நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதி, விசைத்தறி தொழிலாளர்களின் புகலிடம்போன்றது. 2010-ல் இப்பகுதியில் கந்துவட்டிக் கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு நீதி வேண்டி காவல்துறையின் கதவுகளைத் தட்டினார் கம்யூனிஸ்ட் இளைஞர் வேலுச்சாமி. அதற்காக தோழர் வேலுச்சாமியை கந்துவட்டிக் கும்பல் 10.3.2010 அன்று அவரது வீட்டருகே கொடூர மாகக் கொலை செய்தது.

ll

நாமக்கல் விரைவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த கொலை வழக்கின் தீர்ப்பு, நீதியின் கரத்தை வலுப்படுத்தி யிருப்பதோடு, அடித்தள மக்களிடம் நமக்கும் நீதி சாத்தியம்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிப்பாளையம் அருகே உள்ளது அக்ரஹாரம், ஆவத்திபாளையம், சமயசங்கிலி பகுதிகள். இங்கு விசைத்தறித் தொழிலாளர் களைக் குறிவைத்து கந்துவட்டி தொழில் செய்தது ரவுடி சிவா என்கிற சிவக்குமார் கும்பல்.

Advertisment

இவர்களிடம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி வட்டிக்கு பணம்பெற்றிருந்தார். சரிவர கூலி கிடைக்காமல் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். கந்துவட்டி சிவாவும் அவனது கூட்டாளி ஆமையனும் அந்தப் பெண் தொழிலாளியின் மகளான இளம்பெண்னை மிரட்டி ஒரு தறி குடோனில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய இருவரும் அவர்களது செல்போனில் அதை வீடியோவாக படம் எடுத்ததோடு அந்த பலாத்கார வீடியோவை இணையத்தில் வைரலாக பரவவிட்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவரது தாயான பெண் தொழிலாளியும் அந்த வீடியோவை அழிக்கக் கோரி அந்த இரண்டு ஓநாய்களிடமும் கண்ணீர்விட்டு கதறித் துடித்தார்கள். பெண்களின் அழுகையை ரசித்த ஓநாய்கள் அதற்கு மேலும் விலைபேசினர். அப்போதுதான் எங்காவது தங்களுக்கு நியாயம் கிடைக்காதா என பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் வேலுச்சாமியைத் தேடிச்சென்று சந்தித்தனர்.

Advertisment

tt

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதோடு இவர்களின் கொடூர செயலை மக்களிடம் அம்பலப்படுத்த முடிவுசெய்தார். நக்கீரனை அவர் அணுக, பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனைகளைக் கேட்டறிந்து அந்தக் கொடுமையை நக்கீரனில் விரிவாக வெளியிட்டோம். பள்ளிப் பாளையம் காவல் நிலையத்தில் பெண் தொழிலாளி குடும்பம் சார்பாக சிவா மற்றும் ஆமையன் மீது முறைப்படி புகார் கொடுத்தார். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்கமான புகாராக வாங்கி வைத்துக்கொண்டனர்.

போலீசாரின் மெத்தனத்தால், தோழர் வேலுச்சாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாள் இரவு 9 மணிக்கு அவர் வீட்டருகே வைத்து, சிவா தலைமையில் ஆமையன், பூபதி, அருண், மிலிட்டரி கணேசன், ராஜேந்திரன், அன்பு ஆகிய 7 பேர் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

t

மேலும் இவ்வழக்கில் சில மாதங்களிலேயே கொலையாளிகள் ஜாமீனில் வெளிவந்தனர். இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் தால் இக்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கொலையாளி சிவா தலைமறைவானான். இன்னொரு கூட்டாளியான ஆமையன் இதே கும்பலால் கொல்லப்பட்டான். பூபதி தலைமறைவாகிவிட்டான். ஆனால் அவனும் இக்கும்பலால் கொல்லப்பட்டுவிட்டான் என்கின்றனர் போலீசார்.

கொலையாளிகளில் ஒருவனான அருள், நாம் தமிழர் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பள்ளிப் பாளையம் தலைவரானான். மிலிட்டரி கணேசன் அ.தி.மு.க. நிர்வாகியாகவும் அன்பு பா.ஜ.க. பிரமுகராகவும் வலம் வந்தனர்.

வழக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி., இளம்பெண் பலாத்கார வழக்கை தனியாகவும். கொலை வழக்கை தனியாகவும் பதிவுசெய்து நடத்தியது. சென்ற ஒரு வருடத்திற்கு முன்பு பாலியல் பலாத்கார வழக்கில் இறந்துபோன ஆமையனைத் தவிர மற்றொரு குற்றவாளியான சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ஐந்து லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டது.

தோழர் வேலுச்சாமி கொலை வழக்கில் தற்போது உயிருடனுள்ள 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா இருபதாயிரம் அபராதமும் நாமக்கல் விரைவு நீதி மன்றத்தால் வழங்கப்பட்டி ருக்கிறது.

பாதிக்கப்பட்டவர் கள் தரப்பிலிருந்து அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு சட்டப் போராட்டம் நடத்தியவர் மூத்த வழக்கறிஞரான பி.திருமலைராஜன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட, மாநில அளவில் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றி யவர். தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி தலைவராக செயல்பட்டு வந்தவர். தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாடுகளில் கலந்துகொண்டு வரும் சீனியரான திருமலைராஜன் நம்மிடம்,

"பல தடைகளைத் தாண்டித்தான் இந்த வழக்கில் நீதியைப் பெற்றுள் ளோம். உழைக்கும் மக்களை வட்டி என்ற பெயரில் அவர்களின் உடமையை மட்டுமல்ல, பெண் தொழிலாளிகளையும் பாலியல்ரீதியாக சுரண்டியுள்ளது அந்த கும்பல். பாதிக்கப்பட்ட உழைக்கும் மக் கள் பக்கம் நின்று போராடிய தோழர் வேலுச்சாமியை கொன்ற கொலையாளி களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம்'' என்றார்.

கோகுல்ராஜ் ஆணவப் படு கொலை வழக்கில் ஆஜராகி குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுத்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தோழர் திருமலைராஜ னின் ஜூனியர் என்பது குறிப்பிடத் தக்கது.