யக்கம் எனும் பயிர் செழிப்பதற்கான நாற்றங்கால் தான் தி.மு.க.வின் மாணவ ரணி. ராஜாஜி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டம், 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என தி.மு.கவின் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கே வழி வகுத்தன. துரைமுருகன், வைகோ, காளிமுத்து, ரகுமான்கான், விருதுநகர் பெ.சீனிவாசன், கவிஞர் நா.காமராசன், ம.நடராசன் என மாணவர்களாக இருந்து அரசியலில் புதிய உயரங்களைத் தொட்ட வர்கள் ஏராளம். 1986ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்தார். நவதோயா பள்ளிகள் தொடங்க முனைந்தபோது அதனை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது திமுக மாணவரணி. மொழிப்போர்-கல்வி உரிமைப் போர் போன்ற களங்களில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

dd

கலைஞரும் மாணவப் பருவத்திலேயே தமிழ்க் கொடி ஏந்தி இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியும், மாணவநேசன் கையெழுத்து பத்திரிகையும் நடத்தியே பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார். ஆனால், அவர் தலைமையில் தி.மு.க இயங்கிய காலத்திலேயே கட்சியின் மாணவரணி தேய ஆரம்பித்தது என்பதே கசப்பான உண்மை. மு.க.ஸ்டாலினின் இளைஞரணி, வைகோவின் தொண்டரணி ஆகியவையே களத்தில் முந்தின. 16 அணிகளில் மீதி 42 அணிகள் கவனிக்கப் படாமல் போன நிலையில், புதிய வேர்களை விடக்கூடிய மாணவரணியும் பெயரளவுக்கே இருந்தது. வைகோ தனிக்கட்சி தொடங்கிய பிறகு, இளைஞரணி மட்டுமே தி.மு.க.வில் மக்களுக்குத் தெரிந்த அணியானது.

மாணவரணி வேகம் இல்லாததால், திமுகவின் கோட்டையாக இருந்த கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஐ. போன்ற இடதுசாரி அமைப்புகள் வலுவாக கட்டமைக்கப்பட்டன. அ.தி.மு.க. மாணவரணியும் பலம் காட்டியது. கடந்த சில ஆண்டுகளாக, பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தமிழகக் கல்லூரி- பல்கலைக்கழகங்களில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கல்லூரி மாணவர்களிடம் ஆதரவு உண்டு. இந்நிலையில்தான், சமீபகாலமாக தி.மு.க. மாணவரணி மீண் டும் இயக்கத்தின் நாற்றங்காலாக மாறி வருகிறது.

Advertisment

d

சமீபமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராகவும், கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கொரோனா காலத்திலும் இறுதி யாண்டு தேர்வை நடத்த முயல்வதை எதிர்த்தும், கொரோனாவை தடுக்க பணியாற்றும் மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியாக மரணித்து வருவதை தடுக்காத அ.தி.மு.க. அரசாங்கத்தை கண்டிப்பது, புதிய கல்வி கொள்கைக்கு எதிராக முழங்குவது என தொடர்ச்சியாக தி.மு.க. மாணவரணி இயங்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 200 கல்லூரிகளில் தி.மு.க. மாணவரணியை தொடங்கி அதற்கான தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் என 5 பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்திருப் பது தி.மு.க.வினருக்கே ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த திடீர் வேகம் குறித்து தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்.எல். ஏ.விடம் நாம் பேசியபோது, ""கல்லூரிகளில் பேரவை தேர்தல்கள் நடைபெற்ற போது மாணவர்களின் உரிமைக்காக அந்தத் தேர்தல்களில் தி.மு.க மாணவரணியினர் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்று வந்தனர். ஆனால், 1994ல் ஜெ ஆட்சியில் தமிழக அரசு கல்லூரி பேரவை தேர்தலை நடத்த தடை விதித்துவிட்டது. அதனால் கல்லூரி அமைப்பு களில் தொய்வு ஏற்பட்டது. தற்போதைய எங்கள் தலைவர் அவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புத லின் பெயரில் மாணவரணியை வலிமைப்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி, தி.மு.க. இளைஞரணி யும் மாணவரணியும் இணைந்தே பல போராட்டங் களை நடத்துகிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாணவரணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆலோசனைகளை வழங்கி, ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொள்கிறார். எத்தனை கல்லூரிகளில் தற்போது தி.மு.க. மாணவரணி உருவாக்கப் பட்டுள்ளது?

Advertisment

dmk

எழிலரசன்- தற்போது 150 கல் லூரிகளில் தி.மு.க. மாணவரணி உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பட்டியல் என்னிடம் உள்ளது. அதனை எங்கள் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அறிவிப்பு செய்து வருகிறோம். மேலும் 50 கல்லூரிகளில் மாணவர் அணி உருவாக்கப்பட்டு விட்டது, நிர்வாகிகள் தேர்வு மாநில இணை, துணை செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகள் மூலம் நடைபெற்று வருகிறது. மற்ற கல்லூரிகளிலும் மாணவர் அணி உருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய மாணவ மாணவியர் திமுகவில் உறுப்பினராக ஆர்வம் காட்டுகிறார்களா?

எழிலரசன்- நெல்லை சட்டக்கல்லூரியில் மாணவரணி உருவாக்கப்பட்டு 70 பேர் உறுப்பினர் களாக இணைந்தார்கள். மாணவிகள் வரமாட்டார் கள் என நினைத்து மாணவிகளிடம் கேட்காமல் விட்டுள்ளார்கள். அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி, "எங்களை ஏன் உறுப்பினராக சேர்க்க வில்லை' எனக் கேட்டிருக்கிறார். அவரின் கோரிக்கையை ஏற்று படிவத்தை தந்து அனுப்பிய போது, 74 மாணவிகள் இணைந்தது ஆச்சர்யம். இதனால் அந்த கல்லூரியில் மாணவர் அணி, மாணவிகள் அணி என இரண்டு அணிகள் உள்ளது. இதனை அறிந்து இருபாலர் கல்லூரிகளில் அமைப்பு உருவாக்கும்போது மாணவிகளுக்கு முக்கியத்துவம் தந்து முக்கிய பொறுப்புகளில் அவர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார் தலைவர். இப்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஆர்வமாக மாணவ - மாணவிகள் வந்தார்கள். குறைந்தது 35 பேர், அதிகபட்சம் 150 பேர் என 200 கல்லூரியிலும் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். சராசரியாக தற்போது 10 ஆயிரம் மாணவ - மாணவிகள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திமுக மாணவரணியை உருவாக்க எப்படி ஒப்புக்கொண்டார்கள்?

எழிலரசன் - தனியார் கல்லூரியோ, அரசு கல்லூரியோ, மாணவ - மாணவிகள் தங்களின் கல்வி சார்ந்த தேவைகள் குறித்து மட்டுமே நிர்வாகத் திடம் கோரிக்கை வைக்கப் போகிறார்கள். வேறு நடவடிக்கைகள் கல்லூரிக்குள் இருக்கப் போவ தில்லை. கல்லூரிக்கு வெளியே, அரசாங்கத் தின் நீட் தேர்வு, கல்வி கொள்கை முரண்பாடுகள், கல்வி கட்டணம் நிர்ணயம், நுழைவுத்தேர்வுகள் போன்ற தங்களை பாதிக்கும் விவகாரத்தை எதிர்க்கவும், போராடவும் போகிறார்கள். அதனை ஒரு அமைப்பாக இருந்தே செய்யப்போகிறார்கள். மாணவர் அமைப்பை பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் அனுமதித்தே உள்ளன.

தி.மு.க.வின் பலமான அணியாக இருந்தது மாணவரணியை சேர்ந்த பலர் தி.மு.க.வில் பல முக்கிய பதவிகளுக்கு வந்துள்ளார்கள். பின்னர் மாணவரணி முடங்கிவிட்டது. மாணவரணியில் மாவட்ட, நகர நிர்வாகிகளாக இருப்பவர்கள் கல்லூரி வாசலை பல ஆண்டுகளுக்கு முன்பு மிதித்தவர்கள். இவர்களுக்கு மாணவரணி பொறுப்புகள் தந்ததால்தான் மாணவரணி செயல்படாமல் முடங்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

எழிலரசன் - இப்படியொரு கருத்து நிலவியது, செயல்படாமல் இருந்தது உண்மை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த நிலை கடந்த 2 ஆண்டுகளில் மாறியுள்ளது. 2018ல் கரூரில் நடைபெற்ற மாணவரணிக்கான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், மாணவரணி என்ன செய்ய வேண்டும் என தலைவர் பேசினார். அதன்பின் எங்களது மாணவரணி நிர்வாகிகளை அழைத்து கூட்டங்கள் நடத்தி, முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தோம். 2017ல் சகோதரி அனிதா மரணத்தில், தி.மு.க. கூட்டணியில் அப்போது இருந்த கட்சிகளின் மாணவரணிகள் மட்டுமில் லாமல், கூட்டணியில் சேராமல் இருந்த கட்சிகளின் மாணவரணியையும் அழைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடினோம். அந்த கூட்டமைப்பு இப்போதும் செயல்படுகிறது. தற்போது கல்லூரி களில் நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி நிர்வாகிகளிடம் சூம் மீட்டிங் நடத்தியபோது, பல ஆலோசனைகள் சொன்னார்கள், பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள், இன்றைய மாணவர்கள் நுணுக்கமாக அனைத்தையும் அணுகுகிறார்கள். தலைவர் ஸ்டாலினின் தலைமைப் பண்பையும் தி.மு.க.வின் வரலாற்றுத் தேவையையும் உணர்ந்திருக்கிறார்கள் -என்கிறார் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்த குரலில்.

காலத்திற்கேற்ற வேகத்தை உணராமல் தன் அளவிலும், தலைமையின் அலட்சியத்தாலும் சருகான தி.மு.க மாணவரணி மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. இந்த மின்னணு தகவல் தொழில்நுட்ப யுகத்தில் புதிய அமைப்புகளின் வளர்ச்சி-மத்திய பா.ஜ.க அரசின் தலைகீழ் கல்விக் கொள்கை மாற்றம் இவற்றை எதிர்கொண்டு சவாலை சமாளிக்குமா தி.மு.க?

-து.ராஜா