நக்கீரன் புலனாய்வுகள் ஒருபோதும் நுனிப்புல் மேய்பவையாக இருப்பதில்லை. அடி ஆழம் வரை செல்லும் கடல் ஆய்வாளர்கள் போல ஒவ்வொரு புலனாய்விலும் தொடர்ச்சியான ஆதாரங்களை வெளிப் படுத்திக்கொண்டே இருப்பதுதான் "நக்கீரனிசம்.' ("நக்கீரனிசம்' பட்டம் எமக்குக் கொடுத்தவர் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர்.)
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகனான ஜெயராஜும் பென்னிக்ஸும் போலீசாரால் கடுமையான தாக்குதல் சித்ர வதைக்குள்ளாகி, கோவில்பட்டி சிறையில் அடைத்தபிறகு, உடல்நலன் அதிகப் பாதிப்புக் குள்ளாகி, அடுத்தடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், இது போலீஸ் செய்த சித்திரவதை கொலை என்பதை உறுதிபடக் கூறியது உங்கள் நக்கீரன். தமிழ் நாட்டின் முதலமைச்சரே, ஒருவர் மூச்சுத்திணறா லும் இன்னொருவர் நெஞ்சுவலியாலும் இறந்த தாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்திருந்த நேரத்தில், போலீசாரின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே இருவரது உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் என்பதை கோவில்பட்டி சிறையில் இருவரையும் பரிசோதித்த டாக்டர் எழுதிய மருத்துவக் குறிப்பினை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு, உண்மையை உறுதிசெய்தது உங்கள் நக்கீரன்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவருக்கும் அடிவயிற்றுப் பகுதியிலும், புட்டத்திலும் நிறைய காயங்கள் இருப்பதையும், கால்களிலும் காயங்கள் இருப்பதையும் மருத்துவக் குறிப்பு தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது. நக்கீரன் இதனை வெளியிட்ட பிறகே, பிற ஊடகங்களும் உண்மையை வெளிச்சம் போட்டன. அதனைத் தொடர்ந்தே, போலீஸ் அழைப்பின் பேரில் தனது செல்போன் கடையிலிருந்து ஜெயராஜ் செல்வதும், அதனைத் தொடர்ந்து நண்பரின் இருசக்கர வாகனத்தில் பென்னிக்ஸ் ஏறிச் செல்வதும் வெளியாகி, போலீசின் எஃப்.ஐ.ஆருக்கும் உண் மைக்கும் உள்ள முரண்பாடுகள் வெளிப்பட்டன.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினாலும், மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நேரடியாக மேற்கொண்ட விசாரணைகள் போன்ற தொடர் நெருக்கடிகளாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. சி.பி.ஐ. அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில்தான், கடந்த நக்கீரன் இதழிலும் யூ-டியூப்பிலும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் போஸ்ட்மார்ட்டம் படங்களையும் அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டோம்.
நக்கீரன் ஏற்கனவே வெளியிட்ட, மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த காயங்களின் கொடூரத் தன்மையை போஸ்ட்மார்ட்டம் வீடியோவும் படங்களும் வெளிப்படுத்தின. பின்புறத்தில் தோலே இல்லாமல் ரத்தமும் சதையாக கிடந்த இருவரின் உடலும் மனிதத்தன்மை கொண்ட எல்லாரையும் அதிரவைத்தன. தமிழ்நாட்டு மக்களை வேறு வேறு செய்திகள் மூலம் கவனத்தைத் திருப்பியிருந்த நிலையில்தான், நக்கீரனின் சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை தொடர்பான போஸ்ட்மார்ட்டம் வீடியோவும் படங்களும் வெளியாகி உண்மையை உரக்கப் பேசின. நக்கீரன் வெளியிட்ட வீடியோ, வைரலானது. அதுகுறித்து, "தி ஹிந்து' இதழ் 1-8-2020 அன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியில்...
""சாத்தான்குளம் போலீசாரால் தந்தை, மகன் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், புதிய ஆதாரமாக, இருவரது உடலும் போஸ்ட்மார்ட்டம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அதில், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உடற்கூராய்வின் போது ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் உடலில் இருக்கும் காயங்கள் குறித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ ஆதாரம், தமிழ் இதழான நக்கீரனின் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தில்தான் முதன்முதலாக வெளியானது.
இந்த வீடியோவில், பென்னிக்ஸின் பின்புறத்தில் முழுவதுமாக தோலுரிக்கப்பட்டு, சிவப்பு நிறத்திலான சதைகள் தெரிகின்றன. அதேபோல், அடித்து கொடுமைப்படுத்தியதால், ஜெயராஜின் முகம் முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. உடற் கூராய்வு செய்யப்படுவதற்கு முன்பாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடையாளம் காட்டுவதற்காக, அவர்களது உறவினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், உடல்களில் இருக்கும் கொடூரக் காயங்களைப் பார்த்ததும் விம்மி அழும் காட்சிகளும், இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. முன்னதாக, ஜூன் 22ந்தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர், க்ளூட்டல் பகுதி என்று சொல்லக்கூடிய பட்டக்ஸில் காயங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பை நடத்தி வரும் மனித உரிமை செயற்பாட்டாளரான ஹென்றி திபேன், ""நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட உடற் கூராய்வு அறிக்கையை, சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தினர் பார்க்க முடியாதது மிகக்கொடுமை. அரசு இழப்பீடும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு இளநிலை உதவியாளர் வேலையும் கொடுத்திருந்தாலும், தந்தை-மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர்கள் இறந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்ளும் சகல உரிமையும் அவர்களது குடும்பத்தினருக்கு இருக்கிறது. இந்த சூழலில் வெளியாகி இருக்கும் வீடியோ, குற்றவாளிகள் மீதான வலுவான ஆதாரமாக அமைந்திருக்கிறது''’என்றார் அழுத்தமாக.
நக்கீரன் தனது புலனாய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ள இந்த உண்மைகளின் வழியாக, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. நக்கீரன் இந்த துணிச்சலான பாதையில் தொடர்ந்து செல்லும்.
இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை ஓயாது... விடாது நக்கீரன்!
-ஆசிரியர்