தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்' என்ற வரியை நீக்கிப் பாடப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. ஏற்கெனவே திராவிடம், திராவிட மாடல் என்பதற்கெதிராக ஆளுநர் பேசிவந்த நிலையில், ஆளுநரைக் குளிர்விப்பதற்காகவே வேண்டுமென்றே குறிப்பிட்ட அந்த வரியைப் பாடாமல் தவிர்க்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனைக் கண்டித்தனர். தனக்கு இந்த பாடல் நன்றாகத் தெரியும் என முதல்வ ருக்கும் தெரியும். இருப்பினும் தன்னைக் கண்டித்துள்ளார் முதல்வர் என்று பதிலளித்தார் ஆளுநர். இந்த சர்ச்சை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட்டு, புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும்'' என்று அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தெரிவித்தார்.
ஆளுநர் மற்றும் சீமான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நம்மிடம் பேசிய திராவிட இயக்கச் சிந்தனையாளர் வல்லம் பஷீர், "எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திகை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டும் ஒத்திகை பார்க்காமல் பாடினார்களா? தேசிய கீதத்தை தவறாகப் பாடிவிட்டால் விட்டு விடுவீர்களா? தொன்றுதொட்டு ஆரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துகிற வேலையைச் செய்து வருகிறார்கள். தவறைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு தமிழில் ஆளுநர் வல்லவரா என்று கேட்கிறார்கள். நன்றாகப் பாடுவேன் என்று அவர்தானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அப்படிச் சொல்பவர், அந்த மேடையிலேயே தவறைக் கண்டித்திருக்க வேண்டாமா? தவறை வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறார்.
"திராவிடர்நல் திருநாடும்' என்ற சொற் களை நீக்கிவிட்டு டிடி தொலைக்காட்சியில் பாடினார்களே, இதற்கு ஒத்திகை பார்த்தவர் சீமான். நந்தன் திரைப்பட விழாவில் சீமான் கலந்துகொண்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் திராவிடர் என்ற வார்த் தை இல்லை. அப்படிப் பாட வைத்தவர் சீமான். அவரை வைத்து ஒத்திகை பார்த்தது பா.ஜ.க. அப்போதே இதனைக் கண்டித்திருந்தால் இந்த பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்காது. எப்படியாவது செய்திகளில் தன் பெயர் வரவேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்ட தால் அதனைப் பொருட்படுத்தத் தேவை யில்லையென்று கடந்தோம். ஆக, சீமானுக்கு எழாத கண்டனம் தங்களுக்கு எழாதென்று ஆளுநரும், ஒன்றிய அரசும் நினைத்தனர். கவுன் சிலராகக்கூட இல்லாத சீமானை எதிர்க்க வேண் டியதில்லை. ஆனால் ஒன்றிய அரசு விழாவில் ஆளுநர் பங்கேற்றபோது தவறு நடந்திருந்தால் எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தையே எடுத்திடுவோம் என்கிறார். விழித்திருக்கும்போதே கனவு காண்கிறார் சீமான். ஒரு நாக்குடையவர்களின் கருத்துக்கு நாம் எதிர்க்கருத்து தெரிவிக்கலாம். பல நாக்குகள் படைத்தவர்களின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவிக்க முடியாது. அவர் பேச்சு எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தது இல்லை. இந்த விஷயத்தில் விவாதத்திற்கு தயார் என்கிறார். நாங்களும் தயார். தமிழ் தேசியம்தான் அவர்களது நோக்கம். அதன் மையக்கரு தனித்தமிழ்நாடு தானே? இந்தி விழாவை ஏன் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று கேட்கத் திராணியும், தெம்பும் சீமானுக்கு இருக்கிறதா? இந்தி விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மாணவரணி போராட்டம் நடத்தியது. அதைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அவ ருக்கு இருக்கிறதா? தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன், தமிழகம் என்றுதான் சொல்லு வேன் என்று ஆளுநர் சொன்னதற்கு கண்டனம் தெரிவித்தாரா? ஏன் கள்ள மவுனம் காத்தார்? திரைமறைவில் நடந்த அரசியல் பேரங்கள் என்ன? எல்லா விவகாரத்தையும் ஈழத்தமிழர் களோடு ஒப்பிட்டுப் பேசும் சீமான், போருக்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்?
மூன்று தமிழர்களுக்கு தூக்குக்கயிறு. எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். ராம்ஜெத் மலானி வந்தால்தான் முடியும் என்கிறார்கள். வைகோதான் ராம்ஜெத்மலானியை சென் னைக்கு அழைத்து வருகிறார். அவர் தூக்குக் கயிறை அறுத்து எறிகிறார். இதற்கான அனைத்து வேலைகளையும் செய்தவர் வைகோ. ஏன் அதற்கான முயற்சியை சீமான் எடுக்க வில்லை? நளினி அவர்களது வீட்டுத் திருமணத்திற்கு வெளியே வந்தபோது, திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் சிங்கராயர்தான் அவர் தங்குவதற்கான ஏற் பாடுகளைச் செய்தார். இதற்காக அவர் சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். இப்படி ஈழத்தமிழர் களுக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். எந்தத் தியாகமும் செய்யாத சீமான், அவர்களின் கண்ணீரில் உப்பு எடுத்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரம் நடந்தபோது நாங்களெல் லாம் களத்தில் இருந்தோம். நீங்க எந்த ஷூட் டிங்கில் இருந்தீர்கள் என்று சொல்லுங்கள். இவர் யார் என்பதை தமிழக மக்களும், ஈழத்தமிழர்களும் நன்கு அறிவார்கள்'' என்றார்.
இந்த சர்ச்சை குறித்து வழக்கறிஞர் வே.பாலு கூறுகையில், "தமிழ்நாட்டுக்கு மோடி படையெடுத்தும், அமித்ஷா அதட்டிப் பார்த்தும், திராவிடச் சித்தாந்தம்கொண்ட தமிழ்நாட்டில் ஓரிடம் கூட வரமுடியவில்லை என்ற ஏக்கம், எரிச்சலாக மாறுவதன் விளைவு தான் ஆளுநர் (ஆரியன்) ரவியின் தொடர் கலாட்டாக்களுக்கு அடிப்படைக் காரணம். திராவிட சித்தாந்தம், தமிழ் கலாச்சாரம் போன்ற அடிப்படை விழுமியங்களின் மீது தொடர்ந்து வன்மத்தை, வார்த்தை மற்றும் செயல்கள் மூலம் தொடர்வதை ஆளுநர் நிறுத்தவேயில்லை. சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை இருக்கின்ற வரை தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்பதை, தேர்தல் வெற்றிகள் மூலமாக தி.மு.க. அல்லாதவர்களும் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிப்பதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து என் பது, இந்தியாவில் முதல்முதலாக ஒரு மாநில மொழிப் பாடலாக, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட, தமிழின் பெருமையை மட்டுமே பாடு கின்ற ஒரு பாடல். எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் பின்பற்றப் படும் சூழலில், முதன் முதலில் விஜேந்திரரால் தொடங்கப்பட்ட இந்த சர்ச்சை, கடந்த வாரம் டிடி தமிழ் தொலைக் காட்சி வரை நீள்கிறது. (பச்சைத் தமிழன் முருகன் பொறுப்பேற்ற பின்னால் பொதிகை தொலைக்காட்சி என்பது டிடி தமிழ் என்று மாற்றப்பட்டது.) விஜேந்திரர் நிகழ்ச்சிக்குப் பின்னால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், வடிவம், வரி, இசை இவை யாவற்றையும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லையென்று கொண்டுவந்த பின்னால், இந்த சர்ச்சைகள் கிளப்பப்படுவது வேண்டுமென்றே விதைக்கப் படும் வன்மமாகும். எனக்கு துல்லியமாக இசையோடு, உச்சரிப்போடு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடத் தெரியுமென்ற ஆளுநரும் இதற்கு உடந்தையென்பது உறுதியாகிறது.
வேண்டுமென்றே செய்யப்பட்ட இந்த தவறுக்கு, தொலைக்காட்சி இயக்குநர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் இந்நேரம் மாற்றப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் கள்ள மவுனம் காப்பதன் மூலமாக ஒன்றிய அரசும் அம்பலப்படுகிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதை உணர்ந்தே பிரிவினைவாதம் செய்யும் குழுக்கள், தமிழனை பிரிவினை வாதிகள் என்று சொல்வது, ஒற்றுமையில்லாத, உணர்வில்லாத தமிழர்களின் சாபக்கேடு.
இந்த நிலையில், தமிழ்நாட்டினுடைய மாண்புகளைக் குறைப்பதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு, நாக்பூரின் நாக்காக மாறி, தமிழ் தேசியப் போர்வையில் தமிழினத்திற்கு எதிராகப் பிளவுபடுத்தும் வேலையை சீமான் செய்வதன் மர்மம் அறிந்தவொன்றே. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்ற விடுதலைப்புலிகளின் பெயரால் வியாபாரம் செய்வதை ஒன்றிய அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது வழக்கறிஞரான எனக்கு புரியாத புதிராக உள்ளது. திராவிடம் என்பதன் அர்த்தம் ஆணி வேர். இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமறியாமல், ஏதோ நாளைக்கே இவர் அதிபராவது போல, இவர் வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்ற உளறல், இளைய சமுதாயத்தை திசைதிருப்ப மட்டுமே உதவும்.
தேசிய கீதத்தில் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூர் எழுதும்போது, தமிழ்நாட்டு நிலப்பரப்பு அடங்கியுள்ள திராவிடத்தின் குறியீட்டைத் தொட்டால், அதற்கான சிறப்புச் சட்டத்தின்படி சீமான் 3 ஆண்டுகள் களி சாப்பிட வேண்டும். நெஞ்சுரமும் தைரியமும் இருந்தால் முதலில் தேசிய கீதத்தில் இருக்கின்ற திராவிடத்தை எடுக்க முடியுமா? என்பதைச் சொல்லட்டும். சீமான் மீது ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒரே நேரத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டத்தால் கட்டாயமாக்கப் பட்ட தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தையோ, தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தையோ, அதன் வடிவம் மற்றும் வரிகளை நீக்குவதோ, இடைச்செருகல் செய்வதோ சட்டப்படி குற்றம். சனாதனிகளின் கூலிக்குரலாக, தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைக்க முயற்சிக்கும் சீமானின் கருத்தை, ஒரு தமிழ் உணர்வாளன் என்ற முறையில், ஒரு வழக்கறிஞ னாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்றார்.
தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி இதுகுறித்து கூறுகையில், "தமிழின் அடையாளம் திராவிடம். திராவிடம் இருந்தால்தான் தமிழ் வாழும். திராவிடத்தின் எதிரி ஆரியர்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் இருக்கக்கூடிய திராவிடம் என்ற சொல்லை எடுத்துவிடுவோம் என்று சீமான் சொல்கிறாரென் றால், அவரது ஆழ்மனதில் இருக் கின்ற அழுக்கு சிந்தனை வெளிவந்திருக்கிறது எனலாம். திராவிடத்திற்கும், தமிழுக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறார், துரோகம் செய்கிறார். இனப்பகைவர்களைத் தாங்கி நிற்கிறார்.
சீமானை பேசவிட்டு வேடிக்கை பார்த்ததற்கு காரணம், அவ ரிடம் இருக்கிற தமிழ்த்தேசிய உணர்வு, தமிழ்ப்பற்று என்று எண்ணினோம். ஆனால் முற்றிலும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திராவிடத்திற்கோ, தமிழுக்கோ எதிராகப் பேசினால், இனப்பகைவர்களைத் தாங்கிப் பிடித்து, அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலில் ஈடுபட்டால், அவருக்கான எதிர்வினை கடுமையாக இருக்கும்.
தி.மு.க.வையும், கலைஞரையும் குற்றம்சாட்டிப் பேசுகிறார். தமிழ் மொழிக்கான இருக்கை, தமிழ் மொழிக்கான செம்மொழி அந்தஸ்தை யார் வாங்கியது? சீமான் வாங்கினாரா? கலைஞர்தானே செம்மொழி அந்தஸ்தை வாங்கினார். இந்த எண்ணம் யாருக்காவது வந்ததா? கலைஞர்தான் இதற்கான முயற்சிகளை எடுத்தார். சீமானுக்கும், ஈழவிடுதலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஈழப் போராட்டத்தில் உள்ளவர்களை அவருக்கு தெரியுமா? பிரபாகரனை பார்த்தேன், ஆமைக்கறி தின்றேன் எனச் சொல்கிறார். இப்படிப் பேசுவது அழகா? ஒரு போராளியை சந்தித்தேன், அவரோடு சேர்ந்து களமாடினேன், சிங்களனை வீழ்த்தினேன் என்று சொல்ல வக்கில்லை. காசி ஆனந்தன் போன்றவர்களை அழைத்து தமிழ் வீதியிலே எத்தனை கூட்டங்களை இவர் நடத்தியிருக்கிறார்? அன்றைக்கெல்லாம் சீமான் எங்கே இருந்தார்? ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் என்ன செய்தார் என்பது உண்மையான போராளிகளுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியை இழந்தது. ஈழத்தமிழர்களுக்காக. எங்களைப் போன்று குரல் கொடுத்தவர்கள் யாருமில்லை. சீமான் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார். திராவிட இயக்க வரலாற்றை, கலைஞரின் வரலாற்றை, திராவிட மாடலின் சாதனைகளை மறைக்க முடியாது. அது எந்தக் காலத் திலும் நடக்காது'' என்றார் காட்டமாக.
-வே.ராஜவேல்