போலீசிடம் சிக்கிய கடத்தல் போதைப் பொருளை டி.எஸ்.பி. ஒருவரே திருடிவிட்டார் எனக் கதறும் காவல்துறை வட்டாரத்தில் மேலும் நாம் விசாரித்தோம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள சி.புதுப்பேட்டை கடற்கரையில் கடந்த 2020 ஜூன் -22 ந்தேதி 8 பாக்கெட்டுகள் கரை ஒதுங்கின. அப்பகுதி பொதுமக்கள், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க எஸ்.ஐ. ஆனந்தன், தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. ராம்குமார், முதுநிலைக் காவலர் பாக்யராஜ் ஆகிய போலீஸார் விரைந்துசென்று 8 பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதில், "ரீஃபைண்ட் சைனிஸ் டீ' என்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த, பாக்கெட்டுகளுக்குள் என்ன இருக்கிறது என்று பிரித்துப்பார்த்த எஸ்.ஐ. ஆனந்தன் உள்ளிட்ட போலீஸார் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து வைத்து விட்டார்கள்.
இந்நிலையில், ஜூன்- 21ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர ட்ரம் ஒன்று மிதந்து வந்தது. அதனை, உடைத்துப்பார்த்த போது "ரீஃபைண்ட் சைனிஸ் டீ' என்று அச்சிடப்பட்டிருந்த பாக்கெட்டுகள் இருந்தன. தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு வந்த கடலோர காவல்படை எஸ்.பி. சின்னசாமி, மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம், போதைப் பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் பிரபாகர், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் அந்த பாக்கெட்டுகளைப் பிரித்து சோதனை செய்தபோது போதைப் பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள அரசு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தபோது "மெத்தாம் பேட்டமைன்' என்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள "போதைப்பொருள்' என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதேபோன்ற, பாக்கெட்டுகளை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள சி.புதுப்பேட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியதை பரங்கிப்பேட்டை போலீஸிடம் ஒப்படைத்த, பொதுமக்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட எஸ்.பி அபினவ் உத்தரவுப்படி நடந்த விசாரணையில் அதுவும், பலகோடி ரூபாய் மதிப்புள்ள அதே போதைப்பொருள்தான் என்பது உறுதியானது.
பரங்கிப்பேட்டை பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையில் விசாரணை செய்தபோது பிடிபட்ட 8 பாக்கெட்டுகளில் 4 பாக்கெட்டுகளே இருந்தன. பரங்கிப்பேட்டை காவல்நிலையத்தின் மோட்டார் ரூமில் பாக்கெட்டுகளை வைத்ததாகவும் மழையில் கரைந்துவிட்டதாகவும் எஸ்.ஐ.ஆனந்தன் உள்ளிட்டோர் கூறினார்கள். மழையில் கரைந்தாலும் பாக்கெட்டுகள் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை. இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி விசாரணை செய்துகொண்டிருக்கும்போது திடீரென்று எண்ட்ரியான சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் அதுகுறித்து விசாரித்துவிட்டு பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
இந்த நிலையில்தான், மீதமுள்ள 4 பாக்கெட் போதைப்பொருள் பாக்கெட்டுகளில் பல லட்ச மதிப்புள்ள 100 கிராம் போதைப் பொருளை டி.எஸ்.பி. எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஸ்.ஐ. ஆனந்தன் உள்ளிட்ட போலீஸாரை டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்த நிலையில், டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினார் எஸ்.பி. அபினவ். விசாரணையில் 100 கிராம் போதைப்பொருளை டி.எஸ்.பி. எடுத்துச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, உயரதிகாரிகளும் உளவுத்துறையும் ஐ.ஜிக்கு ரிப்போர்ட் கொடுத்துவிட்டார்கள். அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார் டி.எஸ்.பி. கார்த்திகேயன்.
4 பாக்கெட் போதைப்பொருள் காணாமல் போன புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. ஆனந்தனை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ""பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் அடிப்படையில் நாங்கள் கைப்பற்றி பரிசோதித்த போது, எந்தவிதமான போதையும் ஏற்படவில்லை. கொரோனா பரப்பும் பொருளாக இருக்கலாம் என பொதுமக்கள் கேலியுடனும் பயத்துடனும் சொன்னதால், ஸ்டேஷனில் உள்ள மோட்டார் ரூமில் வைத்துவிட்டோம். மகாபலிபுரத்தில் அதேபோன்ற பாக்கெட்டுகள் சிக்கியபிறகுதான் அது போதைப்பொருள் என்று தெரியவந்து அதிர்ச்சி ஆனோம். போய் பார்த்தபோது 4 பாக்கெட்டுகள்தான் இருந்தன. மீதமுள்ள, பாக்கெட்டுகள் காணவில்லை. கரைந்துவிட்டதா என்றும் தெரியவில்லை'' என்றார் குழப்பமாக.
விசாரணை அதிகாரியும் பரங்கிப்பேட்டை பொறுப்பு இன்ஸ்பெக்டருமான பாண்டிச் செல்வியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""நான், அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர். பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு பொறுப்பு இன்ஸ்பெக்டர்தான். கரை ஒதுங்கியது போதைப்பொருள் அடங்கிய பாக்கெட்டுகள் என்பது அப்போது தெரியாததால் எஸ்.ஐ. ஆனந்தன் உள்ளிட்ட போலீஸார் என்னிடம் கூறாமல் இருந்திருக்கிறார்கள். ஒருவேளை, என் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தால் உடனடியாக அதனை சோதனை செய்து கண்டுபிடித்திருப்போம். இவ்வளவு பெரிய விஷயத்தில் கவனக்குறைவாக இருந்ததால் எஸ்.ஐ. ஆனந்த் உள்ளிட்ட போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்'' என்றவரிடம், ""அந்த போதைப்பொருளிலிருந்து 100 கிராம் போதைப்பொருளை டி.எஸ்.பி. கார்த்திகேயன் எடுத்துக் கொண்டாரா?'' என்று நாம் கேட்டபோது, ""உயரதிகாரி களுக்கு உண்மை தெரியும்'' என்று முடித்துக் கொண்டார்.
நாம், உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""போதைப்பொருளை சோதனைக்குட்படுத்த ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்ப சாம்பிளுக்கு சுமார் 10 முதல் 15 கிராம்கள்தான் எடுப்பார்கள். அதைக்கூட இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்விதான் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், டி.எஸ்.பி. கார்த்திகேயனோ ஸாம்பிளுக்கு கொடுக்கவேண்டும் என்று 160 கிராம் போதைப் பொருளை இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வியிட மிருந்து வாங்கியிருக்கிறார். அதில், ஆய்வக பரிசோதனைக்கு 60 கிராம் கொடுத்துவிட்டு 100 கிராம் போதைப்பொருளை தன்னிடமே வைத்துக்கொண்டார். இது, கடலூர் எஸ்.பி. ஸ்ரீ அபினவ் கவனத்துக்கு செல்கிறது. உடனே, ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். முதலில், தான் எடுத்துவைத்துக்கொண்டதை ஒப்புக்கொள்ளாதவர் விசாரணைக்குப்பிறகு கொண்டுவந்து ஒப்படைத்து விட்டார். இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளோம். துறைரீதியான நடவடிக்கை தொடர்பான 17 பி மெமோவும் கொடுத்துள்ளோம்'' என்றார்கள் உறுதியாக.
டி.எஸ்.பி. கார்த்திகேயன் குறித்து நாம் விசாரித்தால் பல்வேறு கிரைம் பின்னணிகளைக் கூறி அதிரவைக்கிறார்கள். ""தனது லஞ்ச வேட்டைக்கு துணையாக இருக்காத தனக்கு கீழ் பணிபுரியும் எஸ்.ஐ. போலீஸ்கள் மீது பொய்யான மனுக்களை போட்டு விசாரணை என்கிற பெயரில் மிரட்டுவார். ரவுடி சுரேந்தரை கைது செய்து காலை உடைத்ததாக எதிர்தரப்பில் பணம் வாங்கிவிட்டு, கால்கட்டு போட்டதுபோல் பரபரப்பான ஃபோட்டோக்கள் வெளியாகின. ஆனால், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி செய்வதுபோல, ரவுடி சுரேந்திரன் காலை உடைக்காமலேயே உடைத்ததாக பொய்யாக மீடியாக்களை ஏமாற்றியதோடு காலை உடைக்காமல் இருக்க புரோக்கர் ரவி மூலம் ரவுடி சுரேந்தரிடம் இன்னோவா கார் வாங்கியிருக்கிறார்'' என்ற புகாரும் எழுந்தது.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே ஒரு பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்தவர், எஸ்.ஐ.யாக வந்த பெண்ணையும் அரசு ஊழியர் விதிக்குப் புறம்பாக திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றன. இதற்கே, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பாண்டியன் மூலம் தப்பித்துவிட்டார். சமீபத்தில் இவருக்கு நெருக்கமான பெண், சிதம்பரம் நகராட்சிமூலம் காய்கறிகள் விற்பதற்கான அனுமதியை பெற்றார். வாகன வாடகை கொடுப்பதிலும் கமிஷன் பங்குபிரிப்பதிலும் நகராட்சி கமிஷனர் ஷாவுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டு ஷா பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இப்படி, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்துகொண்டே இருக்கும் சூழலில்தான் அவர்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்றே மாதத்தில் மீண்டும் இதே இடத்திற்கு வந்துவிடுவேன் என்று சூளுரைத்துவிட்டு சென்ற டி.எஸ்.பி. கார்த்திகேயன், சிதம்பரம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பாண்டியன் மூலம் முதல்வர் அலுவலகம் வரை முயற்சித்து வருகிறார். ஆனால், எம்.எல்.ஏவின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்கிறது டி.ஜி.பி. அலுவலகம்.
குற்றச்சாட்டுகளுக்குள்ளான டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் நாம் கேட்டபோது, ""இவ்வளவு விவரமா கேட்கிறீங்களே?'' என்று ஷாக் ஆனவர், ""எனக்கு 17 பி மெமோ இதுவரை கொடுக்கவில்லை. போதைப்பொருளை ஸாம்பிளுக்கு கொண்டுவந்தார்கள். மீதியை திருப்பிக்கொடுத்துவிட்டேன். நான் இரண்டாவது திருமணம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை'' என்றார் அவர் தரப்பு விளக்கமாக.
""டி.எஸ்.பி. கார்த்திகேயன் குற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்ததால்தான் அவர் பணிமாறுதலே செய்யப்பட்டார். விரைவில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்கிறார்கள் அவரை விசாரித்த உயரதிகாரிகள்.
-மனோசௌந்தர்