புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்தத் தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த நி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்தத் தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாய் தண்ணீரில் தூசியாகக் கலந்து வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர்த் தொட்டியில் ஏறி தண்ணீரை வெளியேற்றிப் பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றைச் சேகரித்து வெளியே எடுத்துப் பார்த்தபோது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாகக் கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.
இந்தத் தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர்த் தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன், தற்காலிகமாக சம்பந்தப்பட்ட தண்ணீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர்த் தொட்டியை ஆய்வு செய்த டி.டி. நமச்சிவாயம், "கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள். கழிவுகள், ஆய்விற்குப் போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரைக் குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை''’என்றார்.
இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வரும் சிலர் ஜாதிரீதி யாகப் பிரச்சனையைக் கொண்டுபோக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கிராமத்தில் நாங்கள் ஒற்றுமை யாகவே இருக்கிறோம். எங்களைப் பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தண்ணீர்த் தொட்டி பிரச்சனையில் முறையாக அதிகாரிகள், ஆய்வு, விசாரணை நடப்பதால் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
எந்த ஊரில் தண்ணீர்த் தொட்டியில் பிரச்சனை என்றாலும் அதை வேங்கைவயலுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்தவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஊரின் தண்ணீர் தொட்டிகளுக்கும் காவல் போடுவது சாத்தியமற்றது. வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க அரசு முன்வரவேண்டும்.