தி.மு.க. கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தின் வெற்றி உறுதி. ஆனால் ஓட்டு வித்தியாசம் உறுதியாகச் சொல்லமுடியாத அளவிற்கு இருக்கிறது என்ற பேச்சு கரைவேஷ்டிகள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, பழனி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்திற்கு அடுத்தபடியாக தலித்துகள், தேவர், பிள்ளைமார், செட்டியார், நாடார், அம்பலம், வன்னியரோடு கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் வசித்துவருகிறார்கள்.
இத்தொகுதியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியும் தி.மு.க. கோட்டையாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற இத்தொகுதியை தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான சி.பி.எம்.க்கு ஒதுக்கியதில் உ.பி.க்களுக்கு மன வருத்தம். இருந்தும் தலைவரின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அமைச்சர்கள் தொகுதிவாரியாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நடத்தி, மக்களிடம் ஓட்டுச் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பிலுள்ள சில உ.பி.க்களிடம் கேட்டபோது, “"இத்தொகுதியில் நான்கு பிரதான கட்சிகள் போட்டி யிட்டாலும் மும்முனைப் போட்டியாகத்தான் இருந்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ஐ.பி.யிடம் போட்டியிட்டு டெபாசிட் வாங்காத திலகபாமா, தற்போது பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதால் எங்க சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது.
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று பலப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்களான ஐ.பி.யும், சக்கரபாணியும் அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை நகரம் முதல் குக்கிராமங்கள் வரை வீடு வீடாகச் சென்று பிட் நோட்டீசுகளைக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். தொகுதியில் யார் அதிகம் ஓட்டு வாங்கித் தருகிறார்களோ அவர்களுக்கு பரிசு கொடுக் கப்படும் என்று புது வியூகத்தையும் அமைச்சர்கள் அறிவித்து உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள். அதனால் எங்களைப் போல் உள்ள பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக ஓட்டு வாங்க வேண்டும் என்ற நோக் கத்தில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்து வரு கிறோம். அமைச்சர்கள் எதிர் பார்ப்பதுபோல் இந்தத் தேர்த லில் இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடிக்குமளவுக்கு திண்டுக்கல் தொகுதியில் அதிக வாக்குகள் வாங்குவோம்''’என்று கூறினார்கள்.
அ.தி.மு.க.வுக்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் மாவட்டம்தான். அப்படியிருந்தும் இத்தொகுதி யை கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ.க்கு ஒதுக்கியதைக் கண்டு ர.ர.க்கள் மனம் நொந்து போனதுடன் தேர்தல் பணியிலும் ஆர்வம்காட்டாமல் இருக்கிறார் கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட் பாளரான முகமது முபாரக் இரட்டை இலையில், அ.தி.மு.க. வாக்குகளோடு சிறுபான்மை ஓட்டுக்களும் தனக்கு விழும் என்ற நம்பிக்கையில் களமிறங்கி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோரின் ஆசியோடு தொகுதிகளில் ஊழியர் கூட்டங்களைப் போட்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று முகமது முபாரக் நம்பிக்கையுடன் கூறிவருகிறார். திண்டுக்கல்லில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளரான முபாரக் பேசும்போது, "எனது அப்பா 2015-ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022-ல் இறந்து விட்டார். அவர்களுக்குப் பதிலாக தந்தையும் தாயுமாக சீனிவாசனும், விசுவநாதனும் உள்ளனர்''’என்று பேச... மேடையில் அமர்ந்திருந்த சீனிவாசன் கண்கலங்கிவிட்டார்.
பி.ஜே.பி. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக திலகபாமா களமிறங்கியிருக் கிறார். லோக்கலில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் திலகபாமாவிற்கு சீட் கொடுத்த அதிருப்தியில் தேர்தல் பணியில் ஆர்வம்காட்டாமல் இருக்கின்ற னர். எனினும் சமூகத் தலைவர் களையும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களையும் திலக பாமா சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தொகுதி முழுக்க ஊழி யர் கூட்டம் போட்டு வேட் பாளரான திலகபாமா அறிமுகப் படுத்தப்படவில்லை. தலைமையி லிருந்து நெருக்குதல் அதிகரிக்க, பி.ஜே.பி.யில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர் கள் பலர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம்காட்டி வருவது பலம்.
நாம் தமிழர் கட்சியில் முதலில் நிரஞ்சனா என்பவரை வேட்பாளராக அறிவித்து தொகுதியெங்கும் போஸ்டர் எல்லாம் ஒட்டினார்கள். இடையில் என்ன ஆனதோ, மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மருத்துவரான கயிலை ராஜா வேட்பாளராக அறிவிக் கப்பட்டிருக்கிறார். வேட்பாளர் மாற்றம் நிகழ்ந்தாலும், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்னும் வேகம் தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றிபெற வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது தொண்டர்களைச் சுறுசுறுப்பாக்கியிருக்கிறது.
தனது வியூகத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் வெற்றிக்குப் பூட்டுப்போடுமா தி.மு.க.?