"ஹலோ தலைவரே, எடப்பாடியின் டெல்லி விசிட் தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.''”
"ஆமாம்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சில ரகசியக் கோப்புகளோடு போய் சந்திச்சிருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, அங்கே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தி.மு.க. அரசு குறித்தும் சில அமைச்சர்கள் குறித்தும் ஒரு சீக்ரெட் ஃபைலை அவரிடம் கொடுத்து, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார். கூடவே அ.தி.மு.க.வின் பவர் விவகாரத்தில், ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ள வேண்டாம் என்றும், தனக்கு இந்த விசயத்தில் டெல்லியின் முழுமையான ஆதரவு வேண்டும் என்றும் அவர் அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டாராம். அமித்ஷாவோ, எடப்பாடியிடம் அது குறித்து எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்காததோடு, அ.தி.மு.க. பவர் அரசியல் குறித்து சில அட்வைஸ்களைக் கொடுத்து, அவரைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி கொடுத்த கோப்பைப்பற்றி விவாதிக்க, தமிழக கவர்னர் ரவியை டெல்லி அழைத்திருப்பது அரசியல் களத்தை சூடாக்கி இருக்கிறது.''”
"இந்த நேரத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை, அ.தி.மு.க. மாஜி மந்திரி விஜயபாஸ்கர் சந்திச்சிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, ரெண்டு நாளைக்கு முன் தமிழகம் வந்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அ.தி.மு.க. மாஜியான விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசியிருக்கார். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். ஏறத்தாழ 1 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது. அப்போது, அ.தி. மு.க. அரசியல் குறித்தும், தன் மீதுள்ள வழக்குகள் குறித்தும் நட்டாவிடம் விளக்கிய விஜயபாஸ்கர், தி.மு.க. அரசு தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிடுவதாகவும் அவரிடம் புகார் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட நட்டா, மடியில் கனமில்லைன்னா நீங்க எதுக்கு பயப்படணும்னு திருப்பிக் கேட்டாராம்.''”
"விஜயபாஸ்கர் பா.ஜ.க.வில் ஐக்கியமாகப் போகிறார்னு தகவல் கிளம்புச்சே?''”
"நட்டாவை விஜயபாஸ்கர் சந்திச்சார்னதும், அவர் பா.ஜ.க.வில் இணையும் நோக்கத்துடன்தான் நட்டாவை சந்திச்சிருக்கார்னு ஓ.பி.எஸ். தரப்பு தகவலைக் கிளப்பிவிட்டது. நட்டாவின் சந்திப்பு குறித்து விஜயபாஸ்கர் தரப்பில் விசாரித்தபோது, ”அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி டெல்லி சென்றபோது, தானும் டெல்லிக்கு வருகிறேன் என்று விஜய பாஸ்கர் கேட்டார். ஆனால் எடப்பாடியோ, அவரை மறுதலித்து விட்டு சி.வி.சண்முகத்தையும் வேலுமணியையும் மட்டும் அழைத்துச் சென்றார். அதனால் எடப்பாடியிடம், தனக்கும் டெல்லித் தொடர்புகள் இருக்குன்னு காட்டுவதற்காக, ஜே.பி. நட்டாவை விஜயபாஸ்கர் அவர் சந்தித்தார். மற்றபடி பா.ஜ.க., தங்கள் கட்சிக்கு விஜயபாஸ்கரை அழைப்பது உண்மைதான் என்றாலும், அவர் காவிக் கும்பலில் சங்கமிக்க விரும்பவில்லை என்கிறார்கள். அதேநேரம், ஜேபி.நட்டாலிவிஜயபாஸ்கர் சந்திப்பை டெல்லி ரசிக்கவில்லையாம். என்னிடம் சொல்லாமல் விஜயபாஸ்கரை ஏன் சந்தித்தீர்கள்? என நாட்டாவிடம் அமித்ஷா வருத்தப்பட்டார் என்று கமலாலயத் தரப்பே சொல்கிறது.''”
"துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர் பான தமிழக அரசின் மசோதாவுக்கு, ராஜ்பவன் நீண்ட நாட்களுக்குப் பின் விளக்கம் கொடுத்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இப்போதைய கவர்னர் ரவி, தமிழக அரசோடு முரண் போக்கைக் கடைப்பிடித்து வந்த தால், தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அவரது அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவர்களை இனி தமிழக அரசே நிய மிக்கும் என்று சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின். கவர்னரோ, ’நம் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவுக்கு நம்மிடமே அனுமதி கேட்கிறார்களே’ என்ற எரிச்சலில் அந்த மசோதாவைக் கிடப்பிலேயே போட்டுவைத்தார். ஆனாலும் தமிழக அரசு, விடாமல் இது குறித்த நினைவூட்டலை ராஜ்பவனுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டச் சிக்கல் இருக்கிறது என்று ராஜ்பவன், தமிழக அரசுக்கு பதில் அளித்திருக்கிறதாம்.''”
"இந்த சட்டச் சிக்கலைத் தீர்க்க என்னதான் வழி?''”
"இது குறித்தும் சட்ட நிபுணர்களிடம் விசாரிச்சேங்க தலைவரே, அவங்க என்ன சொல்றாங்கன்னா, இப்படி கவர்னரின் அதிகாரத்தை நேரடியாகப் பறிக்க முயன்றால், ஏதேனும் பதிலைச் சொல்லி ராஜ்பவன் இழுத்தடிக்கத்தான் செய்யும். டெல்லியும் அதற்கு இடம் கொடுக்காது. அதனால், கல்வியை ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களின் ஆதரவை தமிழக அரசு பெற வேண் டும். பின்னர் அனைத்து முதல்வர் களும் இணைந்து கையொப்பமிட்ட ஒரு கோரிக்கைக் கடிதத்தை ஜனாதி பதியிடம் கொடுக்க வேண்டும். இப் படி அரசியல் ரீதியாக அணுகினால் தான் உயர்கல்வியையும் பள்ளிக் கல்வியையும் இனியும் சிக்கல் வராமல் காப்பாற்ற முடியும். மற்றபடி வெறும் மசோதாக்களை நிறைவேற்றிக்கொண்டே போவதால் எதுவும் ஆகப் போவதில்லை என்கிறார்கள் அழுத்தமாய்.''”
"தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, ஒன்றிய உள்துறைக்கு, ஒன்றிய உளவுத்துறை கொடுத்த தகவல்களின் படி, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், பாப்பு லர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் முஸ்லீம் அமைப் பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள், அலுவல கங்களைக் குறி வைத்து, சுமார் 90 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது என்.ஐ.ஏ. இதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களை அது கைது செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடிக் கட்டுப்பாட் டில் இயங்கும் இந்த தேசிய புலனாய்வு அமைப்பின் இந்த நடவடிக்கைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இணைந்துதான் ரெய்டில் ஈடுபட்டனர். இந்த ரெய்டும், கைது நடவடிக்கைகளும், நாடு முடுக்க கொந்தளிப்பை உருவாக்கி வருகின்றன. பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.''”
"இந்த நேரத்தில் கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களில் உள்ள பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டி ருக்கின்றன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது. இதற்கிடையே தேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா சென்னை வந்த சமயத்தில், பா.ஜ.க. அண்ணாமலை, கட்சி அலுவலகமான கமலாலயத்தில் கட்சியினருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, சென்னையைச் சேர்ந்த ஒரு துணைத்தலைவர், தமிழகத் தில் நம் கட்சியை வளர்க்கணும்னா, நம்ம கட்சியில் ரெண்டு தலையாவது உருண்டாகணும் என்று சொல்லி பகீரூட்டினாராம் இதன் பின்னரே, அசம்பாவிதங்கள் அதிகரித்திருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறதாம்.''”
"பிறகு?''”
’"இந்த நெருக்கடியான சூழலில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் பேசி, உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருக் கிறார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய இறையன்பு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்யுங்கள். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் கண்காணியுங்கள் என்றெல்லாம் ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டிருக்கிறார். ''”
"குட்கா வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை இரண்டு விதமாக இருப்பதாக காவல்துறையிலேயே டாக் அடிபடுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, குட்கா வழக்கில் சிக்கிய அ.தி.மு.க. மாஜி விஜயபாஸ்கர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது சி.பி.ஐ. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய, சர்வீசில் இருக்கும் அதிகாரிகளான ஐ.ஜி.க்கள் நிர்மல்குமார் ஜோஷி, தினகரன், எஸ்.பி.க்கள் ஜெயகுமார், விமலா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு அது பரிந்துரைத்திருக்கிறதாம். ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இசைவளித்த முதல்வர் அலுவலகம், சர்வீசில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூட முன்வரவில்லையாம். அந்த அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து, உள்துறைச் செயலாளர், முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியும் முதல்வர் அலுவலகம், அமைதி காக்கிறது என்கிறார்கள்.''”
"கொடநாடு விவகாரத்தில் புதிய மூவ்கள் தெரிகிறதே?''”
"கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத் தில், எடப்பாடி தொடர்பாக நடக்கும் விசாரணை கள் குறித்த ஒரு ரகசிய ரிப்போர்ட்டை, உளவுத் துறைத் தலைவரான ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைத்தாராம். ஏற்கனவே கனியாமூர் பள்ளி விவகாரத்தில் இவர் அரசுக்குக் கொடுத்த ‘சாதீய உரசல்’ குறித்த அறிக்கை, லீக் ஆகி, சர்ச்சையை ஏற்படுத்தியது போலவே, இந்த கொடநாடு குறித்த அறிக்கையின் நகலும், சம்பந்தப்பட்ட எடப்பாடி யின் கைக்கே போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால் எடப்பாடி, தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் இது தொடர்பாகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த விவகாரத்தில் தனக்குச் சாதகமான சூழலை எடப்பாடி எதிர்பார்த்திருக் கும் நிலையில், கொடநாடு வழக்கைக் கண் காணித்து வரும் மேற்குமண்டல ஐ.ஜி. சுதாகரை அங்கிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதில், ஏற்கனவே உளவுத்துறையில் இருந்து மாற்றப் பட்ட, ஐ.ஜி. ஆசியம்மாளின் தலைமையில் ஒரு தனிப்படையை அமைத்து, அதனிடம் கொடநாடு விசாரணையை ஒப்படைப்பதற்காகக் காய்கள் நகர்த்தப்படுகிறதாம்.''”
"அது சரிப்பா, தமிழக அரசியல்வாதிகள் சிலர் பெரும் முதலீடுகளுக்கான வழிகளைத் தேடுகிறார்களே?''”
"அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களிடமும், சில தி.மு.க. வின் இன்னாள் அமைச்சர்களிட மும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான கரன்ஸிகள் கைவசம் இருக்கின்றன. இவற்றை அறிந்த, மத்திய அரசின் வரு மானவரித் துறை கடந்த 6 மாதங் களாக அவர்களைக் கண் காணித்து, பல்வேறு தகவல் களைச் சேகரித்திருக்கிறதாம். இதையறிந்து உஷாரான முன்னாள்-இன்னாள் மந்திரிகள் உள்ளிட்ட அரசியல் புள்ளிகள், பல்வேறு இடங்களில், பினாமி கள் மூலமாக பதுக்கி வைத்துள்ள கரன்ஸிகளை முதலீடாக மாற்றத் துடிக்கிறார்களாம்.''”
"நானும் இது தொடர்பாக என் காதுக்கு வந்த தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள, கவனிக்கப்படாமல் இருக்கும் நலிவடைந்த கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியில் தமிழக அரசியல் புள்ளிகள் பலரும் இருக்கிறார்களாம். இதற்காக நேரடியாகப் பத்திரப்பதிவு செய்தால் சிக்கல் என்று, அந்த நிறுவனங்களின் பெயரில் செயல்படும் அறக்கட்டளைகளின் நிர்வாகியாக உள்ளே நுழைந்து, அதன் மூலம் அந்த சொத்துக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அவர்கள் இருக்கிறார்களாம். எத்தனுக்கு எத்தன் என்பது போல், இதையும் மோப்பம் பிடித்துள்ளதாம் வருமான வரித்துறை.''’