அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கெடுக்கும் கோவில் நிகழ்ச்சிகளுக்கு எதிராகக் குமரி மாவட்ட பா.ஜ.க.வினர் நடத்திவரும் மத அரசியல், மாவட்டம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில், அறநிலையத்துறையின் கீழுள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான மனோதங்கராஜ் கலந்துகொண்டு தேரின் வடம்பிடித்து இழுக்க... பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். காவல் கண்காணிப்பாளர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டபடி மனோதங்கராஜ் தேரோட்டத்தில் கலந்துகொண்டார். அவருக்கு எதிராக, "கிறிஸ்தவ ருக்கு இங்கு என்ன உரிமை? மனோதங்கராஜே கோவிலை விட்டு வெளியே போ!' என்று 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கோஷமிட, "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!' என தி.மு.க.வினர் எதிர்கோஷமிட்டனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தர்மராஜ் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள 12 முக்கிய அம்மன் கோவில்களில், மாதந்தோறும் பௌர்ணமி அன்று 108 திருவிளக்கு பூஜை நடக்கும் திட்டத்தை, 14-ம் தேதி, தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் மண்டைக்காட்டில் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைப்பார் என்று அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இதற்கும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, கோவிலை முற்றுகையிடுவோமென்று குளச்சல் டி.எஸ்.பி.யிடம் புகாரும் கொடுத்தனர்.
இதனால் மண்டைக்காட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பலத்த பாதுகாப்பையும் மீறி வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். மண்டைக்காட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்துவதற் கான முயற்சியில் சில அமைப்புகள் இறங்கி யிருப்பதை உளவுத்துறை தெரிவித்ததால், மனோதங்கராஜ் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். இதையடுத்து, நாகர்கோவில் மேயர் மகேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டி லுள்ள கோவிலில், மக்கள் பிரதிநிதியான அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொள்வதில் என்ன தவறு? என்று பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜிடம் கேட்டபோது, "குமரி மாவட் டத்திலுள்ள இந்து கோவில்களில் கேரள முறைப்படி தான் பூஜைகளும், திருவிழாக்களும் நடக்கின்றன. அந்த பூஜை முறைகளை மாற்றுவதற்கு தமிழக அறநிலையத் துறை முயற்சிக்கிறது. மேலும், சட்ட திட்டங் களுக்கு முரணாக, ஆகம விதிகளையும், ஆச்சாரங்களையும் இந்துக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.
வேளிமலை முருகன் கோவில் தேரோட் டத்தை கிறிஸ்தவரான மனோதங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பார் என்று அறநிலையத்துறை நோட்டீஸ் அடித்து வெளியிட்டது. அங்கு இத்தனை ஆண்டு காலம் இப்படியான நடைமுறை இருந்ததில்லை. அறநிலையத் துறையினரும், பக்தர்களும்தான் வடத்தைப் பிடித்து தேரிழுப்பது வழக்கம். இந்து மத நம்பிக்கை யில்லாதவரைக் கொண்டு தேரை எப்படி இழுப்பது? மனோதங்கராஜ் கலந்து கொள்ளலாம், ஆனால் வடம் பிடித்து இழுக்கக் கூடாது என்றுதான் பேச்சு வார்த்தையின்போது சொன்னோம்.
இதேபோல்தான் திருவனந்தபுரத்துக்கு சரஸ்வதி அம்மன் விக்கிரகத்தைக் கொண்டு செல்லும்போது பத்மநாபபுரம் அரண்மனையில் நடக்கும் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில், கேரளா முதல்வராக உம்மன் சாண்டி இருக்கும்போது ஒருமுறை கலந்துகொண்டார். ஆகம விதிப்படி, கிறிஸ்தவரான உம்மண்சாண்டிக்கு அந்த நிகழ்ச்சியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அந்த இடத்தில் அவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக மட்டுமே பார்க்கப்பட்டார். அதேபோல், தேரை வடம் பிடித்து இழுத்ததில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ண னும் உண்டு. அவரை நாங்கள் வரவேற்றோம். அவர் காவித்துண்டு கட்டிக்கொண்டுதான் தேரை இழுத்தார். நாங்கள் தி.மு.க.வினருக்கு எதிர்ப்புக் காட்டவில்லை. மாற்று மதத்தினரைக் கொண்டு தேரை இழுப்பதற்குத் தான் எதிர்ப்புக் காட்டுகிறோம். அறநிலையத்துறை இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்கள் எதிர்ப்பு தொடரும்'' என்றார்.
தி.மு.க. கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மகேஷ் கூறும்போது, "பா.ஜ.க.வினர் தரம்தாழ்ந்து மத அரசியலைக் கையில் எடுத்து நடத்துகின்றனர். மக்கள் பிரதிநிதியான அமைச்சர், கோவில் தேர் வடத்தைப் பிடிக்கக்கூடாது என்று ஆகம விதி சட்டத்தில் இருக் கிறதாயென பா.ஜ.க.வினரைக் காட்டச் சொல்லுங்கள். கோவிலை பா.ஜ.க.வினர் சாமி கும்பிடுவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அரசியல் நடத்தும் இடமாக மாற்றி வருகிறார்கள்'' என குறிப்பிட்டார்.
1982 மண்டைக்காடு கலவரம் போன்று தற்போது மத ரீதியாக அரசியலை முன்னெடுத்து, குமரி மாவட்டத்தில் மதரீதியிலான பிரிவினையை வலுப்படுத்தி, அதன்மூலம் மக்களைத் துண்டாக்கி, அரசியல் லாபம் சம்பாதிக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.