மத்திய அரசு தி.மு.க. அமைச்சர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் அனைத்துத்துறைகளிலும் நோண்டி வருகிறது. ஒரே சிங்கிள் ஆபரேஷனில் சீனியர் அமைச்சரை கைவைத்த நிகழ்வு தி.மு.க. அமைச்சர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
அமைச்சர் நேருவின் தொகுதி திருச்சி மேற்கு தொகுதி. அங்குள்ள தில்லை கங்கா நகரில்தான் அமைச்சர் நேரு வீடு அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுப் புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இது வருமான வரித்துறையை உசுப்பேற்றி உள்ளது. தில்லை கங்கா நகர் பகுதியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை அமைச்சர் நேருவோடு இணைத்து சந்தேகப் பட்ட வருமான வரித்துறை, அங்குள்ள வங்கி அதிகாரிகளை அழைத்துக் கேட்டது. அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் டி.டி.ஆக எடுக்கப்பட்டு சொத்துகள் வேகமாக வாங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்கள். இந்த நோட்டுக்கள் எல்லாம் உறையூர் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தை நோக்கிச் செல்கின்றன என வருமானவரி புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தன.
அவர்கள் தங்களது கம்ப்யூட்டரில் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்துக்களை வாங்கியவர்கள் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்தபோது, 2000 ரூபாய் நோட்டு செல்லத்தக்கது அல்ல என மத்திய அரசு அறி வித்த பிறகு உறையூரிலிருந்து யார் சொத்து வாங்கினார்கள் என்ற விவரம் வருமானவரித் துறைக்கு வர வில்லை எனக் கண்டுபிடித் தார்கள். வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருமள விற்கு பணப் பரிமாற்றம் நடந்துள் ளது. ஆனால், அது ஐ.பி.யின் கவ னத்துக்கு வரவில்லை. பத்திரப் பதிவு அதிகாரிகள் இந்த பத்திரப் பதிவுகளை மறைத்திருக்கலாம் என உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தையும் வங்கிகளையும் ஒரேநேரத்தில் முற்றுகையிட்டு ‘ரெய்டு’ நடத்தினார்கள்.
அதேபோல் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் உறையூரில் நடந்தது போலவே பத்திரப் பதிவுகள் நூற்றுக்கணக் கான கோடி ரூபாய்களுக்கு நடந்துள்ளதை ஐ.டி. அதிகாரிகள் கண்டுபிடிக்க, அங்கும் ‘ரெய்டு’ நடந்தது. ரெய்டு பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்போது உறையூர், செங்குன்றம் சார் பதிவாளர்கள் கடமை தவறியதாக பணியிடை நீக்கம் செய்தது பத்திரப்பதிவுத்துறை. அத்துடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நூற்றிப்பத்து பேரை கூண்டோடு அதிரடியாக மாற்றம் செய்தது.
உறையூர், செங்குன்றம் ஆகிய சார்பதி வாளர் அலுவலகங்களில் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பத்திரப் பதிவு கள் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்காமல் நடந்துள்ளது என வருமானவரித்துறை அறி வித்தது. இரண்டு சார் பதிவாளர் அலு வலகங்களில் மூவாயிரம் கோடி என்றால், தமிழ்நாடு முழு வதும் உள்ள சார் பதிவாளர் அலு வலகங்களில் எத்தனை ஆயிரம் கோடி முறை கேடுகள் நடந்திருக்கும் எனக் கேள்வி எழுந்தது.
இது பற்றி பத்திரப்பதிவுத்துறை வட்டா ரங்களை விசாரித்தபோது, "இந்த இரண்டு அலுவலகங்களில் தவறு நடந்திருக்கிறது. இதை யாரோ வருமானவரித் துறைக்கு போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர்களை குறிவைத்து இங்கு ரெய்டு நடத்திய வருமான வரித்துறை கடைசியில் அது அதிகாரிகளின் தவறு எனக் கண்டுபிடித்து திரும்பிப் போய் இருக்கிறது. இந்த ரெய்டுகளுக்கும், அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சென்னையைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் இருக்கும் அதிகாரிகள் பல்வேறு சிபாரிசுகளைப் பிடித்து இந்த மாவட் டங்களில் பதவி பெற்றுக்கொண்டு நிறைய கல்லா கட்டுகிறார்கள் என்கிற புகார் உள்ளது. அவர்களை மாற்ற துறை அமைச்சர் மூர்த்தி எடுத்த முடிவு ஐ.டி. ரெய்டுகள் நடந்தவுடன் வெளிவந்தது. இது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்'' என்கிறார்கள்.
மத்திய அரசு தனது முழு அதிகாரத் தில் இன்னும் ஒரு சில மாதங்களே இருக் கப்போகிறது. தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால் மத்திய அரசின் அதிகாரம் செல்லாததாகி விடும். அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வ ளவுக்கு ரெய்டு செய்து தி.மு.க. அமைச்சர்களை ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க வேண் டும் என டெல்லி பா.ஜ.க. தலைமையிலிருந்து ஐம்பது பேர் கொண்ட குழுவை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் இறக்கி யுள்ளார்கள்.
சமீபத்தில் குவாரி உரிமையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அவர்களுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்களைத் தோண்டியதாக போடப்பட்ட அபராதம் குறைக்கப்பட்டது. அதில் ஊழல் நடந் திருக்கிறதா என அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. மின்சார வாரியம், உயர் கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்துத் துறை களையும் ‘ஸ்கேனரில் வைத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
பத்திரப்பதிவுத் துறையில் முறை கேடுகள் நடப்பதைத் தடுக்க மாநில அளவில் ஒரு கமிட்டி அமைக்க அத்துறை முடிவு செய்துள்ளது. இது தவிர அமைச் சர்களின் சொத்து விவரங்களையும் அமலாக்கத்துறை ஆராய்ந்து கொண் டிருக்கிறது. அதன் உச்சமாக சபரீசனை குறிவைத்து அம லாக்கத்துறை தனது முயற்சிகளை தொடர்ந்து கொண்டி ருக்கிறது.
அரசு அலு வலகங்களில் தவறுகள் நடப்பது சகஜம். சிறிய துறைகள் ஆனாலும் தவறு களை எளிதாகக் கண்டுபிடிக்க முடி யாது. இந்த பல வீனத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைக்கிறது. அதை எதிர்த்து மாநில அரசு போராடி வருகிறது. அடுத்த சில மாதங்கள் இந்தப் போராட்டத்தைப் பற்றிய செய்தி கள் நிறைந்த மாதங்களாக இருக்கும். அதனால்தான் செந்தில் பாலாஜி விவகாரத்தை அமலாக்கத்துறைக்கு எதிரான சட்டப் போராட்டமாக சுப்ரீம் கோர்ட் வரை தி.மு.க. கொண்டு சென்றிருக்கிறது. தி.மு.க. மந்திரிகள் மீது மோடி அரசு குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது என்கிறார்கள்” சமூக ஆர்வலர்கள் மற்றும் கூரிய அரசியல் நோக் கர்கள்.
_______________
இறுதிச் சுற்று! தொடரும் கொலைகள்!
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பெருகிவருவதால் ரியல் எஸ்டேட் தொழில் இங்கு அமோகமாக நடந்துவருகிறது. அதே போல தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுக்கும் தொழி லிலும் பல கோடி ரூபாய் பரிமாற்றங்கள் நடைபெறு கின்றது. இதில் ஏற்படும் தொழில் போட்டி கொலையில் வந்து முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் போட்டிக்கான முன்பகையால் பா.ஜ.க.வைச் சேர்ந்த பி.பி.ஜி சங்கர் பூந்தமல்லியை அடுத்த நெசப் பேட்டையில் வெடிகுண்டு வீசி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டான். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் காளிதாஸ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜூலை 6-ஆம் தேதி காலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத் தில் ஆஜராக வந்திருந்த லோகேஷையும் மற்றொரு வரையும் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். லோகேஷ் படுகாயமடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரு கின்றார். சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
-அரவிந்த்