மிழகத்தில் கூட்டணி கட்சி களுடன் இணைந்து இரண்டு தேர்தல்களை சந்தித்த தி.மு.க. கூட் டணியில் சலசலப்புகள் நிலவுவதாக செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. உண்மையில் என்ன நடந்தது என அந்தந்த கட்சிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

முதலாவதாக சி.பி.எம். கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “"தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலவுகிறது. ஆர்ப் பாட்டம், ஊர்வலம் இவற்றுக் கெல்லாம் போலீசார் தடை விதிக்கிறார்கள்''’எனப் பேசினார். அதே மேடையில் பேசிய தோழர் பாலபாரதி, “"அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு சரியான தீர்வை தமிழகக் காவல்துறை எட்டவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விசயத்திலும் அந்த மாணவி எப்படி இறந்தாள்.. ஏன் இறந் தாள்.. கொல்லப்பட்டாளா.. யாரால் கொல்லப்பட்டாள்? என்பதற்கு சரியான விடையை தமிழக காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை''’என்றார். சி.பி.எம். மாநில மாநாட்டில் தி.மு.க.வின் அடிமையாக மார்க்சிஸ்ட் கட்சி பயணிக்கிறது.. இது தவறு என கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதன் எதிரொலியாகவே கே.பாலகிருஷ்ணனும், பாலபாரதியும் பேசினார்கள் என அ.தி.மு.க.வினர் செய்திகளைப் பரப்பினார்கள்.

dd

நாம் தி.மு.க. தரப்பில் கேட்டபோது, “"மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் செந்தொண்டர் ஊர்வலத்தை அனுமதிப்பதில் சில பிரச்னைகள் வந்தது. ஆனால் செந்தொண்டர் ஊர்வலம் சிறப்பாகவே நடந்தது. அதற்கு முன்பாக பைக் அணிவகுப்பு ஊர்வலத்துக்கும் அனுமதி தரப்பட்டது. ஆனால், அதற்கு நேரெதிராக கே.பாலகிருஷ் ணன் பேசுகிறார். அதனால்தான் முரசொலியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளிவந்தது''’என்கிறார்கள். மாநாட்டில் பங்கெடுத்த தேசியத் தலைவர் பிரகாஷ் காரத், “"உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து எந்த ஊர்வல மும் ஆர்ப்பாட்டமும் நடத்தமுடியாது. அதைவிட, தமிழகம் எவ்வளவோ மேல். நாம் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் தொடர்ந்து ஒரே கூட்டணியில் இல்லை. தி.மு.க. அரசு பா.ஜ.க.வை எதிர்த்து, பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கைகளை அம்பலப்படுத்தி நட வடிக்கை எடுத்துவருகிறது. நாம் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே நமது கட்சியின் வலுவை, மக்களது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலம் அதிகரித்துக்கொள்ள வேண்டும். நமது வலுவை அதிகப்படுத்தி நாம் முன்னேறுவதில் கவனம் செலுத்தவேண்டும்''’என்று பேசியிருக்கிறார் என்கிறார்கள் சி.பி.எம். வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேநேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம், வேங்கைவயல் பிரச்னைகளை கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொடுத்துள்ளது. ஆதவ் அர்ஜுன் ரெட்டி, வி.சி.க.வில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சலசலப்பு ஏற்படுத்தும் குரல்களை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து வன்னியரசு, ‘எங்களுக்கு அதிக சீட் வேண்டும்’ என்றார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவ காரத்தில் நியாயமான விசாரணை நடத்தவில்லை என திருமாவளவன் புகார் சொன்னார். அதைத்தொடர்ந்து சட்ட மன்றத்திலும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. போவதற்கான முன் தயாரிப்பு என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு பேஸ்கட் பால் போட்டியில் பந்தை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். அது அந்தப் பந்தை எதிரியின் கூடைக்குள் எறிவதற்காகக் கடத்திச்செல்லும் ‘ட்ரிக்கே தவிர எதிரியின் கையில் பந்தைக் கொடுக்க அல்ல. சட்டமன்றக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொடுப்பது அந்தப் பிரச்னைகள் தொடர்பாக எழும் விவாதத்தில் தங்களைப் பேச வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு தீர்மானத்தைக் கொடுப்பதாலேயே அ.தி.மு.க.வை ஆட்சிக்கு வரவைக்க வேண்டும் என வி.சி.க. நினைக்கிறது என்று சொல்லமுடியாது.

தி.மு.க. இந்தப் பிரச்னைகளில் ஒரு விவாதத்தை விரும்புகிறது. அதனால்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் இதுவரை பதில் சொல்லாமல் இருக்கிறார். முதல்வர் தனது பதிலை சட்டமன்றத்தில் தெரிவிப்பதற்கு இந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் உதவியாக இருக்கும் எனச் சொல்கிறார்கள் தி.மு.க.வினர். 6ஆம் தேதி சட்டமன்றத்துக்கு வந்த அ.தி.மு.க. தலைவர் பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில் ‘"யார் அந்த சார்?'’எனக் கேள்வி எழுப்பும் பேட்ஜை அணிந்து வந்தார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் குரலை அ.தி.மு.க. எதிரொலிப்பதுபோல் நடந்த அந்த நிகழ்வையொட்டி கூட்டணி உடைகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆடுமலையை மாற்றி தமிழிசையை தமிழக பா.ஜ.க. தலைவர் ஆக்கினால் கூட்டணிக்கு நாங்கள் தயார் என்கிற சிக்னலைத்தான் டெல்லி பா.ஜ.க.வுக்கு கொடுத்து வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது அ.தி.மு.க.வை விட்டு மற்ற கட்சிகளைத் தெறித்து ஓட வைத்துவிடும்.

இதற்கிடையே ஆடுமலை தனது தலைவர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள, பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும் அவரது குருவுமான பி.எல்.சந்தோஷின் நிழலான நடவடிக்கைகளை வீடியோ படம் எடுத்துள்ளதாகக் கூறி மிரட்டி வருகிறார். இதில் சிக்கியிருக்கும் பா.ஜ.க. ஆடுமலையைக் கட்டுப்படுத்த அவர் மேல் ரெய்டுகளை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு எப்படி, எந்த வழி போகும் என்று விறுவிறுப்பான அரசியல் நகர்வுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.