்பு செய்தது. அதில் அண்ணாமலையின் படம் ஒரு ப்ரேமில் கூட காட்டப்படவில்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டது. காரணம், மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் முருகன். இப்படித்தான் தமிழக பா.ஜ.க.வின் அரசியல் இருக்கிறது.
தமிழக பா.ஜ.க.வில் கட்சிரீதியாக 65 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். இதற்கான புதிய லிஸ்ட்டை அண்மையில் வெளியிட்டார் அண்ணாமலை. அந்த 65 பேரில் பொறுக்கி பொறுக்கி எடுத்தாலும் 8 மாவட்ட தலைவர்கள்தான் தேறுகிறார்கள். மற்றவர்களெல்லாம் டம்மிகள் தான். அதேபோல, 65 மாவட்டங்களையும் 6 கோட்டங்களாகப் பிரித்து 6 கோட்டப் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் அண்ணாமலை. இதில் ஓரிருவரைத் தவிர, மற்றவர்களால் 10 ஓட்டுகள்கூட கட்சிக்கு வாங்கித் தர முடியாதவர்களாகத்தான் இருக் கின்றனர். இந்த நிலையில், "24 தொகுதி களில் ஜெயிப்போம்' என உதார் விடுகிறார் அண்ணாமலை. அந்த வகையில் "உளவுத்துறையின் ரிப்போர்ட்டில் சொல்லியுள்ள அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கிறது'’என்கிறார்கள் அழுத்தமாக.
ஆக, தமிழக பா.ஜ.க.வின் உண்மை நிலையை முதன்முறையாக மோடிக்கும் அமித்ஷாவுக்கும் சொல்லியிருக்கிறது உளவுத்துறை.