கடந்த ஜூலை 21-23 நாளிட்ட நக்கீரன் இதழில், கடவுளின் தேசத்தில் வரதட்சணைக் கொலைகள் என்ற தலைப்பில் கேரளாவில் 20 நாட்களில் விஸ்மயா, ஆதிரா, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்ட 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழவேண்டிய உயிரை மாய்த்துக் கொண்ட செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம். இந்த தற்கொலைச் சம்பவங்கள் கேரளாவையே உலுக்கிய நிலையில், இதைத் தடுப்பதற்காக கேரள அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. அந்த சட்டத்திருத்தம், கேரள மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரதட்சணைக்கு எதிரான கேரள அரசின் 10-ம் சட்டப்பிரிவான 1961(NO.28OF1961)-ல் சொல்லப்பட்டிருப்பதை மேலும் கடுமையாக்கி 2021-ன்படி புதிய சட்டத்திருத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் கடுமையான குற்றம். அப்படி கொடுப்பதும் வாங்குவதும் கண்டறியப்பட்டால் அதற்கு 5 வருட சிறைத் தண்டனை அல்லது அதற்கு குறைவான தண்டனையே கிடையாது. மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கூடுதலான ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. அதோடு, ஆரம்ப கட்ட அபராதமாக 15,000 விதிக்கப்படும். தவிர, பெறப்படும் தொகை அல்லது வரதட்சணை சொத்துக்களின் மதிப்பைப் பொறுத்து அபராதத் தொகை கூடுதலாக விதிக்கப்படும். இவ்வளவு வரதட்சணை கொடுக்கவேண்டும் என்று பெற்றோர்களையோ மணமகளையோ நிர்பந்திப்பதைக் கடுமையான குற்றமாக இந்த அரசு பார்க்கிறது. இந்த வரதட்சணையானது, பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாகவோ, மூன்றாம் நபர் மூலமாகவோ அல்லது மணமகளின் உறவினர்கள் மூலமாகவோ பெறப்பட்டாலும் இந்தச் சட்டத்தின் தண்டனை, சம்பந்தப்பட்டவர்கள் மீது பாயும்.
தொடக்க விசாரணையில் வரதட்சணை வாங்கியது உறுதி செய்யப்பட்டால், முதற்கட்டமாக ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதோடு, அதன்பின் நடைபெறும் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனைக் காலமும் அபராதமும் அதிகரிக்கும். கேரள அரசின் அதிகார வரம்பான சட்டப்பிரிவு 10-ன் படி, வரதட்சணை சட்டமான 2004 மற்றும் கேரள அரசின் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும், தற்போதைய இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2021-ன் அமென்மென்ட்படி, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்கான துறையின் இயக்குனருக்கு வரதட்சணை வாங்குவதை கண்காணிக்கும்படியும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் உத்தரவு பிறப் பிக்கப்படுகிறது. அதன் இயக்குநர், இச்சட்டப்பிரிவை மாவட்டத்திலுள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்டத் துறையினரும் தெரிவித்து, இதில் கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று கேரள அரசு இச்சட்டத்தின் இணைச் சட்டமாக (ஒய) பிரிவின் உட்சட்ட மாக வரதட்சணைத் தடுப்பின் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் மேலும் சில ஷரத்துக்கள் பிறப்பிக்கப்படுகிறது.
அதேபோல், ஒவ்வொரு அரசுப் பணியாளரும், தங்களது திருமணத்திற்கு பின்பு "நான் எந்த வழியிலும் வரதட்சணை பெற வில்லை'' என அவரும் அவரின் தந்தை, மனைவி மற்றும் மாமனார் ஆகியோர்களின் கையொப்பங்கள் அடங்கிய அபிடவிட்டை அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் கண் காணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை, வரதட்சணை தடுப்பு தினமாக இந்த அரசு கடைபிடிக்கும். அன்றைய தினம் தனியார் மற்றும் மாநில அரசின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், பிற நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவரும் "வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்'' என்று உறுதி மொழி ஏற்கவேண்டும்.
பினராயின் அடுத்த அதிரடி அறிவிப்பு தான் இந்த வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. புதிதாக அரசுப் பணியில் சேருபவர்கள், நான் வரதட்சணை வாங்க மாட்டேன். பணமாகவோ அல்லது பொருளாகவோ வாங்க மாட்டேன் என்று அரசுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். விசாரணையில் வரதட்சணை வாங்கியது தெரிய வந்தால் உடனே அவர்கள் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். அதற்கான தண்டனையை விதிப்பதோடு, மீண்டும் வேறு எங்கும் அவர்கள் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும் என்ற இந்த உத்தரவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையைச் சேர்ந்தவர்கள், வரதட்சணைக் கொடுமை பற்றிய தகவல்களைக் கண்காணித்து 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களின் இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அவற்றின்மீதான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அந்த இயக்குநர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், அனைத்து மாவட்டக் கலெக்டர்களும் இத்துறைக்கான சிறப்புக் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது இந்த அதிரடிச் சட்டம்.
பினராய் விஜயனின் இந்த அதிரடி அமன்ட்மெண்ட், திருமணமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்திருப்பதோடு, அவர்களின் பெற்றோர் களுக்கும் பெருத்த மனநிம்மதியை வழங்கியிருக்கிறது என்பதே கடவுளின் தேசத்திலிருந்து வரும் நெகிழ்ச்சியான செய்தி.