கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்ததென்று மாடுகளின் உரிமையாளர் தங்கமணியிடமே விசாரித் தோம். "நேத்து (நவம்பர் 5, செவ்வாய்க் கிழமை) இரவு நாங்க வளர்க்கும் மாடு களை ஓட்டிக்கொண்டு வந்துட்டு இருந்தேங்க. அப்போ ஈஷா மையத் தோட நிர்வாகி தினேஷ்ராஜாங் கிறவரு கார்ல (வண்டி எண்: TN66 AE3003)) வேகமா எதுக்க வந்து எங்க மாடுங்க மேல மோதி, மூணு மாடுங்களை அடிச்சிப் போட்டாருங்க. முத மாட்டோட மூஞ்சிலயே நேரா காரால மோதிட் டாருங்க. ரெண்டாவது மாட்டை மோதுனதுமே அப்டியே மண்டி போட்டு கீழ விழுந்திடுச்சுங்க. மூணாவது மாடு பயந்து பின்னால திரும்புனதுமே அதோட பின்னாலயே பலமா மோதிட்டாருங்க சார். மூணு மாடுங்களுமே செனை மாடுங்க சார். மாடுங்கள அடிச்சுட்டு ஈவிரக்கமே இல்லாம, கார நிறுத்தாமலேயே போயிட்டு இருக்கவும், நான் கோபமாகி, 'நிறுத்துடா கார... நிறுத்தலைன்னா கார ஒடச்சிடுவேன்'ன்னு கத்தவும், காரை நிறுத்திட்டாங்க.
கார்லருந்து வெளில வந்த தினேஷ்ராஜா தெனாவெட்டா, "என்ன இப்டி வாடா போடான்னு பேசுற? இரு நா போலீஸ் காரங்கள கூப்புடுறேன்'னு சொன்னாப்ல சார்.
"சரி, நீ யார வேணாலும் கூப்புடு, எனக்கொண்ணும் பயங்கிடையாது. ரோடு சின்ன ரோடுன்னு தெரியும். ஆடு, மாடுங்க வந்தா பொறுமையா வரணுங்கறது ஒங்களுக்கு தெரியும்ல?'ன்னு கேட்டேன்.
"ஏன் தெரியாது?'ன்னு தெனாவெட்டா சொல்லிட்டு... "சரி, அதுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு. மாடு வேணுமா? பணம் வேணுமா? இல்ல அதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணணும்னா நா செஞ்சு தர்றேன்'னு துட்டு மெதப்புல சொன்னாப்ல.
நான் உடனே, "அப்ப உன்ன அடிச்சுப் போட்டுட்டு நாங்க பணம் குடுக்குறோம். நீ வாங்கிக்கோ. ஏழைன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா இருக்குதோ?' அப்டீன்னு சொல்லி திட்டுனேங்க. எங்க செனை மாட்டை அடிச்சதும் இல்லாம, கொஞ்சங்கூட அதப்பத்தி வருத்தமே இல்லாம, பணத்திமிரோட பேசிட்டு இருந்ததால நானும் வாக்குவாதம் பண்ணுனேன். அப்புறமா ஆலாந்துறை காவல்நிலைய போலீஸ்காரங்க வந்தாங்க. ஊர்க்காரங்க எல்லாருமே, 'அவங்ககிட்டயெல்லாம் எதுத்து பேசாத... எந்த பிரச்சனையும் வச்சுக்காத... அப்புறம் கொன்னு போட்டுடுவாங்க' அப்டீன்னு தான் என்னை சமாதானப்படுத்த பாத்தாங்க. ஆனா எனக்கு என்னோட மாடுங்க தாங்க உசுரு.
ஈஷா மையத்துக்காரங்களால ஏற்கெனவே ஆடு, மாடெல்லாம் இப்டி பறிகொடுத்தது எனக்குத்தான் தெரியும். அப்பல்லாம் அதுக்கு ஆதாரமா எதுமே இல்லைங்க. அதான் இப்ப ஆதாரமா அந்த கார ஒரு போட்டோ எடுக்கலாம்னு பார்த்தா, ஊர்க்காரங்களே கார மறைச்சு நின்னுட்டாங்க. ஆனா "நா போட்டோ எடுக்காம விடமாட்டேன்... இல்லன்னா கார உடைச்சுப்புடுவேன். உன் மூஞ்சிய காட்டு, போட்டோ எடுக்கணும்'னு சொன்னதுமே, அந்தாளு காருக்குள்ள போயி குப்புற கவுந்துக்கிட்டாரு. பிறகுதான் ஊர்க்காரங்க, "போட்டோ எடுக்கட்டும், வெளில வாங்க'ன்னு சொன்னதும், அந்தாளு வெளில வந்து, "ஏ... மூஞ்சிய எடுத்துக்கோ' அப்டீன்னு சொல்லி தில்லா நின்னாப்ல. நா அந்த வண்டி நம்பரையும், அந்த தினேஷ் ராஜாவையும் போட்டோ எடுத்துட்டேன்.
போலீஸ்காரங்களும் என்னைய சமா தானப்படுத்தத்தாங்க பார்த்தாங்க. "இத பெருசுபடுத்த வேணாம்... ஏற்கெனவே பிரச் சனைல ஓடிக்கிட்டிருக்குது'ன்னு சொல்லிப் பார்த்தாங்க. நா உடனே, "என்னோட சேஃப்டிய நா பார்க்கணும்ல சார். எஃப்.ஐ.ஆர். போட்டு குடுத்துடுங்க சார். என்னோட உயிருக்கும், என் சொந்தக்காரங்க உயிருக்கும் இவங்க தான் சார் பொறுப்பு. நாங்க ஆடு, மாட வச்சுத்தான் சார் வாழ்ந்திட்டிருக்கோம். எங்களுக்கு அதுங்களும் ஒரு உயிர் தான் சார். என்னையவும் அடிச்சு தூக்கிடுவோம்னு சொல்றாங்க. நா பேசுனதுக்காக செஞ்சாலும் செய்வாங்க. நீங்கதான் சார் பொறுப்புன்னு அவங்கட்ட சொல்லிட்டேன் சார். ஆனா எஃப்.ஐ.ஆர். பதிய மாட்டோம்னு சொல்லிட்டாங்க சார்'' என்றார்.
தற்போது அடிபட்ட மாடுகளுக்கு கால் நடை மருத்துவரிடம் காட்டி ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை வாங்கியிருக்கிறார். அடுத்ததாக, ஆலாந்துறை காவல் நிலையத் திற்கு செல்லவுள்ளதாகக் கூறினார். இந்த சம்பவத்தில், ஈஷா நிர்வாகி தினேஷ் ராஜா, குடிபோதையில்தான் மாடுகள் மீது காரை மோதினாரென்று கூறுகிறார்கள். பிரச்சனை யானதுமே காருக்குள்ளிருந்த பெண் ஒருவர், வேகவேகமாகக் காரிலிருந்து இறங்கி, வேக வேகமாகச் சென்று ஈஷா மையத்தினுள் நுழைந்திருக்கிறார். ஈஷா மையமானது, அவர் களுக்கு எதிராகச் செயல்பட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்களென்பதை கிராம மக்கள் பயத்துடன் சொல்வதிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசு மாடுகளை, அதுவும் சினை மாடுகளை மோதியதோடு, எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பணத்தால் பேரம் பேசிய ஈஷா நிர்வாகி தினேஷ்ராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
-நாகேந்திரன்