தீபாவளி வசூல் வேட்டை நடத்திய அரசு அதிகாரிகளை குறிவைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்ற தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டால் அதிர்ச்சியில் உள்ளார்கள் அரசு அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிவகங்கை கிராம வளர்ச்சி அலுவலர் அலுவலகம், விருதுநகர் ஏ.டி. பஞ்சாயத்து அலுவலகம், திருவாரூர், நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம், கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம், மதுரை, பெரம்பலூர் தாலுகா அலுவலகம், கரூர் வணிக வரித்துறை அலுவலகம், புதுக்கோட்டை வனத்துறை அலுவலகம், செங்கல்பட்டு, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், திருநெல்வேலி மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் என தமிழ்நாட் டில் 27 அரசு அலுவலகங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சுமார் 200 பேர் அக்டோபர் 14ஆம் தேதி அதிரடியாக நுழைந்து ரெய்டு செய்தனர். இதில் திருவாரூர் நெடுஞ் சாலைத்துறை மாவட்ட பொறியாளர் அலு வலகத்தில் ரூ.75 லட்சம், நாமக்கல் நெடுஞ் சாலைத்துறை ஏ.டி. அலுவலத்தில் ரூ.8 லட்சம், கள்ளக்குறிச்சி வேளாண்மைத்துறை ஏ.டி. அலுவலகத்தில் ரூ.4.26 லட்சத்தைக் கைப்பற்றி யுள்ளனர். இப்படி ஒரே நேரத்தில் 27 இடங் களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை களமிறங்கி ரெய்டு செய்ததில் 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இது அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, "அரசு அலுவலகங்கள் எப்போதும் எங்கள் டிபார்ட்மெண்டின் கண்காணிப்பில் இருக்கும். அரசு அதிகாரிகள் குறித்து புகார் வந்தால் உடனே ஆக்ஷனில் இறங்குவதில்லை. அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்த பின்பு, விவகாரம் பெரியதாக இருந்தால் மட்டுமே மேலிடத்தில் உத்தரவு வாங்கி களத்தில் இறங்குவோம். தீபாவளி, பொங்கல் நேரத்தில் ஒவ்வொரு துறையிலும் வசூல் வேட்டை நடக்கும். குறிப்பாக, ஊரக வளர்ச்சித் துறையில் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ. மூலமாக, நெடுஞ்சாலைத்துறை, பொதுப் பணித்துறை போன்றவற்றில் ஏ.இ. மூலமாக ஒப்பந்ததாரர்களிடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தொழிற்சாலை நடத்துபவர்களிடம், டாஸ்மாக் நிறுவனத்தில் சேல்ஸ்மேன்கள், ஒப்பந்ததாரர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், சாராய வியாபாரிகள், போலி மதுபான விற்பனை செய்பவர்களிடமும் வசூல் நடத்துவார்கள். இப்படி நடத்தப்படும் வசூல், துறையின் மாவட்ட உயரதிகாரிகள் கைகளுக்குப் போகும். இப்போதெல்லாம் மிரட்டி லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற புகார்கள் அதிகமாக வருகின்றன. இவற்றை முதலமைச்சர் கவனத்துக்கு உளவுத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அமைச்சர்களிடம் கேட்டுள்ளார், அவர்களில் சிலர் எங்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லியுள்ளார்கள். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில துறைகளில் நோட்டு போட்டு வசூல் நடக்கிறது என்கிற விவரம் தெரிந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு துறையை தேர்வு செய்து ரெய்டு நடத்துங்கள் என முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்கள் டிபார்ட்மென்டுக்கு தகவல் அனுப்பினார்கள். அதன்பின்பே இப்படியொரு ரெய்டு நடத்தப்பட்டது'' என்கிறார்கள்.
இதுகுறித்து இராணிப்பேட்டை மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர் ஒருவர் நம்மிடம், "இங்கு ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், சேர்மன் அப்படின்னு மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கோம். ஆனால் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகள் நாங்கள் சொல்வதை கேட்பதேயில்லை. அதற்கு காரணம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், குறிப்பாக 2017 முதல் 2019 வரை மூன்றாண்டுகள் அதிகாரிகளின் ஆட்சி நடந்தது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அ.தி.மு.க. வேலுமணியின் பினாமி கம்பெனிகள், ஒவ்வொரு பி.டி.ஓ. அலுவலகத்திலும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு 15 ஆயிரம், 20 ஆயிரம் என பில் போட்டு பணத்தை சுரண்டியுள்ளார்கள். இதற்கு அதிகாரிகளும் உடந்தை. வீட்டுமனைகளுக்கு அப்ரூவல், பிளானிங் அப்ரூவலில் லட்சத்தில் சம்பாதித் துள்ளார்கள். எல்லாமே ரெக்கார்டாக உள்ளது'' என்றார்.
ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, "ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், ராணிப்பேட்டை, விஷாரம் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலை களில் "அமைச்சருக்கு தரணும்' என வசூல் வேட்டை நடத்தியுள்ளார்கள். "என்னங்க அடாவடியா கேட்கறிங்க' என சில தொழிற் சாலை உரிமையாளர்கள் கேட்டபோது, "அமைச்சரிடம் பேசறியா?' எனக் கேட் டுள்ளார்கள். கிராமங்களில் செயல்படும் அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் அதிகாரிக்கு தீபாவளி கிப்ட் தரணும் என பல மாவட்டங்களில் தலைக்கு ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் வசூல் செய்துள்ளார்கள். நம்மை பகைச்சிக்கிட்டா அவுங்க அடுத்தமுறை ஆட்சிக்கு வரமுடியாது என சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், சங்கக் கூட்டத்தில் பேசுவது எங்க கவனத்துக்கும் வந்தது, முதலமைச்சருக்கும் சென்றது. மக்களிடம் ஆட்சிக்கு அவப் பெயரை உண்டாக்குகிறார்களே என நொந்துபோய்தான் தலைவர் ரெய்டுக்கு தலையாட்டினார்'' என்றார்.