பிரதமர் பூமி பூஜை தொடங்கிவைக்க, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் கலிவரதன் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தானிடம் ராமர் கோவில் கட்டும் பணிக்காக 11 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கே ராமர் கோயில் கட்டுவது போன்றவற்றில் தி.மு.க.விற்கு உடன்பாடில்லை. அப்படியிருக்கையில் செஞ்சி மஸ்தான் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கியது கட்சியினர் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ram temple

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மஸ்தானிடம் கேட்ட போது, “""சாதி மதம் இனம் கடந்து அனைத்து மக்களிடமும் பழகி வருபவன் நான். விவரம் அறிந்த வயதிலிருந்து பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் செல்வேன். என்னைத் தேடி வரும் இந்து மக்களுக்கும் அவர்கள் கோயிலுக்கும் உதவிகள் செய்துவருவதோடு கோயில் திருப்பணிக்காக என்னால் இயன்ற உதவிகளையும் செய்துவருகிறேன். அந்த அடிப்படையில் பி.ஜே.பி. மாவட்ட தலைவர் கலிவரதன் ராமர் கோயில் கட்ட நிதி கேட்டுவந்ததால், அவருக்கு நிதியளித்தேன். திராவிட முன்னேற்ற கழகம் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் சர்ச்சையோ பரபரப்போ எதுவும் இல்லை''’என்கிறார் இயல்பாக.

-எஸ்.பி.எஸ்.