தேனி நகர்மன்றத் தலைவரிடம், கவுன்சிலர் ஒருவர், "எங்களுக்குச் சேரவேண்டிய கமிஷனை எப்ப தருவீங்க?' என பேசிய ஆடியோ லீக்கானதில் மாவட்ட தி.மு.க. தலைமை கடுப்பாக, எதிர்க்கட்சிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன.
தேனி நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கியிருந்ததால் தேனி நகரச் செயலாளர் பாலமுருகனின் மனைவி ரேணு பிரியாதான் நகர்மன்ற தலைவர் என்று ஏற்கனவே பேசி முடிவுசெய்யப்பட்டது. அதனடிப்படையில்தான் பல லட்சங்களை பாலமுருகன் செலவு செய்திருந்தார். திடீரென தலைமை, நகர்மன்றத் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியதைக் கண்டு மனம்நொந்து போய்விட்டனர். இருந்தும் தலைமையின் அறிவிப்பை மீறி தி.மு.க. கவுன்சிலர் ரேணுபிரியா போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக வெற்றிபெற்றார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. அதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தி.மு.க.வினர் விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டுமென்று கூறினார். அதனடிப்படையில் தி.மு.க.வினர் பல பகுதிகளில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனால் ரேணுபிரியா ராஜினாமா செய்யவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த தலைமை, பாலமுருகனின் நகரச் செயலாளர் பதவியைப் பறித்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சியின் முதல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரேணுபிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பாலமுருகன் உட்பட 8 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 அ.ம.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். நகராட்சித் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட 10 தி.மு.க. கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 22 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
முதல் கூட்டத்திற்கு அழைப்பதற்காக தலைவர் ரேணுபிரியா, 29-ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியிடம் பேசிய ஆடியோ வெளியாகி தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சந்திரகலா ஈஸ்வரி, “"ஏற்கனவே பேசியபடி எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்கவேண்டும். அதுவரை கூட்டத்தில் பங்கேற்பதில்லை' என கவுன்சிலர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். தேர்தலுக்கு முன்பே வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியதையும் கொடுக்கவில்லை. கமிஷன், பர்சன்டேஜ் பிரிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டும். இந்தக் கூட்டத்தில் கமிஷன் குறித்து முன்கூட்டியே பேசவில்லை. செல்வம் எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுப்பதாகக் கூறிவிட்டார்''’என கூறுகிறார்.
அதற்கு பதிலளித்த தலைவர் ரேணு பிரியாவோ, “"மொத்த பணமும் தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு, நாங்கள் தரவேண்டிய பணத்தைத் தருகிறோம் எனச் சொல்லியிருந்தோம். பழைய டெண்டர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியாது. தேர்தலின்போது எல்லோருக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்தோம். ஆனால் எங்களின் பதவியே உறுதியில்லாமல் உள்ளது''’என பேசியுள்ளார்.
இதுசம்பந்தமாக தலைவர் ரேணு ப்ரியாவின் கணவர் பாலமுருகனிடம் கேட்டபோது, "60 வருடங்களுக்குப் பிறகு தேனியை தி.மு.க. கோட்டையாக உருவாக்கி, அதன்மூலம் நகர்மன்றத்தை தக்கவைத்திருக் கிறேன். காங்கிரசிற்கு துணைத்தலைவர் பதவி கொடுத்தால்கூட போதும் என்று அவர்களே கூறினார்கள். அதனால்தான் துணைத்தலைவர் பதவியைக் கொடுக்க ஏற்பாடு செய்தோம். அதற்குள் எங்க கவுன்சிலர் செல்வம், தனக்கு சாதகமான சில கவுன்சிலர்களுடன் எதிர்க்கட்சி கவுன்சிலர்களை வைத்து துணைத்தலைவர் பதவியை தக்கவைத்துக் கொண்டாரே தவிர, தலைமை பார்த்து அவரை துணைத்தலைவர் என்று அறிவிக்கவில்லை. கடந்த முதல் கூட்டத்திலேயே "தலைவர் கலைஞருக்கு தேனியில் சிலை வைக்கவேண்டும்' உட்பட பல தீர்மானங்களை நகர்மன்ற கூட்டத்தில் கொண்டு வந்திருக்கிறோம். எதார்த்தமாகப் பேசியதை இப்படி அந்த கவுன்சிலர் ஆடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டி ருக்கிறார்''’என்று கூறினார்.
"எனக்குத் தலைமைதான் நகர்மன்றத் துணைத்தலைவர் பதவி கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் நான் பதவியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறேனே தவிர அந்த ஆடியோ குறித்து எதுவும் தெரி யாது''’என்று கூறினார் வழக்கறிஞரான கவுன் சிலர் செல்வம்.
இதுசம்பந்தமாக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது... “"அந்த வீடியோவில் சம்பந்த மில்லாமல் என்னை தொடர்புபடுத்தி பேசி யிருக்கிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஏற் கனவே தலைமை உத்தரவை மீறி நகரச் செயலாளர் பாலமுருகன் செயல்பட்டதின் பேரில் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தலைவர் பதவியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியும்கூட தொடர்ந்து ரேணுபிரியா தலைவராக இருந்து வருவதையும் தலைமைக்கு சுட்டிக்காட்டி யிருக்கிறேன். தலைமைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்று கூறினார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காகச் செயல்படாமல் தங்களை வளர்த்துக்கொள்ளவே ஆர்வம்காட்டி வருகிறார்கள் என அந்த ஆடியோவை உதாரணம் காட்டி, எதிர்க்கட்சியினர் தி.மு.க.வை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.