மதுரை, ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பட்டியலினக் குடியிருப்பு பகுதிக்குள் ஆதிக்க சாதியினர் புகுந்து கார், வாகனங்களை சேதப் படுத்தினர். பட்டியலின சமூகத்தில் நால்வர், அரிவாள் வெட்டுக்காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை வி.சி.க. தலைவர் திருமாவளவன் பார்க்க வந்தார். இவ்விவகாரம் தொடர்பாக, ஒத்தக்கடையில் மறியலில் ஈடுபட முயன்ற மருதுசேனை அமைப்பினரை போலீசார் அப்புறப்படுத்தினர். பதட்டச் சூழலின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக வி.சி.க.வினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
விவகாரம் குறித்து நாம் விசாரிக்கையில், "மதுரை ஒத்தக்கடை திருமோகூர் கிராமத்தில் கடந்த 4ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்கியது. ஊர் பஞ்சாயத்து தலைவர் அண்ணாமலையின் தகப்பனார் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரகுபதிக்கு வழக்கம்போல் பரிவட்டம் சூட்டப் பட்டபோது, பட்டியல் சமுதாயத்தினர் தங்களுக்கும் பரிவட்டம் கட்டவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அப்போது இரு தரப்பு பெரியவர்களும் கூடிப்பேசி, ஊர் பாரம்பரிய வழக்கத்தினை மாற்றவேண்டாம் என்று முடிவெடுத்தனர். அடுத்ததாக ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடங்க, அதில் ஒரு பிரிவினர், தங்கள் சமூகத்தை குறித்த பாடலைப் போட்டுவிட, ஊர் பொதுக்காரியத்தில் இந்த பாடல் கூடாதென மற்றொரு பிரிவினர் எதிர்க்க, பிரச்சனையாகவும், பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தினர்.
அன்று நள்ளிரவு 2 மணிக்கு, கிராமத் துக்கு சம்பந்தமில்லாமல் டாட்டா சுமோவில் வந்த கும்பல், திருமோகூரில் வைக்கப் பட்டிருந்த திருமாவளவனின் பேனர்களில் சாணியடித்து, வி.சி.க. கொடிக்கம்பத்தை வெட்டிச் சாய்த்து, டூவீலர்களையும், கார்களையும் அடித்து நொறுக்கிவிட்டு, சத்தம்கேட்டு வந்தவர்களையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தபடி காரிலேறித் தப்பித்தனர். அதில் மனோஜ் பிரபாகர் என்பவன் பிடிபட, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தியும், எஸ்.ஐ.யும், அவனை வண்டியில் ஏற்றியதோடு, பிடித்துக்கொடுத்த இளைஞர்களின் பெயர்களையும் குறித்துக்கொண்டார். மறுநாளில் காவல் நிலையத்தில் மனோஜ் பிரபாகர் இல்லை. அரிவாள் வெட்டுப்பட்டதில், திருகுமார், பழனிகுமார், செல்வக் குமார், மணிமுத்து ஆகியோர் படுகாயமடைய, மணிமுத்து என்பவர் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்" என்றனர்.
மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையிலிருப்போரைப் பார்க்க வந்த திருமாவளவன், "திருமோகூரில் தலித் குடியிருப்பு, வாகனம் மீது நடைபெற்ற தாக்குதலில் படுகாயமடைந்து 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வி.சி.க. கொடிக் கம்பம், போர்டு உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில். தாக்குதல் நடத்திய 8 பேர் மீதும், பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 36 வாகனங்கள், வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்களைக் கண்டித்து, மதுரை யில் வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக சந்தேகம் எழுகிறது'' என்றார்.
தமிழ்ப் புலிகள் கட்சி செய லாளர் பேரறிவாளன், "இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான மனோஜ் பிரபாகரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவனை காவல்துறையினர், வாகனத்திலிருந்து பாதி வழியிலேயே இறக்கிவிட்டு தப்பவைத்தனர். காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போலீஸார் பெருமளவில் உள்ளனர். கிராமத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருக்குமெனத் தெரிகிறது. தென் மாவட்டங் களில் ஜாதிரீதியிலான இயக்கங்களை ஒன்றிணைத்து சமீபத்தில் இந்துத்வா அமைப் பினர் கூட்டம் போட்டு, பா.ஜ.க. ஆதரவாக நடந்துகொண்டால், தங்கள் அசைன்மெண்ட்டுகளை நிறை வேற்றினால், கட்சி நடத்த பணம் கொடுப்பதாக வகுப்பெடுத் தனர். தென் மாவட்டம் முழுக்க இப்படிச் செயல்பட முடிவெடுத் துள்ளனர்'' என்றார்.
மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் கூறுகையில், "இச்சம்பவத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள்மீது மட்டுமே வழக்குப் பதிந்துள்ளனர். இருதரப்பு இளைஞர்களையும் அப்போதே கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்து கிராமத்துக்கு முழு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். காவல் துறை தவறிவிட்டது. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. மனோஜ் பிரபாகர் மருதுசேனை அமைப்பைச் சேர்ந்தவனில்லை. கிராமத்துக்கு சம்பந்தமில்லாதவர்களால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல் துறையின் அஜாக்கிரதையால்தான் இது நடந்துள்ளது'' என குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தியிடம் கேட்டோம். "வி.சி.க.வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 11 நபர்களைக் கைது செய்துள்ளோம் போலீஸாரால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டதாக சொல்லப்படும் மனோஜ் பிரபாகரன், ஜீப்பிலிருந்து போலீஸாரைத் தள்ளிவிட்டு தப்பிவிட்டான்.
ஆனால் மீண்டும் அவனை மடக்கிப் பிடித்துவிட்டோம். நான் நேர்மையாகத் தான் செயல்பட்டேன். எனக்கு எந்த சாதிய வேறுபாடும் கிடையாது சார். இது என் மனசாட்சிக்கு தெரியும், அதுபோதும்'' என்றார். மதுரையில் கிளம்பியுள்ள புகைச்சல், நெருப்பு, மேலும் பல பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.