தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, ஆங்கிலத்தில் எழுதிய "திராவிடன் மூவ்மெண்ட் அண்ட் பிளாக் மூவ்மெண்ட்' (The Dravidian Movement and the Black Movement) என்ற நூலின் தமிழாக்கமான ‘"திராவிட இயக்க மும் கருப்பர் இயக்கமும்'’ என்ற நூல் வெளி யீட்டு விழா சென்னை, அண்ணா அறிவாலயத் தில் 25.10.2024, வெள்ளியன்று நடைபெற்றது. இந்நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அந்நூலின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் அனல் தெறித்தது. திராவிடம் என்றால் என்ன? திராவிடத்தின் சாதனைகள் என்ன? தற்போதைய காலத்தில் திராவிடத்தின் தேவை என்னவென்றெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார். முதல்வர் பேசுகை யில், "கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடு களால் மின்னுகிறார். ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி. பொன்முடி இந்த நூலில், அன்னைத் தமிழ்நாட்டையும், அமெரிக் கப் பெருநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார்.
அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங் குடி மக்களின் விடியலுக்கும் -விடுதலைக்கும் -மேன்மைக்கும் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம். "தொடக்கூடாது, கண்ணில் படக் கூடாது, படிக்கக்கூடாது, முழுமையான உடை உடுத்தக்கூடாது, வீடு கட்டக்கூடாது' என்று அடிமைகளைவிடக் கேவலமாக நம் மக்கள் நடத்தப்பட்டார்கள். கேட்டால், இதுதான் மனுநீதி என்றார்கள். அந்த அநீதிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி, போராட்டக்களங்கள் கண்டு வெற்றிபெற்ற இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம். பழமைவாதக் கருத்துக் களுக்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை முன்வைத்தோம். பேச மட்டுமல்ல, பகுத்தறிவுக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சென்று அமைதிவழியில் புரட்சியே நடத்தினோம்! அதனால்தான் இது அறிவியக்கம்.
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை சாதியின் பேரால், சாத்திர சம்பிரதாயங்களின் பேரால், காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங் களை, ஆட்சியதிகாரத்தின் மூலமாகக் கொண்டு வந்திருக்கிறோம். தடை என்றால் அதை உடை... அதுதான் நம்முடைய ஸ்டைல். அதனால்தான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்களே என்ற ஆத்திரத்தை, ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதை இன்னும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு "திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. இதைத் தெரிந்துதான், தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்தார், ‘"திராவிடம் என்ற சொல்லுக்கு பயப்படுவது போன்று, ஆரியம் வேறு எந்தச் சொல்லுக்கும் அஞ்சி நடுங்கியதில்லை'’என்று பேசினார். அதை நாம் இன்றைக்குவரை, கண்கூடாகப் பார்க்கிறோமே!
ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதிக் கொடுத்தால் பேசமாட்டார். இந்தி மாத விழா நடக்கக்கூடாது என்றால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க. ஏன், ‘திராவிட நல்திருநாடு’ என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படிப் பாடினால் சிலருக்கு, வாயும், வயிறும், மூளையும், நெஞ்சும் எரியுமென்றால்... திரும்பத் திரும்பப் பாடுவோம். திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடப் பெயராக, இனப் பெயராக, மொழிப் பெயராக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது, அரசியல் பெயராக ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்திருக்கிறது.
திராவிடம் என்பது ஆரியத்திற்கு "எதிர்ப் பதம்' மட்டுமல்ல, ஆரியத்தை பதம் பார்க்கும் சொல். அவர்களுக்கு கலைஞரின் முழக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன். "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.' இந்த முழக்கத்தை நிலை நாட்டத்தான், திராவிட மாடல் இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது மனு நீதியை மாற்றி, மக்களுக்கு சமநீதி, சமூக நீதி சம வாய்ப்பை உறுதி செய்யும். இதைத்தான், இந்தப் புத்தகத்தின் 182ஆவது பக்கத்தில் அமைச்சர் பொன்முடி குறிப்பிடுகிறார்.
திராவிட இயக்கம், சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை கனவு கண்டது. அதனால் திராவிட இயக்கத்தின் பெரும்பாலான இலக்குகள், அரசியல் அல்லது பொருளாதார நோக்கை விடவும் சமூகநோக்கில் இருந்தன என்று மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் நம்முடைய முழக்கத்தை, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று எளிமையாகச் சொல்கிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதோடு, அனைத்து சமூகங்களின் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.
இதை எளிமையாகவோ, சீக்கிரமாகவோ நிறைவேற்றிட முடியாது. ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை, ஒடுக்குமுறையை, பழமைவாத மனோபாவத்தை, 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது. ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருகிறோம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்''’என்று பேசினார்.
-தொகுப்பு: தெ.சு.கவுதமன்