கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப்புக்கு ஏ.ஆர். ரஹ்மானின் வீடியோ ஆல்பம் என்ற விசிட்டிங் கார்டு கிடைத்தது. அந்த கார்டு மூலம் ஏ.எல்.விஜய்யின் "சைவம்' படம் மூலம் கோலிவுட் ஏரியாவுக்குள் என்ட்ரியானார். அதன்பின் பாண்டிராஜின் "பசங்க-2' படத்திலும் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது.
இடையிடையே ஒன்றிரண்டு மலையாளப் படங்களிலும் தலைகாட்டிய வித்யா பிரதீப்புக்கு தனது "தடம்' படத்தில் வெயிட்டான இன்ஸ்பெக்டர் ரோல் கொடுத்தார் டைரக்டர் மகிழ்திருமேனி. படத்தின் ஹீரோயின் தான்யாஹோப் என்றாலும், அவர் கொலை செய்யப்பட்ட பின், வித்யா பிரதீப்புக்குத்தான் படத்தில் நல்ல ஸ்கோப். உருண்டையான முகவெட்டுடன் நன்றாகவும் நடிக்கத் தெரிந்த வித்யா பிரதீப், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவார் போலயே என சில ஹீரோயின்களும் கடுகடுத்தனர்.
ஆனால் வித்யா பிரதீப்போ ஒரு நல்லெண்ணெய் கம்பெனி விளம்பரத்திலும் பாமாயில் கம்பெனி விளம்பரத்திலும் நடிக்க ஆரம்பித்தார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியலிலும் நாயகியாக நடித்தார்.
என்னடா இது, இந்த ஹீரோயினுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் (நாமளும்தான்) நினைத்துக்கொண்டிருந்த போதுதான் லாக்-டவுன் வந்தது. சினிமா உலகமும் வித்யா பிரதீப்பை மறந்துவிட்டது. ஆனால் வித்யா பிரதீப்போ, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, மூன்றாவது லாக்-டவுன் ஆரம்பித்ததும் ஓப்பனாக பேச ஆரம்பித்தார்.
""தடம்’ படத்துக்குப் பிறகு வரிசையாக ஏழெட்டுப் படங்கள் எனக்கு வந்தது. எல்லாமே முன்னணி டைரக்டர்களின் படங்கள். கதை சொல்ல வந்த அத்தனைபேருமே, கதை சொல்லி முடித்ததுமே நடிப்பைத் தவிர என்னிடம் வேறு எதையோ எதிர்பார்த்து ஜாடைமாடையாகப் பேசினார்கள். சிலரோ ஓப்பனாகவே கேட்க ஆரம்பித்தார்கள்.
இதையெல்லாம் கேட்டு மனம் கலங்கிப்போய் சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்தேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இரண்டு டைரக்டர்கள் மட்டும்தான் யோக்கியமானவர்கள்'' என தனது ஃபேஸ்புக்கில் ஓப்பனாக போட்டுத் தாக்கியிருந்தார் வித்யா பிரதீப்.
வித்யாவிடம் எதிர்பார்த்து போன டைரக்டர்கள், இதைப் பார்த்து கடுப்பாகி வித்யாவுக்கு மிரட்டல் விடுத்ததும் அந்தப் பதிவை நீக்கிவிட்டு சைலண்டாகிவிட்டார். அந்த வித்யா பிரதீப்தான் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக "எக்கோ' என்ற த்ரில்லர் படத்தில் கடந்த வாரம் கமிட்டாகியுள்ளார். செப்டம்பர் இரண்டாவது வாரம் ஷூட்டிங் ஆரம்பமாகும் இப்படத்தை புதுமுக டைரக்டர் நவீன்கணேஷ் டைரக்ட் பண்ணுகிறார்.
கண்டிஷன்ல ஸ்டெடியா இருக்கீகளா வித்யா பிரதீப்?
அப்பவும் இப்பவும்
பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த், ஒன்றிரண்டு தமிழ்ப் படங்களில் துக்கடா கேரக்டர்களில் தலைகாட்டியுள்ளார். "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படம்தான் யாஷிகாவுக்கு முரட்டுத்தனமான பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் பின்னும் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த ஹீரோவுடனும் ஜோடி போட சான்ஸ் கிடைக்காததால்… யோகிபாபுவின் "ஜாம்பி' படத்தில் ஸ்லீவ்லெஸ் பனியன் இத்துனூண்டு சைஸ் ட்ரவுசர் போட்டு இறங்கியடித்து கிறங்கவைத்தார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக கமிட் ஆனார். ஆனால் அந்தப் படம் இப்போது என்ன கண்டிஷனில் இருக்கிறதோ? பட சான்ஸ் கிடைக்குதோ, இல்லையோ கிளாமர் தூக்கலான ஸ்டில்களை சோஷியல் மீடியாக்களில் ரிலீஸ்பண்ணி நான் அப்பவும் இப்படித்தான் இப்பவும் இப்படித்தான் என்ற ஸ்ட்ராங் பாலிஸியுடன் இருக்கிறார் யாஷிகா.
இப்படியே போனா...
"ஜோக்கர்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் முகம் தெரிந்த நடிகையானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் "ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடி போட்டார். படமோ செம ஃப்ளாப். சூர்யாவின் ‘2டி எண்டர் டெயின்மெண்ட்’ பேனரில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து, ஷூட்டிங் போகும் நேரத்தில்தான் ரம்யா பாண்டியனுக்கு லாக்-டவுன் சோதனை வந்தது.
இப்படியே போனா சரிப்பட்டு வராது, லாக்-டவுன் வந்ததும் நல்லதாப்போச்சு’என்ற முடிவுடன் மாடர்ன் காஸ்ட்யூமிலும், பாகுபலி அனுஷ்கா கெட்டப்பிலும் ஸ்டில்களை ரிலீஸ்பண்ணி, ‘ஹலோ டைரக்டர்ஸ் இப்பவாவது என்னைக் கவனிங்க என சிக்னல் போட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
அப்பப்ப இப்படித்தான்...
கேரளாவில் மாடலிங்காக இருந்து மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆனவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. (இப்படித்தான் எழுதணுமாம். லட்சுமின்னு எழுதக்கூடாதாம்). ஐந்தாறு மலையாளப் படங்களை முடித்த பின் ‘ஆக்ஷன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். தெலுங்குப் படங்களில் சான்ஸ் பிடிக்கும் வேலையில் இறங்கியபோதுதான், தனுஷ் ஜோடியாக "ஜகமே தந்திரம்' சான்ஸ் கிடைத்தது. அப்படத்தின் ரிலீசுக்குக் காத்திருக்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அடுத்ததாக மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கிற்கு கிளம்ப ரெடியாக உள்ளார்.
‘அப்பப்ப இப்படிப்பட்ட ஸ்டில்சையும் ரிலீஸ் பண்ணினாத்தான் ஃபீல்டுல நிற்க முடியும் என்ற முடிவுடன் கவுனில் கலக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
-ஈ.பா.பரமேஷ்வரன்