ண்டுக்கு இரண்டு பருவங்களில் (காரி பருவம், குறுவைப் பருவம்) தமிழக அரசு, தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகள் விளையவைக்கும் நெல்லை கொள்முதல் செய்துவருகிறது. தற்போது 2023- 24-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி கிரேடு-ஒன் வகை நெல் குவிண்டா லுக்கு 2023 ரூபாய், ஊக்கத்தொகையாக 107, இதைச் சேர்த்து குவிண்டாலுக்கு 2,130 ரூபாய் விலை, பி-கிரேடு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஊக்கத் தொகையோடு 2,265 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, நெல்லை கொள்முதல் செய்துவருகிறது.

far

இதில் 50 கிலோ எடைகொண்ட ஒரு சாக்கில் 40 கிலோ நெல், அதனுடன் சாக்கு எடை 580 கிராம் சேர்த்து 41 கிலோ கொண்ட மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து எடை போட்டு வாங்கவேண்டும். இப்படி கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 3 பேரை அரசு வேலைக்கமர்த்தி உள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் பணிசெய்யும் ஊழியர்கள் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை சுத்தம் செய்து எடைபோடுவதற்கு ஒரு மூட்டைக்கு 15 ரூபாய் பெறவேண்டும். அந்த பணத்தில்தான் மூட்டைகளை எடைபோடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரவேண்டும். ஆனால் அரசு விதிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுவதுபோல் நெல் கொள்முதல் செய்யும் மையங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் பணத்தை உறிஞ்சுகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 120-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஒரு மூட்டைக்கு 45, 50 ரூபாய் கமிஷனாக கட்டாயப்படுத்தி கையூட்டு பெறு கிறார்கள். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைப் பிடுங்குகிறார்கள். ஒரு கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் ஒரு மூட்டைக்கு 45 ரூபாய் கமிஷனாகத் தரமுடியாது என்ற காரணத்தால், மூன்று நாட்கள் நெல் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிட்டார்கள். இப்படியாக ஊழியர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி அரசாங்கம் நடத்திவருகிறார்கள்.

Advertisment

ff

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி, சுமார் 20 கிராமங்களுக்கு தலைநகரமாக விளங்கிவருகிறது. இந்த ஊரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் இருக்க, அந்த ஊரைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் தமிழரசன் கடும் முயற்சியெடுத்து நெல் கொள்முதல் நிலையத்தைக் கொண்டு வந்துள்ளார். தற்போது குறுவைப் பருவத்திற்காக விளைய வைத்த நெல்லை ஆவினங்குடியைச் சுற்றிலுமுள்ள கொடிக்களம், கொட்டாரம், நெய்வாசல், பட்டூர், கூடலூர், குடிக்காடு, வையங்குடி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவந்து குவித்துவைத்துள்ளனர். ஆனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நெல் கொள்முதல் செய்ய கேட்கும் கமிஷன் தொகையை விவசாயிகள் தரமறுப்பதால் நெல்லை எடைபோடாமல் இழுத்தடிக்கிறார்கள். இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் உருவாகக் காரணமாக இருந்த தமிழரசனிடம் கேட்டோம்.

"இங்கு கொள்முதல் நிலையம் அமைப்பதற் காக மின்சார இணைப்பு, தொழிலாளர்கள் தங்குவதற்கான ஷெட், இட சீரமைப்பு என சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை சொந்தப் பணத்தில் செலவு செய்து கொள்முதல் நிலையம் கொண்டுவரப்பட்டது. சாக்கு எடையுடன் சேர்த்து 40 கிலோ 580 கிராம் மட்டுமே எடை போடவேண்டும். இங்கே ஒரு கிலோ, இரண்டு கிலோ என கூடுதலாக எடை போடுகிறார்கள். இரண்டு கிலோ கூடுதலாக எடை போடுவதால் அதில் 46 ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு. லஞ்சமாக 45 ரூபாய். இப்படி ஒரு மூட்டைக்கு 90 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு நிர்ணயித்த 15 ரூபாய், அதோடு மேலும் ஒரு 15 ரூபாய் என முப்பது ரூபாய் மட்டும் வசூல் செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் 45 ரூபாய் வசூலித்தால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும் என்று லஞ்சத்திற்கு பேரம் பேசுகிறார்கள்.

Advertisment

far

இந்த பிரச்சனை காரணமாக 3 நாட்கள் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. விவசாயிகள் கொண்டு வந்து குவித்துவைத்துள்ள நெல் மழையில் நனைகிறது. இதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. இதை சரிசெய்ய வேண்டிய முதுநிலை மேலாளர், மண்டல மேலாளர் என பல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை தொடர்புகொண்டு இங்கு நடக்கும் கூத்தை எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளுக்கும், லாரிகளுக்கும், குறிப்பிட்ட தொகை கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது என்று லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள் ஊழியர்கள். நெல் கொள்முதல் நிலையம் கொண்டுவந்த எங்களின் கோரிக்கையை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை.

தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகப்படியான அளவு எடை, விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கக் கூடாது என்று வலியுறுத்தினால், இங்குள்ள ஊழியர்கள் சிலர் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளை தனியாகச் சந்தித்து கூகுள்பே மூலம் கமிஷன் தொகையை அனுப்பச் சொல்லி வசூலிக் கிறார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் வாரக் கணக்கில் நெல்லை கொள்முதல் செய்யாமல் கிடப்பில்போடுவார்கள். அவ்வப்போது மழை பெய்வதால் நெல் நனைந்து வீணாகுமே என்று பயந்து, விவசாயிகளும் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களி லும் அரசு வைத்துள்ள விளம்பரப் பலகையில் எவரேனும் லஞ்சம் கேட்டால் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு உடனே புகாரளிக்க வேண்டும் என்று அறிவிப்பு உள்ளது. அந்த அறிவிப்பு வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. அதனால் எந்தப் பலனும் இல்லை''’என்கிறார் தமிழரசன்.

நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்த நெல்லை மீண்டும் சாக்குமூட்டைகளில் கட்டி ஊருக்கு எடுத்துச்செல்லும் பணியிலிருந்த கொடிக்களம் விவசாயி ஞானசுந்தரத்திடம் கேட்டோம். "என்னைப் போல் ஏராளமான விவசாயிகள் இங்கு நெல்லை விற்பதற்கு கொண்டுவந்து குவித்துவைத்தோம். இணைய வழியில்தான் நெல் விற்பனைக்கு பதிவு செய்யவேண்டும்… அதையும் இந்த மையத்திற்கு வந்துதான் செய்யவேண்டும் என்கிறார்கள். இங்கு நெல்லை கொண்டுவந்த பிறகு பதிவுசெய்ய மறுக்கிறார்கள். தினசரி வந்து நெல்லை கொள்முதல் செய்யுமாறு கெஞ்சிப் பார்த்தோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் நெல் நனைந்து வீணாகிறது. நெல்லை எடுத்துச்சென்று தனியார் வியாபாரிகளிடம் விற்கப் போகிறேன். அங்கே விலை குறைவுதான். என்ன செய்வது கொள்முதல் நிலைய ஊழியர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. விவசாயிகளின் நலனை முன்னிட்டு அரசு கொண்டுவந்த திட்டம் பயனில்லாமல் போகிறது''’என நொந்துபோய் கூறுகிறார்.

விவசாயி சேகரோ, "நெல்லை விற்கும் விவசாயிகளிடம் பிள்ளையார் நெல் என்று கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமா சேரும் நெல்லை தனியாக எடைபோட்டு பணம் பார்ப்பார்கள். நெல்லைச் சுத்தம் செய்யும்போது சேரும் கருக்கா நெல்லை விற்று, அதிலும் வருமானம் பார்க்கிறார்கள். இப்படி விவசாயிகளை பல வழிகளிலும் அட்டைப் பூச்சிகளாக உறிஞ்சுகிறார்கள். இதற்கு தீர்வுதான் என்ன?''’என்று மனம் நொந்து கேட்கிறார்.

இதுகுறித்து ஆவினங்குடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சுரேஷிடம் கேட்டோம். “"நாங்கள் விவசாயிகள் யாரிடமும் கூடுதலாக கமிஷன் கேட்கவில்லை. ஊழியர்கள் நெல்மூட்டைகளை எடைபோட வரவில்லை. அதனால் மூன்று நாட்கள் தாமதமானது. வேறு எந்த சிக்கலும் இல்லை''’என்கிறார் சுரேஷ்.

அதிகாரிகளும் ஆளும்கட்சியினரும் கமிஷன் வாங்கி பங்கு போட்டுக்கொள்கிறார்கள். தனியார் வியாபாரி களுக்கும் அரசுக்கும் வித்தியாசமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்திலும்கூட, விவசாயியைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஆதாயம் என்பதே யதார்த்தமாக உள்ளது.