"ம் சொல்றியா மாமா'!
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் சுமார் 350 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது இதில் இடம்பெற்ற பாடல்கள் எனலாம். படத்தின் ரிலீஸுக்கு முன்பே பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு, படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்தது.
அதிலும் குறிப்பாக சமந்தா நடனமாடியிருந்த "ம் சொல்றியா மாமா' பாடல் வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ஆண் களுக்கு எதிரான பாடல் என ஆங்காங்கே சர்ச்சைகள் வெடித்தாலும், அதே ஆண் சமூகம் இப்பாடலை மிகப்பெரிய ஹிட் டாக்கியது. இந் நிலையில், இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது உருவாகிவரும் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் இம்மாதிரியான ஒரு பாடலை வைக்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. இதில் மீண்டும் நடனமாட சமந்தாவைப் படக்குழு அணுகியுள்ளது. ஆனால், அவரோ "ம்ஹும்' எனச் சொல்லிவிட, தற்போது பாலிவுட் நடிகை திஷா பதானியை நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளார்களாம் படக்குழு. "ம் சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பும் முதலில் திஷா பதானிக்குதான் சென்றது, ஆனால், அவரது கால்ஷீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அந்த வாய்ப்பு சமந்தாவுக்கு சென்றது என்பது குறிப் பிடத்தக்கது.
லாபமா? நஷ்டமா?
"பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பிரபாஸ், அண்மையில் வெளியான தனது "ராதேஷ்யாம்' படத்தின் மூலம் மோசமான வசூல் சாதனை ஒன்றையும் படைத் துள்ளார். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான "ராதேஷ்யாம்' படம் இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படம் வெளியானது முதலே எதிர்மறையான விமர்சனங்களே வந்த நிலையில், வசூலிலும் அது கடுமையாக எதிரொலித்தது. படம் திரையிடப்பட்ட பல இடங்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் படம் சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை இந்தியத் திரையரங்குகளில் வெளியான படங்களிலேயே 100 கோடி நஷ்டத்தைச் சந்தித்த முதல் படம் இதுதான் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர். படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்டத் தனது 100 கோடி சம்பளத்திலிருந்து 50 கோடியை நடிகர் பிரபாஸ் தயாரிப்பாளருக்குத் திரும்பக் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையும் விஜய்சேதுபதி - விக்ரம்!
"காக்க முட்டை' படத்தின் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், "குற்றமே தண்டனை', "ஆண்டவன் கட்டளை', "கடைசி விவசாயி' என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "கடைசி விவசாயி' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை மணிகண்டன் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதிக்கு குவியும் பாராட்டுகள்!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜய்சேதுபதி. தமிழ் மொழியைக் கடந்து தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் விஜய்சேதுபதி, ஏழை எளியவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அவர் உதவியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. புதுச்சேரியின் தவளகுப்பத்தில் இயங்கிவரும் இத்தொண்டு நிறுவனம், கடந்த 2019 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறதாம். இந்தத் தொண்டு நிறுவனத்தில் ஊழியர்களை அமர்த்தி அவர்களுக்கான ஊதியத்தையும் விஜய்சேதுபதியே கொடுத்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அமைப்பு மூலம் 1,00,133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுப் பயனடைந்துள்ளதாகவும், 73 சுய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சத்தமில்லாமல் விஜய்சேதுபதி செய்துவரும் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-எம்.கே.