ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட்டை சென்னை மணலியிலிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மோசடி அதிகாரிகள் பக்கம் சட்டத்தின் பார்வை திரும்பவில்லை.
கடந்த இதழில், "எந்நேரமும் வெடிக்கும்? ஆபத்து விளிம்பில் சென்னை! மோசடி நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.' என்ற தலைப்பில் எக்ஸ்குளுசிவ் ஆதாரங்களுடன் அட்டைப்பட கட்டுரை வெளியியிட்டிருந்தோம். கரூரைச்சேர்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல் நிறுவனத் தின் உரிமையாளர் குமரவேல், விவசாயம் உரம் என்று பொய்சொல்லி கொரியாவிலிருந்து சென் னை துறைமுகம் வழியாக கடத்திய 740 மெட்ரிக் ன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சென்னை மணலியிலுள்ள சாத்துவா ஹை டெக் சரக்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 157 பேர் பலியானதோடு பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்த தைத் தொடர்ந்து நாடுமுழுக்க சர்ச்சையாகி மணலியிலிருந்த 37 கண்டெய்னர்களில் கடந்த-9ந்தேதி 10 கண்டெய்னர்கள் ஹைதராபாத்துக்கும் 11-ந்தேதி 12 கண்டெய்னர்கள் செகந்திராபாத்துக்கும் என ஆந்திரமாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. மீதி, 15 கண்டெய்னர்கள் சென்னை அருகிலுள்ள மணலியில்தான் உள்ளன. மேலும், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 43 மெட்ரிக் டன் காணாமல்போன மர்மம் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் நேர்மையான கஸ்டம்ஸ் அதிகாரிகளோ, “இவ்வளவு, ஆபத்தான வெடிபொருளை சுங்கத்துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்திருக்கவேண்டும். மழையில் கரைந்தது என்கிறார்கள். அப்படியென்றால், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த பைகள் அப்படியேதானே இருக்கும்? ஐந்துவருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட சீலை தற்போது திறக்கும் போது சேதம் (Tamper) இருந்தாலே இதில் ஏதோ கோல்மால் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்..
20 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக கடத்தினாலே கட்டாயம் கைதுசெய்யவேண்டும் என்று சுங்கத்துறைச் சட்டம் சொல்கிறது. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை கடத்திய ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளர் குமரேசனை கைது செய்யாததற்கு காரணம் மிகப்பெரிய அர சியல் புள்ளியின் பினாமியாக இருந்ததுதான்’என்று அதிர்ச்சியூட்டுகிறவர்கள், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை கடத்த முயற்சித்த தற்கு துணையாக இருந்த சென்னை மீனம்பாக்கத்திலுள்ள எம்.எஸ். அண்ட் கோ மற்றும் ஏற்கனவே, ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் குமரேசனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 696 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை கடத்துவதற்கு துணையாக இருந்த சென்னை மயிலாப்பூரிலுள்ள எக்ஸிம் இந்தியா இண்டர்நேஷனல், பாரிமுனையிலுள்ள ஃபோனிக்ஸ் ஷிப்பிங் சர்வீஸ் ஆகிய கஸ்டம்ஸ் ஏஜன்சி நிறுவனங்கள்மீதுகூட சென்னை கஸ்டம்ஸ் விஜிலென்ஸ் இயக்குனரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விசாகப்பட்டினம் வழியாக கடத்தப்பட்ட 500 மெட்ரிக் டன் அம்மோனியத்துக்கு க்ளியர் கொடுத்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் யார் என்பது மறைக்கப்படுகிறது. லெபனான் நாட்டில் நடந்த விபத்தில் பிரதமரே பதவி விலகும் அளவுக்கு சர்ச்சை வெடித்தது. ஆனால், இங்கு இதுகுறித்து கடத்தியவர்கள்மீதே நடவடிக்கை இல்லை.
2015ல் சுங்கத்துறையின் சீஃப் கமிஷனராக இருந்தவர் ரமேஷ், அதற்கடுத்து, பி.கே. தாஸ், அதற் கடுத்து அஜீத்குமார், ராஜன் சௌத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம், விசாரித்தாலே உண்மை வெளியில் வரும். ரமேஷ் ஓய்வுபெற்றுவிட்டார். பி.கே தாஸ் வேர்ல்டு கஸ் டம்ஸ் ஆர்கனைசேஷனில் முக்கிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அஜீத்குமார் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தின் சேர்மன் ஆகிவிட்டார். கடத்தலில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் குமரேசன், துணையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள், ஏஜண்டுகள், அலட்சிய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சி.பி.ஐ. விசாரணை அதிகாரி ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான இவ்வ ளவு பெரிய கடத்தல் புகாரை எஸ்.பி. லெவலில் இருந்த சி.பி.ஐ அதிகாரி நடவடிக்கை எடுக்காமல் கஸ்டம்ஸ் விஜிலென்ஸுக்கு புகாரை மாற்றிவிட்ட திலேயே உள்நோக்கம் இருக்கிறது என்கிறது சி.பி.ஐ வட்டாரம். மணலியில், கொண்டுவந்த கடத்தல் வெடிபொருளை வைக்கும்போதே சுங்கத்துறை அதிகாரிகள் மாநிலக் காவல்துறைக்கு தகவல் கொடுத்து விசாரணை நடத்தியிருந்தால் இதில் நடந்த மொத்த ஊழல் மோசடிகளும் வெளியில் வந்திருக்கும் என்கிறார்கள் நேர்மையான சுங்கத்துறை அதிகாரிகள்.
இதுகுறித்து, 2016-ல் சுங்கத்துறை கமிஷனராக இருந்த ராஜன் சௌத்ரியை தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போதுள்ள கமிஷனர் பார்த்திபன், இணை கமிஷனர் சமாய் முரளி ஆகியோரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். கமிஷனர் பார்த்திப னோ பேச மறுத்துவிட்டார்.
அம்மோனியம் நைட்ரேட் விவகாரம் இன்ன மும் புகைகிறது. இதில் என்னென்ன மோசடிகள் வெடிக்குமோ?
-மனோசௌந்தர்