தர்மபுரி!

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து அனைத்து அரசியல் கட்சியிலும் சீட் ரேஸ் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டது. இத்தொகுதி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) மற்றும் மேட்டூர் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்தாலும், வன்னியர் சமூகமே மெஜாரிட்டி என்பதான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால், எந்த கட்சி போட்டியிட்டாலும் வேட்பாளராக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். நக்சல்கள் வலுவாக இருந்த மண் தர்மபுரி. அதற்கு இங்குள்ள நாயக்கன் கொட்டாய் கிராமமே சாட்சி. அதேபோல, தமிழகத்திலேயே அதிகமாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதியாக தர்மபுரி உள்ளது. விவசாயத்தையே பெரும்பான்மை மக்கள் நம்பியுள்ள நிலையில், வானம் பார்த்த பூமியாக உள்ளதால், வேறு பகுதிகளுக்கு வேலை தேடிச் செல்லும் அவல நிலையில் தான் இங்குள்ள மக்கள் இருக் கிறார்கள்.

dd

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளரான டாக்டர் செந்தில்குமார், பா.ம.க. தலைவரான அன்புமணியை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டுவந்து மக்களிடம் சபாஷ் வாங்கிக்கொண்டு இருக்கிறார். குறிப்பாக, மொரப்பூர் - தர்மபுரி இரயில்வே திட்டத்தை 100 கோடியிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 7,857 கோடியிலும் கொண்டுவந்ததோடு, மலைக் கிராமங்களுக்கு சாலை வசதிகள், பெங்களூர் - தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி, பெண்களுக்கான கழிப்பறைகள் எனத் தான் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், தி.மு.க. தரப்பில், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.மணி, சீட் கனவில் வலம் வருகிறார். கட்சியில் 30 ஆண்டுகால அனுபவத்தோடு பல பொறுப்புகளையும் வகித்தவர். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது பாப்பி ரெட்டிபட்டி இடைத்தேர்தலில் நின்று தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றவர் என்று கட்சியினர் மதிக்கிறார்கள். அதே தோரணையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டும் என்ற நோக்கில், அறிவாலயத்தை அணுகி வருகிறாராம். அதேபோல் பா.ம.க.விலிருந்து தி.மு.க.விற்கு வந்து, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் சத்திய மூர்த்தியும் சீட்டுக்கு மோதுகிறார். இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய அ.தி.மு.க. பழனியப்பனை எதிர்த்து, வெற்றிவாய்ப்பை இழந்தவர் என்பது உபரித்தகவல்.

dd

இவர்களுக்கிடையில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளரான எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரனும் சீட்டுக்கு மோதுகிறார். தனது குடும்ப பின்புலமும் மக்களின் மத்தியில் இருக்கும் பரிச்சயமும், இளைஞர் அணி மாநாட்டுக்கு சிந்திய வியர்வையும் தனக்கு சீட்டைப் பெற்றுத்தரும் என்று இவர் நம்புகிறாராம். உதயநிதியின் பாராட்டையும் பெற்றவர் இவர் என்கிறார்கள்.

அ.தி.மு.க. தரப்போ, தர்மபுரி எங்கள் கோட்டை என்கிறது. முன்னாள் அமைச்சர் கே.பிஅன்பழகன், தன் மகன் சந்திரமோகனை நிறுத்த ஆசைப்படுகிறாராம். எனினும் சந்திரமோகன் இதற்குத் தயங்குவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் அம்மா பேரவை மா.செ.வான வெற்றிவேல், தனது மனைவிக்கு வாய்ப்பு கேட்டுவருகிறாராம். அதேபோல அரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.ஆர்.பசுபதியும் சீட் கேட்டுவருகிறார். தங்கள் கூட்டணியில் பா.ம.க. இணையுமானால், கே.பி.அன்பழகனின் விசுவாசியான நகரச் செயலாளர் பூக்கடை ரவியின் மகனான டாக்டர் அசோகனுக்குத்தான் அந்த சீட் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

பா.ம.க. சார்பில் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான செந்தில் மீண்டும் களமிறங்க நினைக்கிறாராம். அன்புமணி அங்கே நிற்காமல், செந்திலை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் பலரும். ஆனாலும் பா.ம.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் அன்புமணியே அங்கு களமிறங்குவார் என்கிற பேச்சும் அடிபடுகிறது. பா.ஜ.க. தரப்பில் மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கரன் சீட் கோதாவில் இருக்கிறார். அதேபோல் மாவட்ட செயலாளர் முருகனும் சீட் ரேஸில் ஓடிக்கொண்டு இருக்கிறார். எந்தெந்த கட்சியில் யார் யார் சீட் வாங்குகிறார்கள் என்பதும், அவர்களில் யார் வெற்றிபெற்று தர்மபுரியை கைப்பற்றுவார்கள் என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.

Advertisment

dd

கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஊத்தங்கரை(தனி ), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் இதுவரை நடந்துமுடிந்த 17 நாடாளுமன்றத் தேர்தல்களில் 8 முறை காங்கிரஸ் வெற்றிபெற்று தனது கோட்டையாக வைத்திருந்தது. ஆனால் 1991ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இத்தொகுதியில் தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் மாறிமாறி வெற்றிபெற்றுள்ளன. இச்சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சி யான காங்கிரஸுக்கு இத்தொகுதியை ஒதுக்கியது. அத்தேர்த லில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியை 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றிபெற்றார். காங்கிரஸ் கோட்டையான கிருஷ்ணகிரியை 1991க்கு பிறகு மீண்டும் கைப்பற்றியது.

வரவுள்ள தேர்தலிலும் காங்கிரஸே மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதியைக் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் தி.மு.க.வும் இந்தத் தொகுதியைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு தி.மு.க.வினரே கடுமையாக உழைத்தனர் என்றும், மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கினால், இத்தொகுதியில் தி.மு.க.வின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, அ.தி.மு.கவுக்கு சாதகமாகக்கூடும் எனத் தி.மு.க.வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்திவருகின்றனர். எனினும் கட்சித்தலைமை எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவோமென்று கூறுகின்றனர் உடன்பிறப்புக்கள்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பு கிட்டினால் சென்ற முறை நின்று வெற்றிபெற்ற செல்லகுமாருக்கே மீண்டும் வாய்ப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லையாம். சென்ற தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளில், நீண்ட நாள் கோரிக்கையான ஜோலார்பேட்டை -கிருஷ்ணகிரி -ஓசூர் ரயில் பாதைத் திட்டம், மற்றும் ஓசூர் -பெங்களூர் மெட்ரோ திட்டம், மருத்துவக்கல்லூரி, பெங்களூர் -பாண்டிச்சேரி நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதால் நிச்சயம் செல்லகுமாருக்கு தான் மீண்டும் வாய்ப்பு என்கிறார்கள்.

அதே சமயம், தி.மு.க.வே களம்காணும் பட்சத்தில், தி.மு.க. முன்னாள் மா.செ. செங்குட்டுவன் சீட் கேட்கக்கூடும். தி.மு.க.வின் தீவிர விசுவாசியான இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மா.செ. பொறுப்பையும் இழக்க நேர்ந்தது. இந்த சூழலை மாற்றிக் காட்டுவதற்காகவே தலைமையிடம் தனக்கு எம்.பி. சீட் கேட்டுவருகிறாராம். அதேபோல கே.வி.எஸ்.சீனிவாசன் ரஜினி மன்றத்திலிருந்து தி.மு.க.வில் இணைந்ததிலிருந்து உடன்பிறப்புக் களோடு தீவிரமாக களப்பணியாற்றி வருகிறாராம். அந்த வகையில் தனக்கு தலைமை வாய்ப்பளிக்கும் என்று தீவிரமாக நம்புகிறார். மேலும் பி.டி.அன்பரசன், ஆரம்பகாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். பின்னர் தே.மு. தி.க.வில் இணைந்து கிருஷ்ணகிரி மா.செ.வாக இருந்துள்ளார். அதன்பிறகு தே.மு.தி.க.விலிருந்து விலகி, தி.மு.க. மா.செ. மதியழகன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார். அன்றிலிருந்து கட்சியில் அதிதீவிரமாக செயல்பட்டுவருகிறார். மக்கள் மத்தியில் நல்ல பெயரும், மிகவும் பரிட்சயமானவராகவும் இருப்பதால் நிச்சயம் வாய்ப்பு கிட்டும்'' என்கிறார்கள்.

அ.தி.மு.க. சார்பாக, சென்ற முறை தோல்வியுற்ற அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் சதீஷுக்குத்தான் நிச்சயம் சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு மக்களைச் சந்திக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இவர் உறுதியாக இருப்பதால் அ.தி.மு.க.வில் வேறு யாரும் அத்தொகுதியில் போட்டியிட முன் வரவில்லையாம்.

அதேபோல பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். அணி இருக்கும்பட்சத்தில், அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் வாய்ப்பு கேட் டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படியில்லை யென்றால் பா.ஜ.க.வின் மாநில செய்தித் தொடர்பாளராகவும், எக்ஸ் எம்.பி.யாகவும் இருக்கும் நரசிம்மனுக்கே மீண்டும் வாய்ப்பு என்கிறார்கள். இவற்றைத் தாண்டி, வேறு எந்தெந்த கட்சிகளில் யார் யார் சீட்டுக்களைப் பெறுவார்கள் என்பதை சற்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-அ.அருண்

dd